சீனாவிலிருந்து பரவும் கரோனா வைரஸ் தாக்கினால் என்ன நடக்கும்?
27 Jan,2020
சீனாவில் கரோனா என்ற புதிய வைரஸ் தாக்கியதால் 9 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 400-க்கும் அதிகமானோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளனர் எனச் சீன அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த வைரஸ் தொற்று ஜப்பான்,
அமெரிக்கா, தைவான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது.
சீனாவின் வூஹான் பகுதியில் உள்ள 59 நபர்கள் ஒரு விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் அது என்ன வகையான பாதிப்பு என்பதைக் கண்டறியமுடியாமல் இருந்த நிலையில், சீன ஆராய்ச்சியாளர்கள் அந்த நோய்க்குக் காரணம் கரோனா என்ற வைரஸ் என்று கண்டறிந்துள்ளனர்.
ஒரு கோடிக்கும் அதிகமான நபர்கள் வாழும் அந்த வூஹான் பகுதியில் இந்த நோய் முதன்முதலாகச் சிலரில் கண்டறியப்பட்டுள்ளது . பாதிக்கப்பட்ட நபர்கள் வூஹான் நகரில் உள்ள விலங்குகள் விற்கப்படும் ஒரு சந்தையில் வேலை செய்பவர்கள் என்பதால், இந்த வைரஸ் ஏதேனும் ஒரு விலங்கிலிருந்து பரவியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது .
கரோனா வைரஸ் பரவியதாக நம்பப்படும் வூஹான் நகரின் விலங்குகள் சந்தை.
அந்த சந்தையில் உயிருள்ள மீன்கள், பறவைகள் மற்றும் மற்ற விலங்குகள் விற்கப்பட்டுள்ளன. நோய் பரவியதையடுத்து அந்த சந்தையை வூஹான் நகரின் நிர்வாகம் மூடி, அங்கு நோய் பரவாமல் இருப்பதற்கான மருந்துகளைத் தூவியுள்ளது.
கரோனா வைரஸ் என்றால் என்ன?
இந்த வைரஸின் மென் திரையிலிருந்து வெளி வரும் முட்கள் போன்ற பாகங்கள் சூரியனிலிருந்து வெளி வரும் கதிர்களைப் போன்ற தோற்றம் தருவதால் இதற்கு கரோனா எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் சூரியனிலிருந்து வெளி வரும் கதிர்களுக்கு கரோனா என்ற பெயர் குறிப்பிடத்தக்கது. இந்த கரோனா வைரஸ், விலங்குகள் மற்றும் மனிதர்கள் என இருவரையும் தாக்கக்கூடியது. இவை தாக்கினால் சாதாரணமாக சளி பிடிப்பது முதல் மிக மோசமான சுவாசக் கோளாறு வரை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 2003-ஆம் ஆண்டு இதே தன்மைகொண்ட சார்ஸ் என்ற வைரஸால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட 800 நபர்கள் உயிரிழந்தனர்.
இந்த கரோனா வைரஸ் தாக்கினால் மிகக் கடுமையான காய்ச்சல் ஏற்படும். மேலும் சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படும். இந்த நோயின் தொடக்கத்தில் காய்ச்சலும், சளியும் மட்டும் ஏற்படுவதால் அதைக் கண்டறிய கஷ்டமாக இருக்கும். 2 வாரங்களுக்குப் பிறகே நோயின் தீவிரத்தன்மை தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதனால் இறப்பு ஏற்படுமா என இதுவரைத் தெரியவில்லை. இதுவரை கரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்த 9 நோயாளிகளில் சிலருக்கு மற்ற பிரச்சனைகளும் இருந்ததால், கரோனா வைரஸ் தாக்கினால் உயிரிழப்பு ஏற்படுமா என்பது இதுவரை தெரியவில்லை.
இது ஒரு நபரிலிருந்து மற்றொரு நபருக்குப் பரவும் என்பதையும் சீன அரசு தெரிவித்துள்ளது. அது மட்டுமில்லாமல் இது அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள சிலருக்கும் பரவியுள்ளதால் இது உலக அளவில் பரவும் ஒரு நோயாக மாறுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்த வைரஸ் எதிலிருந்து பரவுகிறது என்பது இதுவரை சரிவரத் தெரியவில்லை. ஆனால் இவை விலங்குகளிலிருந்து மட்டுமே பரவுவதாக தற்போது நம்பப்படுகிறது. இதே வகை வைரஸான ‘சார்ஸ்’, உயிருள்ள விலங்குகள் விற்கப்படும் சந்தைகளிலிருந்தே பரவியதால் இந்த கரோனா வைரஸும் அப்படியே பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சீனா சென்றுள்ள தங்கள் நாட்டு மக்களுக்கு விலங்குகள் விற்கப்படும் சந்தைகள் மற்றும் கிராமங்களில் உள்ள விலங்குகளைத் தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்தியுள்ளன.
இந்நிலையில் இன்று உலக சுகாதார நிறுவனம் இந்த கரோனா வைரஸ் மூலம் ஏற்படும் நோயைச் சர்வதேச அளவிலான அவசர நிலையாக அறிவிப்பது குறித்து ஆலோசனை செய்ய அவசர கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளது.
இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின், தென் கிழக்காசியப் பிராந்தியத்தின் அவசரக்கால இயக்குநர், மருத்துவர் ரோடெரிக்கோ ஆஃப்ரின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்த வைரஸ் எவ்வாறு பரவுகிறது, இதனுடைய தீவிரத்தன்மை எப்படி இருக்கிறது, நோயாளிகளுக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்பது குறித்த எந்த விவரமும் சரிவர இதுவரை தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அதே போல் இது ஒரு நபரிலிருந்து மற்றொரு நபருக்குப் பரவுமா என்பதற்கும் போதுமான ஆதாரங்கள் இதுவரை இல்லை எனவும் ஆஃப்ரின் தெரிவித்துள்ளார். மேலும் இன்னும் சீனாவின் மற்ற பகுதிகளுக்கும் மற்ற நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவலாம் எனவும் ஆஃப்ரின் தெரிவித்துள்ளார்.
விமானநிலையங்களில் ,பயணிகள் சோதனை செய்யப்பட்ட பின்னே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.