சீட்டு மோசடி செய்தவர், ஏமாற்றப்பட்டவரின் கடைக்கே உணவருந்த சென்று வசமாக சிக்கிய சம்பவம்
29 Dec,2019
!
தீபாவளி சீட்டு நடத்தி பல லட்ச ரூபாய் மோசடி செய்தவர், ஏமாற்றப்பட்டவரின் கடைக்கே உணவருந்த சென்று, வசமாக சிக்கிய சம்பவம் மதுரையில் அரங்கேறியுள்ளது.
மதுரை மதிச்சியத்தில் உள்ள அயன் கேஸ் ஏஜென்சி முகவராக பணிபுரிந்து வந்தவர் செல்வராஜ். இவர் ககேஸ் விநியோகம் செய்யும் உணவகங்கள், வீடுகள், கடைகள் மற்றும் தெரிந்தவர்களிடம் தீபாவளி சீட்டு நடத்துவதாகவும், இச்சீட்டில் 25 பேரை சேர்ப்போருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்றும் ஆசைவார்த்தை கூறினார்.
இதனை நம்பி நூற்றுக்கும் மேற்பட்டோர் செல்வராஜின் தீபாவளி சீட்டில் சேர்ந்தது மட்டுமில்லாமல், தங்களது உறவினர்கள், நண்பர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோரையும் சேர்த்தனர்.
இந்த நிலையில் அக்டோபர் முதல் வாரத்தில் ஏலச்சீட்டின் மூலம் பல்வேறு பொருட்கள் வரும் என பணம் செலுத்தியவர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு செல்வராஜ் தலைமறைவாகி விட்டார். பணம் செலுத்தியவர்கள் இதுகுறித்து மதிச்சியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இருப்பினும் செல்வராஜை போலீசாரால் கண்டுபிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், செல்வராஜிடம் பணம் கட்டிய மதிச்சியத்தை சேர்ந்த உணவக உரிமையாளர் நடராஜன், தனது உறவினர்கள், நண்பர்கள் என பலரையும் பணம் கட்ட வைத்திருந்தார். அவரை நம்பி பணம் கட்டியவர்கள், செல்வராஜ் தலைமறைவானதால், நடராஜனிடம் பணம் கேட்டு நெருக்குதல் கொடுத்தனர். இதனால் தனது ஓட்டலை விற்று பணத்தை கொடுத்த நடராஜன், மதுரை கே.கே.நகரில் தள்ளு வண்டியில் உணவு விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
இந்நிலையில் கே.கே.நகரில் உள்ள தள்ளுவண்டி கடைக்கு செல்வராஜ் இரவில் உணவு வாங்க வந்தார். அப்போது அவரை அடையாளம் கண்டு கொண்ட நடராஜனின் மனைவி, அங்கிருந்தவர்களின் உதவியோடு, செல்வராஜை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். அவரிடம் தற்போது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்