விமானத்தில் பூனையை வைத்து ஏமாற்றியதால் சலுகைகளை இழந்த இளைஞர்
15 Nov,2019
அதிக எடை உடைய பூனை ஒன்றால் விமான நிறுவனம் தனக்கு வழங்கிய சலுகைகளை இழந்துள்ளார் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.
ரஷ்யாவைச் சேர்ந்த மிகைல் காலின், ஏரோஃபுலோட் எனும் விமான நிறுவனத்தில் அடிக்கடி பயணித்ததால், ஃப்ரீகுவண்ட் ஃப்ளையர் ப்ரோகிராம்-இன் கீழ் கூடுதல் தூரம் பயணிக்கும் சலுகைகளை பெற்றிருந்தார்.
ஆனால், பூனைக்குட்டி ஒன்றை வைத்து விமான நிறுவனத்தை ஏமாற்றியதால் அந்த சலுகைகளை அவர் இழந்துள்ளார்.
என்ன நடந்தது?
லாட்வியா தலைநகர் ரிகாவிலிருந்து ரஷ்யாவில் உள்ள விளாடிவோஸ்டாக் நகருக்கு சமீபத்தில் விமானப் பயணம் மேற்கொண்டுள்ளார் மிகைல் காலின். அப்போது தன்னுடன், தன் செல்லப்பிராணியான விக்டர் எனும் பூனையையும் அழைத்துச் சென்றுள்ளார்.
ஏரோஃபுலோட் விமான சேவை நிறுவனத்தின் விதிகளின்படி எட்டு கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள பூனைக்குட்டியை விமானத்தின் உள்ளே கொண்டு செல்ல அனுமதி இல்லை.
அதற்கும் அதிகமான எடை உள்ள செல்லப்பிராணிகளை மயக்கமடையச் செய்து சரக்கு வைக்கும் பகுதியில் எடுத்துச் செல்ல வேண்டும்.
மிகைல் தன் பயணத்தின்போது ரிகா நகரில் இருந்து மாஸ்கோ வந்து, அங்கிருந்து விளாடிவோஸ்டாக் நகருக்கு வேறு விமானத்தில் செல்ல வேண்டியிருந்தது.
ரிகா நகரில் விமானத்தில் ஏறியபோது, 10 கிலோ உள்ள தனது பூனைக்கு பதிலாக எடை குறைவான வேறொரு சிறிய பூனையைக் காட்டி விமானத்தில் ஏறினார் அவர்.
மாஸ்கோ நகரில் இரண்டாவது விமானத்தில் ஏறும்போது பூனை விக்டரின் எடை திடீரென இரண்டு கிலோ அதிகமாகி இருப்பதைக் கண்டு விமான நிறுவனத்தின் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதனால், அவர் பூனையை உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
வேறு ஒருவரின் எடை குறைவான பூனையை வாங்கி ஊழியர்களிடம் கணக்கு காட்டிவிட்டு, வழக்கம்போல தனது பூனையை உள்ளே கொண்டு சென்றார் மிகைல்.
உள்ளே செல்லும் முன் வழியனுப்ப வந்த அந்த சிறிய பூனையின் உரிமையாளரிடம் அதைக் கொடுத்துவிட்டு, தனது பெரிய பூனையை வாங்கிக்கொண்டு சென்றார் மிகைல்.
சிக்கிக்கொண்டது எப்படி?
தான் விமான நிறுவனத்தை ஏமாற்றியது எப்படி என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டார் மிகைல். மிகவும் பிரபலமானது அந்தப் பதிவு.
இறுதியாக ஏரோஃபுலோட் விமான சேவை நிறுவனத்தின் ஊழியர்களின் கண்ணிலும் அந்தப் பதிவு தென்பட்டது.
விசாரணை செய்யப்பட்டத்தில் அவர் ஏமாற்றியது உறுதியானாதால், அவரது சலுகைகளைப் பறித்துள்ளது விமான நிறுவனம்.