பிரித்தானியா முடக்கப்படுகிறது : பிரதமர் அறிவிப்பு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 129
24 Mar,2020
கொரோனா வைரஸ் பரவுவதை எதிர்த்துப் போராட கடுமையான புதிய தடைகள் பிரதமரால் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்று இரவில் இருந்து மக்கள் வீட்டிலேயே இருக்கவேண்டும். தமது அத்தியாவசியத் தேவைகள், உடற்பயிற்சி, மருத்துவத் தேவை போன்றவற்றுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவர்.
அத்தியாவசியமற்ற பொருட்களை விற்கும் கடைகள் மூடப்பட வேண்டும் என்றும், ஒன்றாகச் சேர்ந்து வசிக்காத இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடுவது தடை செய்யப்படுகின்றது என்றும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கத்தினால் உயிரிழப்பு எண்ணிக்கை 335 ஐ எட்டியுள்ளநிலையில் இந்தக் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மக்கள் இந்த விதிகளைப் பின்பற்றாவிட்டால், அபராதம் மற்றும் அவர்களைக் கலைந்து செல்லச் செய்வதற்கு பொலிஸாருக்கு விசேட அதிகாரம் வழங்கப்படுகின்றது என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இன்று இரவு 8.30 க்கு தொலைக்காட்சி மூலமாக அறிவிப்பு விடுத்துள்ளார்.
நாட்டு மக்களின் நலனுக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க தொலைக்காட்சி உரையில்;
மக்கள் அடிப்படைத் தேவைகளுக்கு மட்டுமே பொருட்களைக் கொள்வனவுசெய்ய கடைகளுக்குச் செல்லமுடியும்.
மளிகைப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் மருந்தகங்கள் தவிர்ந்த அனைத்து கடைகளும் உடனடியாக மூடப்படவேண்டும்.
நண்பர்களைச் சந்திப்பது தடைசெய்யப்படும். ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே உடற்பயிற்சிக்கு அனுமதிக்கப்படும்.
நூலகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் வெளிப்புற ஜிம்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட அனைத்து வளாகங்களும் உடனடியாக மூடப்படவேண்டும்.
பூங்காக்கள் உடற்பயிற்சிக்காகத் திறந்திருக்கும். ஆனால் மக்கள் கூட்டமாகக் கூடுவதற்கு அனுமதி இல்லை.
திருமணங்கள், ஞானஸ்நானம் மற்றும் ஏனைய விழாக்கள் உட்பட அனைத்துச் சமூக நிகழ்வுகளையும் அரசாங்கம் நிறுத்துகிறது. ஆனால் உயிரிழந்தவரின் இறுதிச் சடங்குகள் அனுமதிக்கப்படும்.
மக்கள் வீடுகளிலேயே இருக்கவேண்டும். ஏனெனில் நாம் செய்யவேண்டிய முக்கியமான விடயம் வீடுகளுக்கு இடையில் பரவும் இந்த நோயைத் தடுப்பதாகும்.
இந்தக் கடுமையான நடவடிக்கைகள் குறைந்தது மூன்று வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்று பிரதமர் அறிவிப்பு விடுத்துள்ளார்.
மக்டோனால்ட்ஸ் மற்றும் நன்டோஸ் உட்பட அனைத்து உணவகங்களும் மூடப்படுகின்றன
பிரித்தானியாவில் உள்ள மக்டோனால்ட்ஸ் மற்றும் நன்டோஸ் (Nando’s) உட்பட அனைத்து உணவகங்களும் இன்று திங்கட்கிழமையுடன் மூடப்படுகின்றன.
கொரோனா வைரஸ் பரவுவது குறித்த அச்சம் அதிகரித்திருக்கும் நிலையில், மக்டோனால்ட்ஸ் நிறுவனம் பிரித்தானியாவில் உள்ள தனது 1,270 உணவகங்களையும் மறுஅறிவித்தல் வரை மூடுகின்றது.
இந்நிலையில் பிரித்தானியாவில் உள்ள தனது 400 உணவகங்களையும் மறுஅறிவித்தல் வரை மூடுவதாக நன்டோஸ் கூறியுள்ளது.
கோஸ்ரா கோப்பி (Costa Coffee), சூஷி உணவகங்களான இற்சு (Itsu) மற்றும் சான்ட்விச் விநியோகிக்கும் சப்வே (Subway) ஆகியவையும் தமது பிரித்தானியக் கிளைகளை இன்றுடன் மூடுகின்றன.
உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் மூடப்படவேண்டும் என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருந்தார். ஆனால் எடுத்துச் செல்லக்கூடிய உணவு (takeaway food) விநியோகத்துக்கு விலக்களிக்கப்பட்டிருந்தது.
எனினும் கொரோனா வைரஸ் வெடிப்புக் காரணமாக ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நல்வாழ்வைப் பாதுகாக்க விரும்புவதாக உணவு விநியோக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கொரோனா வைரஸ் : உயிரிழப்பு எண்ணிக்கை 335
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 335 ஆக உயர்ந்துள்ளது.
உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளார்களின் எண்ணிக்கை 6,650 ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 967 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தலைநகர் லண்டனில் கொரோனா வைரஸ் நோயாளார்களின் எண்ணிக்கை 2,433 ஆகக் காணப்படும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 129 ஆக உள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
லண்டனில் அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ளவேண்டாம் என அரசாங்கத்தினால் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
சமூகங்களுக்கிடையிலான இடைவெளியைப் பேணுவற்காக மக்களைப் பொது இடங்களுக்குச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பூங்காக்கள், தேநீர்- கோப்பி நிலையங்கள், மதுச்சாலைகள், இரவுவிடுதிகள், உணவகங்கள், சினிமா திரை அரங்குகள் முதலான அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக பிரைமார்க் (Primark) நிறுவனம் பிரித்தானியாவில் உள்ள தனது 189 கிளைகளை மறுஅறிவித்தல் வரை மூடுவதாக அறிவித்துள்ளது.
ஜோன் லூவிஸ் (John Lewis) மற்றும் ரிம்ப்சன் (Timpson) போன்ற சில்லறை விற்பனை நிறுவனங்கள் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தமது கிளைகளை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளன.
உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் மூடப்படவேண்டும் என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருந்தார்.