ஆபத்தில் பொருளாதாரம்
முக்கிய சாராம்சம்
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தை கடந்தது. இதுவரை 1,08,702 பேர் இத்தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவால் இதுவரை அமெரிக்காவில்தான் அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு 20,000க்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகி இருக்கின்றன.
பிரிட்டனில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 10 ஆயிரத்தை நெருங்கிவிட்டது.
உலக நாடுகள் அவசரப்பட்டு ஊரடங்கை தளர்த்த வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
• தமிழ்நாட்டில் சனிக்கிழமையன்று மேலும் 58 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
ஐரோப்பிய நாடுகளின் நிலை என்ன?
கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த மூன்றுவார காலமாக சரிந்து வருகிறது.
இந்நிலையில், பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் பலியாவோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கபசுர குடிநீர் என்பது என்ன?அது கொரோனாவை குணப்படுத்துமா?
கொரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், இந்தியாவின் மாற்று மருத்துவ முறைகளில் ஒன்றான சித்த மருத்துவத்தில் கபசுர குடிநீர் ஒரு மருந்தாக முன்வைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் பல இடங்களில் இந்த மருந்தை வாங்க மக்கள் கடைகளில் குவிந்தனர். உண்மையில் கபசுர குடிநீர் என்பது என்ன, அது கொரோனாவை குணப்படுத்துமா, மாற்று மருத்துவ முறைகளில் கொரோனாவுக்கு தீர்வு இருக்கிறதா என்பதெல்லாம் குறித்து மூத்த சித்த மருத்துவர்களில் ஒருவரான கு. சிவராமன், பிபிசியின் செய்தியாளரான முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 909 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 909 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 34 பேர் இறந்துள்ளதாகவும் சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சம் தெரிவித்துள்ளது.
இதனால் இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,356ஆக உயர்ந்திருக்கிறது.
இந்நிலையில், இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று இந்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை அன்று கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோதி வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக ஆலோசனை நடத்தினார்.
அப்போது ஊரடங்கு உத்தரவை நீட்டிக்குமாறு பல மாநில முதலமைச்சர்கள் பிரதமருக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து ட்வீட் செய்திருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், ஊரடங்கை நீட்டிக்க பிரதமர் ஒப்புக் கொண்டதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், ஒடிஷா, தெலங்கானா, மகாராஷ்டிரா போன்ற சில மாநிலங்கள் ஊரடங்கை ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளன.
கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படவேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோதியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
பிரதமர் மோதி வெளியிடவுள்ள அறிவிப்பை பொறுத்து தமிழக அரசு முடிவை அறிவிக்கும் என்று தமிழக தலைமை செயலர் சண்முகம் தெரிவித்தார்.
பிரிட்டனில் என்ன நிலை?
பிரிட்டனில் நேற்று ஒரே நாளில் 917 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். இதனால் பிரிட்டன் மருத்துவமனைகளில் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,875 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து இரண்டாவது நாளாக 900க்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளன.
கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவ பணியாளர்களுக்கு தான் கடமைப்பட்டிருப்பதாக தன் நண்பர்களிடம் கூறியுள்ளார்.
போரிஸ் ஜான்சன் வரும் வாரங்களில் ஓய்வு எடுத்து கொண்டு, உடல் நலம் தேறிய பிறகே பணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில்,தேசிய மருத்துவ சுகாதார பணியாளர்களுக்கு வழங்கும் பாதுகாப்பு உடையில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் தன்னை மன்னிக்க வேண்டும் என அந்நாட்டின் உள்துறை செயலாளர் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 20,000த்தை கடந்தது
கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் அமெரிக்காவில்தான் அதிகம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அங்கு 20,000க்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகி இருப்பதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் கூறுகின்றன.
இரண்டு நாட்களுக்கு முன்னர்தான், எங்கும் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் அங்கு 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
எனினும், இறப்பவர்களின் எண்ணிக்கை சற்று நிலையாகி வருவதாக நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ க்யூமோ தெரிவித்தார்.
நியூயார்க்கில் கடந்த 24 மணி நேரத்தில் 783 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த சில தினங்களாக கிட்டத்தட்ட இதே எண்ணிக்கை தொடர்ந்து நீடிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் இதுவரை 5,20,000 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தொற்றின் மையமாக விளங்கும் நியூயார்க்கில் 1,80,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதும் இதில் அடங்கும்.
அமெரிக்காவில் உள்ள அனைத்து மாநிலங்களும் இத்தொற்றை பேரழிவாக அறிவித்துள்ளன.
எனினும், இத்தொற்றால் புதிதாக பாதிக்கப்படுபவர்கள் மற்றும் மரணங்கள் சற்று குறைந்து வருவதாக தெரிவித்த அமெரிக்காவின் தொற்று நோயியல் தலைவர் அந்தோனி ஃபாசி, இதனால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது என்று தெரிவித்தார்.
ஏப்ரல் 30ஆம் தேதி வரை சமூக விலகல் மற்றும் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களில் 1.6 கோடி அமெரிக்கர்கள் வேலையிழந்துள்ளதோடு, கொரோனா வைரசால் அமெரிக்க பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
நேற்றைய நிலவரம் - சில முக்கிய செய்தித் துளிகள்
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தை கடந்தது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காதான் முதல் இடத்தில் உள்ளது. அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டி உள்ளது.
பிரிட்டனிலும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 10 ஆயிரத்தை நெருங்கிவிட்டது.
தென் துருவத்தில் முதல் முறையாக பிரேசில் நாட்டில் ஆயிரம் மரணம் பதிவாகி உள்ளது.
ஆப்பிரிக்காவில் இதுவரை 10,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அங்கு இதுவரை 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றின் மையமாக ஆப்பிரிக்கா ஆகிவிடலாம் என்ற அச்சமும் இருக்கிறது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒடிஷா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் ஏற்கனவே ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க மாநில அரசுகள் முடிவெடுத்துள்ளன.
தமிழ்நாட்டில் சனிக்கிழமையன்று மேலும் 58பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதுவரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 969. இதில் இறந்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்களும் அடக்கம்.
மாநிலங்களுக்கு பேரிடர் நிதி ஒதுக்குவதில் 15வது நிதிக்குழுவின் வரைமுறையே தவறாக உள்ளது. மற்ற மாநிலங்களுக்கு 120.33 சதவீதம் தமிழகத்திற்கு மட்டும் 64.65 சதவீத நிதி மட்டுமே ஒதுக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோதியிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளா