மீன்களை பிடித்து சாப்பிடும் சிறுத்தைப்புலிகள்
23 Dec,2019
இயற்கை உலகிற்கு எவ்வளவோ ஆச்சரியமான விஷயங்களை அளித்துள்ளது. அழகிய காடுகள், செங்குத்தான பாறைகளில் இருந்து கொட்டும் அருவிகள், அழகிய கடற்கரைகள், அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள், வனவிலங்குகள் என சொல்லிக்கொண்டே போகலாம்.
காடுகளில் காணப்படும் வன விலங்குகள் என்றால் உடனே நம் நினைவிற்கு வருவது சிங்கம், புலி, சிறுத்தை போன்றவை. மாமிச உண்ணிகளான இவை காட்டில் காணப்படும் குதிரை, மான், எருமை போன்றவற்றை வேட்டையாடி உண்ணும் பழக்கம் உடையவை. பெரும்பாலான பறவைகள் மீன்களை உணவாக உட்கொள்கின்றன.
உலகின் நுரையீரல் என்றழைக்கப்படும் அமேசான் காடுகளில் கடந்த ஆகஸ்ட் மாதம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இதில் அக்காட்டின் பெரும்பாலான பகுதிகள் தீயில் கருகி நாசமாகின. பல்வேறு வகையான வனவிலங்குகளும், பறவைகளும், ஏராளமான மரங்களும் அழிந்தன.
இந்நிலையில், அமேசான் காட்டில் உள்ள சிறுத்தைப்புலிகள் மீன்களை வேட்டையாடி சாப்பிட பழகியுள்ளது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரேசில் நாட்டின் ஆம்பா மாநிலத்தில் உள்ள அமேசான் காடுகளில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மறைத்து வைத்த கேமராக்களில் சிறுத்தைப்புலிகள் மீன்களை இரையாக பிடித்து சாப்பிடும் காட்சி பதிவாகியுள்ளது.
இது பற்றி ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ‘இரண்டு முறைகளில் சிறுத்தைப்புலிகள் மீன்களை பிடிக்கின்றன. அலைகள் வரும் வரையில் கரையில் காத்திருந்து மீன்களை பிடிக்கின்றன அல்லது கடலுக்குள் குதித்து மீன்களை பிடிக்கின்றன. இதுவரை எந்த சிறுத்தைப்புலியும் மீன்களை உணவாக உட்கொள்வதை நான் பார்த்ததில்லை, இது வினோதமாக உள்ளது’, என தெரிவித்தார்.