அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு :
17 Mar,2020
அத்தியாவசிய பொருட்களை வாங்க குவிந்த மக்கள்
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 150-க்கும் நாடுகளில் பரவி பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நாட்டில் இதுவரை வைரஸ் தாக்குதலுக்கு 65 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 ஆயிரத்து 485 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அமெரிக்காவில் உள்ள மக்கள் தங்கள் அத்தியாவசிய பொருட்களை வீட்டில் சேமித்துவைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர்.
கலிபோர்னியாவில் உள்ள சூப்பர்மார்க்கெட்டில் வரிசையில் காத்திருக்கும் மக்கள்
அந்நாட்டின் பல்வேறு சூப்பர் மார்க்கெட்டுகளில் குவிந்துவரும் மக்கள் பல நாட்களுக்கு தேவையான பொருட்களை நீண்ட வரிசையில் நின்று வாங்கிச்செல்கின்றனர். இதனால் சூப்பர் மார்க்கெட்டுக்கு வெளியே மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. மேலும், அத்தியவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அச்சமும் நிலவுகிறது.
அமெரிக்காவில் கொரோனா பரவியுள்ள மாகாணங்கள் விவரம்:
வாஷிங்டன் – 42 பலி, 769 பேருக்கு பாதிப்பு
நியூயார்க் – 3 பலி, 729 பேருக்கு பாதிப்பு
கலிஃபோர்னியா – 6 பலி, 371 பேருக்கு பாதிப்பு
கொலரடோ – 1 பலி, 131 பேருக்கு பாதிப்பு
ஃபுளோரிடா – 4 பலி, 155 பேருக்கு பாதிப்பு
மாசசூசெட்ஸ் – 164 பேருக்கு பாதிப்
கொரோனா தடுப்பு மருந்தை பரிசோதிக்கும் பணியை இன்று தொடங்குகிறது அமெரிக்கா?
சீனாவில் உருவாகி பெருமளவில் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளையே அச்சுறுத்திக்கொண்டு இருக்கிறது. உலக அளவில், கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 6000-ஐ தாண்டி உள்ளது. அமெரிக்காவில் மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் பல்வேறு நாடுகளின் மருத்துவ நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். வல்லரசு நாடான அமெரிக்காவும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை இன்று (திங்கள் கிழமை) அமெரிக்கா பரிசோதித்து பார்க்க உள்ளதாக அமெரிக்காவின் மூத்த சுகாதாரத்துறை அதிகாரி கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பரிசோதனை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
சியாட்டில் உள்ள கைசர் பெர்மனண்டே வாஷிங்டன் சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற இருக்கும் இந்த சோதனைக்கு தேசிய சுகாதார நிறுவவனம் நிதியுதவி செய்துள்ளதாகவும் அந்த சுகாதார அதிகாரி குறிப்பிட்டார். கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை முழுமையாக சோதனை செய்து சரிபார்க்க ஒரு வருடம் முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என்று அமெரிக்க பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.