பக்தி மிக்க திருடன்! கிரீடம் அபேஸ்!
23 Nov,2019
ஐதராபாத்தில் அம்மன் கோவிலுக்கு சென்ற கொள்ளையன் ஒருவன் பக்தியுடன் சாமி தரிசனம் செய்து விட்டு அம்மனின் வெள்ளிக்கிரீடத்தை களவாடிச்சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள துர்கா பவானி கோவில் ஒன்று உள்ளது இக்கோவிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிகமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் வியாழக்கிழமை மதிய வேளையில் ஆளில்லா நேரத்தில் திருடர் ஒருவர் பக்தர் போல உள்ளே நுழைந்துள்ளார்.
தெய்வீகமாக கையெடுத்து கும்பிட்டு உருகி வழிபட்டு சுவாமியை தரிசனம் செய்த அவர், சாமி கும்பிடுவது போல நாலாபக்கமும் சுற்றி சுற்றி பார்த்தார்
கண்ணுக்கு எட்டும் தூரம் வரை ஒருவர் கூட இல்லாததை உறுதி செய்துகொண்டு சாமி சிலையின் அருகில் சென்று சிலையை தொட்டு கும்பிட்டார்.
சாமி கும்பிட்டு முடித்ததும் பிரசாதத்தை எடுத்துக்கொள்வதற்கு பதிலாக அம்மன் தலையிலுள்ள வெள்ளி கிரீடத்தை அலேக்காக கழற்றி எடுத்து செல்ல முயன்றார். ஆனால் சுவாமி கழுத்தில் அணிந்திருந்த தாலி கயிறு கிரீடத்துடன் இறுக்கி கட்டப்பட்டிருந்ததால் சிரமப்பட்டார்.
பின்னர் அதனை பிரித்த அந்த திருடர், மீண்டும் அம்மனை வணங்கிவிட்டு 20ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி கிரீடத்தை குவாட்டர் பாட்டிலை சொறுகுவது போல தனது முழு நீள கால் சட்டைக்குள் சொறுகி மறைத்து எடுத்துச்சென்றார்.
யாரும் நம்மை பார்க்கவில்லை என்ற நம்பிக்கையில் அந்த திருடர் செய்த களவாணித்தனம் அனைத்தும் கலியுகத்தில் மூன்றாவது கண்ணாக விளங்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.
வெளியில் பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டு பக்தி மிக்க அந்த திருடர் இரு சக்கர வாகனத்தில் தப்பிச்சென்றதையும் காவல்துறையினர் கண்டறிந்தனர். வெள்ளிக் கிரீடத்துடன் தப்பிய அந்த ஆன்மீக திருடரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடவுள் மறுப்பு கொள்கை கொண்டவர்கள் மட்டும் அல்ல பக்திமான் போல வேசம் கட்டும் கொள்ளையர்களும் கடவுளுக்கு எப்போதும் அஞ்சுவதில்லை என்பதற்கு இந்த கொள்ளை சம்பவமே சான்று..