மாதம் தோறும் சிவராத்திரி வந்தாலும் கூட மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி நாளில் வரும் மகா சிவராத்திரிக்கு சிறப்புகள் பல உண்டு. அந்த வகையில் மகா சிவராத்திரியை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு பார்ப்போம் வாருங்கள்.
பகவான் விஷ்ணுவின் கையில் உள்ள சக்ராயுததிற்கு எவ்வளவு சக்தி உண்டு என்பது நாம் அறிந்ததே. சிவனை நோக்கி சிவராத்திரி அன்று பகவான் விஷ்ணு கடும் தவம் இருந்து அதன் பலனாக அந்த சக்ராயுதத்தை பெற்றார் என்று கூறப்படுகிறது.
பிரம்மாவும், விஷ்ணுவும் சிவபெருமானின் அடி முடியை தேடி செல்கையில் சிவபெருமான் நெருப்பு பிழம்பாய் விஸ்வரூபம் எடுத்து நின்றதும் மகா சிவராத்திரி அன்று தான் என்று கூறப்படுகிறது.
ஊழிக்காலத்தால் உலகம் அழிந்துவிட, மீண்டும் இந்த உலகம் இயங்க வேண்டும் என்ற நல் எண்ணம் கொண்ட அன்னை பரமேஸ்வரி, சிவபெருமானை நோக்கி கடும் விரதம் இருந்து அவர் உடலில் சரிபாதியை பெற்றது மகா சிவராத்திரி அன்று தான் என்று புராணம் கூறுகிறது.
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த சமயத்தில் அதில் இருந்து வெளிப்பட்ட நஞ்சினை சிவபெருமான் உண்டு இந்த உலகை காத்த கதை நாம் அறிந்ததே. இதன் காரணமாக தேவர்கள் சதுர்த்தசியன்று அன்று சிவனை வணங்கி அவருக்கான பூஜையை செய்தனர். அந்த நன்னாளே மகா சிவராத்திரி என்று சிலர் கூறுவதுண்டு.
மகா சிவராத்திரியில் சிவாலயங்களில் நடைபெறும் நான்கு கால பூஜை!
மாசி மாதத்தில் தேய்பிறை காலத்தில் வருகிற ஒரு அதி அற்புத நாளாக மகா சிவராத்திரி தினம் இருக்கிறது. முதல் நாளன்று ஒருவேளை உணவு உண்டு, சுக போகங்கள் அனுபவிக்கும் எண்ணங்களையும், செயல்களையும் தவிர்த்து மனதார சிவனை நினைத்து வழிபடவேண்டும்.
சிவராத்திரி தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரிய உதயத்தின் போது சூரிய பகாவானை வணங்கிய பின்பு, அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சிவபெருமானை வணங்க வேண்டும். கோயிலில் வழிபாடு முடிந்து வீட்டுக்கு வந்தவுடன், பூஜையறையில் சிவராத்திரி பூஜை செய்வதாற்கான இடத்தைச் நன்கு சுத்தம் செய்து, பூமாலைகள், தோரணங்கள் கட்டி அலங்கரிப்பது நல்லது.
நண்பகலில் நீராடி, உங்கள் வீட்டிலேயே சிவபெருமானுக்கு உச்சி கால பூஜைகளை முடித்து விடவேண்டும். பின்பு உங்கள் வீட்டருகில் இருக்கும் கோயிலுக்கு சென்று அங்கு நடைபெற வேண்டிய சிவராத்திரி பூஜைக்கான மலர்கள், பழங்கள், இளநீர், சந்தனம், விபூதி மற்றும் இதர பூஜை பொருட்களை தந்து விட்டு மீண்டும் வீடு திரும்ப வேண்டும். மறுபடியும் நீராடி, மாலை நேர பூஜைகளை முடித்துவிட்டு, முன்பு பூஜையறையில் சுத்தம் செய்து அலங்கரிக்கப்பட்ட இடத்தில் ஓர் உயர்ந்த பீடத்தில் சிறிய அளவில் சிவலிங்கத்தை வைத்து முன்னிரவு தொடங்கி நான்கு ஜாமங்களிலும் சிவ மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் துதித்து பூஜைகள் செய்ய வேண்டும்.
நான்கு கால சிவபூஜையில் அந்தெந்த பூஜைக்கேற்றவாறு வஸ்திரம், மலர்கள், மாலை, நைவேத்தியங்களை சிவ லிங்கத்திற்கு படைத்து பூஜை செய்ய வேண்டும். திரிகரண சுத்தி மற்றும் ஆச்சாரமாக இத்தகைய சிவ பூஜைகளை செய்ய இயலாதவர்கள். சிவாலயங்களில் நடைபெறும் நான்கு கால பூஜைகளில் கலந்துகொண்டு, சிவனை வழிபட்டு சிவனருள் பெறலாம்.
அன்று இரவு முழுவதும் சில சிவன் கோயில்களில் சிவபுராண உபன்யாசம் நடைபெறும். அந்த உபன்யாசத்தை கேட்பதால் புண்ணிய பலன் பெருகும். மேலும் உங்கள் வீட்டிலேயே தேவாரம், திருவாசகம், சிவபுராணம், சிவ ஸ்தோத்திரங்கள் முதலானவற்றைப் படிப்பதோ அல்லது யாரையாவது படிக்கச் சொல்லி கேட்கலாம் அல்லது அமைதியாக சிவ மந்திரங்களை சொல்லி சிவ தியானம் செய்யலாம்.
மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரியின் சிறப்புகள்!
வருடத்தில் எத்தனையோ ராத்திரிகள் வந்தாலும் மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி சிறப்பு வாய்ந்தது. அன்றைய தினம் கோள்களின் அமைப்பு இயற்கையாகவே உயிர்சக்தியை மேல்நோக்கி எழும்பச் செய்கிறது.
அதனால் அன்று முழுவதும் (இரவு 12:00 முதம் 6:00 வரை) ஒருவர் விழிப்புடன் இருந்தால் இயற்கையாகவே நம்மில் இருக்கும் உயிர்சக்தியும் மேல்நோக்கி நகர்ந்திடும். ஆன்மீகவாதிகளும், சித்தர்களும் கூறி உள்ளனர்.
சிவராத்திரி அன்று சிவனுக்கு பிடித்த மந்திரமான “ஓம் நமசிவாய” மந்திரம் ஜபித்து முக்கண் முதல்வனை வணங்கினால் நாம் நினைத்ததை பெறலாம் என்பது ஐதீகம். சிவம் என்றால் மங்களம் என்று பொருள். சர்வ மங்களங்களையும் அருளும் அற்புதமான திருநாள், சிவராத்திரி என்று ஆன்றோர்கள் கூறியுள்ளனர்.
சிவராத்திரியன்று சிவ வழிபாட்டில் ஈடுபட்டால் வாழ்வில் துன்பங்கள் நீங்கி இன்பம், பெறலாம் என்பது ஐதீகம். சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும் என்பது நம்பிக்கை.
சிவராத்திரி விரதத்தால் நமது புலன்களை வென்று மனதை அடக்கி நீண்ட ஆயுள், உடல் ஆரோக்கியம் பெறலாம். பக்தர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து சிவனை வழிபடுவதே இந்த நாளின் விஷேசம் ஆகும்.
மகா சிவராத்திரியன்று முறைப்படி விரதம் இருந்து சிவனை வழிபட்டால் கோடி பிரம்மஹத்தி தோஷம் விலகும். காசியில் வீடு பேரடைந்த பலன் கிடைக்கும். சகல செல்வங்களும் மகிழ்ச்சியும் வந்து சேரும் எனக் கூறப்படுகிறது.
மகாசிவராத்திரி விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் குளித்து விட்டு மறுநாள் வரை ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் விரதம் இருந்து சிவனை வழிபடவேண்டும். விரதம் இருக்க முடியாதவர்கள் விஷேச பூஜை அபிஷேகங்களை கண்டு களிக்கலாம். பால், பழம் மற்றும் தண்ணீர் மட்டுமே குடித்து நாள் முழுவதும் இருக்கலாம். பால், தயிர், நெய், தேன் போன்ற பூஜை பொருட்களைக் கொடுத்து வழிபடலாம்.