வவுனியாவில் விபத்து - 3 பிள்ளைகளின் தாய் பலி - இருவர் படுகாயம்
06 Feb,2020
வவுனியா – கண்டி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் தாய் ஒருவர் பலியானதுடன் மாணவன் உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (05) மதியம் 2.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்திற்கு முன்பாக பட்டா ரக வாகனத்தினை சாரதி பின்நோக்கி செலுத்திய சமயத்தில் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வவுனியா நகரிலிருந்து கண்டி வீதியுடாக பயணித்துக்கொண்டிருந்த இரு துவிக்கரவண்டிகள் மீது மோதுண்டு விபத்துக்குள்ளானது.
விபத்தில் துவிச்சக்கர வண்டியில் தனது 7 வயது பாடசாலை மாணவனை ஏற்றிச்சென்ற இளம் தாய் உட்பட பாடசாலை மாணவனும் மற்றுமொரு பெண்ணும் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் சிகிச்சைப் பலனின்றி குறித்த தாய் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ச.புஸ்பராணி (வயது 36) என்ற 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யாழ் பெண் ஒருவர் உட்பட இருவருக்கு கொரோனா தொற்று?
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் பெண் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண் வவுனியாவைச் சேர்ந்தவர் எனத் தெரியவருகின்றது.
குறித்த பெண்ணுக்கு பெரியளவு நோய் தாக்கங்கள் இல்லை எனவும், அவருடைய இரத்த மாதிரி சோதனைக்கு உட்படுத்திய பின்னரே, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா இல்லையா என்பது பற்றி தெரிவிக்க முடியும் எனவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஜமுனாநந்தா தெரிவித்தார்.
இதேவேளை, சீனாவில் இருந்து இலங்கை வந்த மாணவி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படுகின்றது.
குறித்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மொனராகலை பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் இன்று மாலை பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவி சீனாவிலுள்ள பல்கலைக்கழகத்தில் படித்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர் இலங்கை வந்துள்ளார்.
மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், மேலதிக பரிசோதனைக்காக பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.