கணவனை, மனைவி தனது மகன், மகளுடன் சேர்ந்து அடித்து கொலை செய்து வீட்டுக்குள் புதைத்த சம்பவம்!
04 Nov,2019
சாத்தூரில் மாயமனதாக தேடப்பட்ட கணவனை, மனைவி, தனது மகன் மற்றும் மகளுடன் சேர்ந்து அடித்து கொலை செய்து வீட்டுக்குள் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தீபாவளியால் துப்பு துலங்கிய கொலை சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஸ்ரீரங்காபுரத்தை சேர்ந்தவர் 55 வயதான சுப்புராஜ்.இவருடைய மனைவி பிச்சையம்மாள், இவர்களுக்கு சுரேஷ் என்ற மகனும், பிரியா என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 3 மாதத்துக்கு முன்பு சுப்புராஜ் திடீரென மாயமானார். பல நாட்களாக காணாததால் சுப்புராஜின் சகோதரர்கள் அவரை தேடத்தொடங்கினர். தொடர்ந்து பிச்சையம்மாளிடம் விவரம் கேட்டு வந்த நிலையில் அவர், தனது கணவர் வேலை தேடி கேரளாவுக்கு சென்று விட்டதாக கூறியுள்ளார்.
வெளியூர் சென்ற சுப்புராஜ் தீபாவளிக்கு வீடு திரும்புவார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் தீபாவளிக்கும் அவர் வீடு திரும்பாததால் அவரது சகோதரர்களுக்கு சந்தேகம் வலுத்தது. இந்த நிலையில் சுப்புராஜின் வீட்டின் அருகே குழி தோண்டி மூடப்பட்டு இருப்பது போன்ற தடயம் தென்பட்டதால் சந்தேகம் வலுத்தது.
சுப்புராஜ் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகித்த அவரது சகோதரர் கணேசன், இதுகுறித்து, 1-ந் தேதி சாத்தூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதில், மாயமான தனது சகோதரர் சுப்புராஜ் குறித்து பலமுறை தனது அண்ணி பிச்சையம்மாளிடம் கேட்டும் முறையாக பதில் கிடைக்கவில்லை என்று அவர் கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, சாத்தூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் சுபக்குமார் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வீட்டிற்கு வெளியே கழிவறை அருகே சந்தேகப்படும்படியாக இருந்த ஒரு இடத்தை தோண்டிப்பார்க்க முடிவு செய்யப்பட்டது. காவல்துறையினரின் முன்னிலையில் சுப்புராஜின் சகோதரர் கணேசன் அந்த இடத்தைத் தோண்டினார்.
சுமார் 3 அடி ஆழம் தோண்டியபோது அங்கு பாதி எரிந்த நிலையில் எலும்புகள் தென்பட்டன. இதைத்தொடர்ந்து அந்த இடத்தை தோண்டுவதை நிறுத்திவிட்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளின் முன்னிலையில் அந்த இடத்தை தொடர்ந்து தோண்டிப்பார்க்க முடிவு செய்யப்பட்டது. எனவே அங்கு காவலுக்கு காவல்துறையினர் நிறுத்தப்பட்டனர். இந்த தகவல் காட்டுத்தீயாய் பரவ அங்கு மக்கள் பெருமளவில் கூடினர்.
இதையடுத்து சுப்புராஜின் மனைவி பிச்சையம்மாள், அவரது மகன் சுரேஷ், மகள் பிரியா ஆகியோரிடம் சாத்தூர் தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது சுப்புராஜ் மாயமான மர்மம் விலகியது.
சம்பவத்தன்று, பிரியா மாமியார் வீட்டில் இருந்து தாய் வீட்டுக்கு வந்திருந்தார். இரவில் பிச்சையம்மாள் தனது மகன், மகளுடன் வீட்டில் இருந்துள்ளார். நள்ளிரவில் சுப்புராஜ் குடித்துவிட்டு வீட்டுக்கு ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் தள்ளிவிட்ட போது சுப்புராஜ் தலையில் அடிபட்டு மயக்கமடைந்துள்ளார். அவர் இறந்து போனதாக கருதி மனைவி மற்றும் மக்கள் அதிர்ச்சியில் செய்வதறியாது நின்றனர். பின்னர் அவசர,அவசரமாக வீட்டின் கழிவறை அருகே குழிதோண்டி சுப்புராஜின் உடலை புதைத்துள்ளனர். இந்த தகவலை 3 பேரும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
மயக்க மடைந்தவரை உயிரிழந்ததாக கருதி புதைத்திருக்கலாம் என்றும், உயிரிழந்ததை உறுதிப்படுத்திக் கொள்ளாமல் தப்பிக்க வேண்டும் என்ற வேகத்தில் வீட்டுக்குள் சவக்குழி தோண்டி புதைத்துள்ளதாகவும் கூறுகின்றனர் காவல்துறையினர். இந்த சம்பவம் தொடர்பாக சுப்புராஜின் மனைவி பிச்சையம்மாள், மகன் சுரேஷ், மகள் பிரியா ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
ஒரு குடும்பமே சேர்ந்து குடும்பத்தலைவரை கொலை செய்து சிறை சென்றிருப்பது குடியால் நிகழ்ந்த விபரீதம்..! என்றாலும் குடி குடியை கெடுக்கும் என்பதற்கு இந்த சம்பவமே சான்று..!