போதை மாத்திரைகள்! -சென்னையில் சிக்கிய `டியோ’ டேவிட் கும்பல்
14 Jan,2020
வழிப்பறி சம்பவங்கள் நடந்த நுங்கம்பாக்கம், தி.நகர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தபோது, இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பல் என்பதைப் போலீஸார் கண்டறிந்தனர். சென்னை சூளைமேடு அப்துல்லா தெருவைச் சேர்ந்தவர், ராகேஷ். இவர், நுங்கம்பாக்கத்தில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 10-ம் தேதி பணி முடித்து தனியாக நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது, ராகேஷை பைக்கில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, செல்போனைப் பறிக்க முயன்றது.
அப்போது நடந்த மோதலில், வழிப்பறிக் கும்பல் ராகேஷை அரிவாளால் வெட்டிவிட்டு செல்போனை பறித்துச் சென்றது. இதுகுறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ராகேஷ் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். காயமடைந்த ராகேஷுக்கு தலையில் 9 தையல்கள் போடப்பட்டன. இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்துவந்த நேரத்தில், மாம்பலம் காவல் நிலையம் எல்லைப் பகுதியில், தி.நகர் பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவரை மிரட்டி 6 பேர் கொண்ட கும்பல் செல்போன் மற்றும் பணத்தைப் பறித்துச்சென்றது. அடுத்தடுத்து 2 சம்பவங்கள் நடந்ததால், தி.நகர் துணை கமிஷனர் அசோக்குமார் உத்தரவின்பேரில், உதவி கமிஷனர் கல்யாண் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ஆதவன் பாலாஜி, தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீஸார் வழிப்பறி கும்பல் குறித்து தீவிரமாக விசாரித்தனர்.
வழிப்பறி சம்பவங்கள் நடந்த நுங்கம்பாக்கம், தி.நகர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தபோது, இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பல் என்பதை போலீஸார் கண்டறிந்தனர். சிசிடிவி-யில் பதிவான பைக்குகளின் நம்பர்களைக்கொண்டு வழிப்பறி கும்பலை போலீஸார் தேடிவந்தனர். போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில், புளியந்தோப்பைச் சேர்ந்த டியோ டேவிட் (18), ஆகாஷ்(21), அபிலாஷ் (19) மற்றும் 4 சிறுவர்கள் போலீஸாரிடம் சிக்கினர். இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸார், “புளியந்தோப்பைச் சேர்ந்த டியோ டேவிட், மீன்மார்க்கெட்டில் வேலைபார்த்துவருகிறார். அந்த வேலை முடிந்த பிறகு, நண்பர்களுடன் சேர்ந்து வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுவந்துள்ளார். டேவிட், ஆகாஷ் ஆகியோர் தலைமையில் அபிலாஷ் மற்றும் 4 சிறுவர்கள் சேர்ந்துதான் இந்த வழிப்பறி வேலைகளைச் செய்துவந்துள்ளனர்.
3 பைக்குகளில் இந்தக் கும்பல் தி.நகர் பகுதிகளில் வலம் வருவார்கள். அப்போது 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் சாலையில் தனியாக வந்தால், அவர்களை வழிமறிப்பார்கள். பின்னர் கத்தி, அரிவாளைக் காட்டி மிரட்டி செல்போன், நகை, பணம் ஆகியவற்றைப் பறித்துச் செல்வார்கள். அப்போது செல்போன், நகை, பணத்தை கொடுக்காமல் அடம்பிடிப்பவர்களை ஈவு இரக்கமின்றி கத்தி, அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிடுவார்கள். இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் நீண்ட காலமாக வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுவந்துள்ளனர். ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக போலீஸாரிடம் சிக்கவில்லை. நுங்கம்பாக்கத்திலும் தி.நகரிலும் வழிப்பறி செய்த இந்தக் கும்பல், ஏலகிரி மலைக்குச் சென்றுவிட்டது. அங்கு ஜாலியாக இருந்தபிறகு, 12-ம் தேதி சென்னை திரும்பினர். அப்போதுதான் அவர்களைப் பிடித்தோம். இந்தக் கும்பலிடமிருந்து 2 திருட்டு பைக்குகள், செல்போன்கள், நகைகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம்” என்று விவரித்தவர்கள்,
“ஒரே பகுதி என்பதால், வயது வித்தியாசமின்றி இந்த 7 பேரும் பழகியுள்ளனர். இவர்களின் ஒரே நோக்கம் போதை. அதற்காகத்தான் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுவந்துள்ளனர். வழிப்பறி செய்யும் செல்போன், நகைகளை விற்று, போதை மாத்திரைகளை வாங்கி 24 மணி நேரமும் போதையில் இருந்துவந்துள்ளனர்.