16 பேரால் சீரழிக்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு!
15 Feb,2020
உறவினர்கள் 16 பேரால் சீரழிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 சிறுமிகளில் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோரின் ஆதரவு இன்றி பாட்டி வீட்டில் வளர்ந்து வந்த இளம் பிஞ்சுகளை சீரழித்த மனித மிருகங்களுக்கு உயர்ந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திண்டிவனம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். இரண்டு பேரும் வேறு நபர்களை திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர்களின் 2 பெண் குழந்தைகளும் தாய்வழி பாட்டி வீட்டில் வளர்ந்து வந்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஒருநாள் இரண்டு சிறுமிகளில் ஒருவர் பள்ளியில் மயங்கி விழுந்துள்ளார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உடலில் காயங்களைப் பார்த்து விசாரித்துள்ளனர்.
அப்போதுதான், பாட்டி வீட்டில் தங்கியிருக்கும் அந்தப் பிஞ்சுகள் இருவரையும் அவர்களது உறவினர்கள் 16 பேர் சேர்ந்து தொடர்ந்து பல நாட்களாக பாலியல் இச்சைக்கு உட்படுத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து பள்ளி நிர்வாகம் சார்பில் விழுப்புரம் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக சிறுமிகளின் சித்தப்பாக்கள் ரமேஷ், மகேஷ், உறவினர்கள் ரவிக்குமார், அருண் குமார், அஜித்குமார், பிரபாகரன், தீனதயாளன், பிரசாந்த், சிறுமிகளின் தாத்தா துரை, உறவினர் மோகன் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதன் பின்னர் அடுத்தடுத்து மீதமுள்ள ஆறு பேரும் கைதாகினர். இவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட போதிலும் தீபாவளி சமயத்தில் ஜாமீனில் வெளியே வந்தனர். வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்த போதே, தன்னுடைய குழந்தைகளை அழைத்துக்கொண்டு சிறுமிகளின் தாய் சென்னைக்கு இடம்பெயர்ந்தார்.
சென்னையில் குடியிருந்த 2 சிறுமிகளில் 7 வயதுச் சிறுமிக்கு வியாழக்கிழமை இரவு திடீரென வாந்தி ஏற்பட்டது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமியைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் தெரிவித்தனர். சிறுமியின் மரணத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது