இங்கிலாந்து கண்டெய்னர் மரணம் - ”லாரியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர்கள் சீனர்கள் அல்ல”
02 Nov,2019
இங்கிலாந்தின் எஸ்ஸெக்ஸில் சடலமாக கண்டெடுக்கப்பட்டோரில் ஃபாம் தி திரா மை மற்றும் நகுயன் தின்க் லுயங் இருக்கலாம் என்று இவர்களின் உறவினர்கள் கவலையடைந்துள்ளனர்.
இங்கிலாந்திலுள்ள எஸ்ஸெக்ஸில் ஒரு கண்டெய்னர் லாரியில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்ட 39 பேரும் வியட்நாமை சோந்தவர்கள் என்று அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் தொழிற்துறை மண்டலம் ஒன்றில், கண்டெய்னர் லாரியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த 39 பேரும் தொடக்கத்தில் சீனர்கள் என்று கருதப்பட்டது.
"இப்போது இதில் இறந்தவர்கள் குறித்து முழு விபரங்களை பெற, பிரிட்டனுக்கும், வியட்நாம் அரசுக்கும் இடையே தொலைபேசி வழியாக நேரடித் தொடர்பு ஏற்பட்டுள்ளது" என்று எஸ்ஸெக்ஸ் காவல்துறை கூறியுள்ளது.
இவ்வாறு இறந்தோரில் தங்களின் உறவினர்கள் இருக்கலாம் என அஞ்சி பல வியட்நாம் குடும்பங்கள் தாங்களே முன்வந்து தகவலை தெரிவித்திருந்தன.
அக்டோபர் 23ம் தேதி அதிகாலையில் கண்டெய்னர் லாரியில் 39 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
செவ்வாய்கிழமை தனது குடும்பத்திற்கு அனுப்பிய செய்தி ஒன்றில் வெளிநாடு செல்லும் தனது முயற்சி தோல்வியடைந்துவிட்டதாக 26 வயதான ஃபாம் தி திரா மை தெரிவித்திருந்தார்.
இந்த 31 ஆண்கள் மற்றும் எட்டு பெண்களின் இறப்புக்கான காரணத்தை அறிய பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது.
"இறந்தவர்கள் அனைவரும் வியட்நாமியர்கள் என்று நம்புகிறோம். அந்நாட்டு அரசோடு நாங்கள் தொடர்பில் இருந்து வருகிறோம்" என்று துணை தலைமை காவலர் டிம் ஸ்மித் தெரிவித்திருக்கிறார்.
இறந்தவர்களை அடையாளம் காணும் நிலையில் காவல்துறையினர் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த புகைப்படத்தில் இருக்கும் லெ மின்க் துயன் தனது மகன் லெ வான் ஹா எஸ்ஸெக்ஸில் சடலமாக மீட்டோரில் ஒருவராக இருக்கலாம் என்று அஞ்சுகிறார்.
இந்த சம்பவத்தால் மிகவும் கவலையடைந்துள்ளதாகவும், இறந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் லண்டனிலுள்ள வியட்நாம் தூதரகம் தெரிவித்துள்ளது.
இறந்தவர்களை தனிப்பட்ட முறையில் இன்னும் அடையாளம் காண வேண்டியுள்ளது என்றும், இதனை வியட்நாம் மற்றும் பிரிட்டனிலுள்ள அதிகாரிகள் உறுதி செய்வர் என்றும் வியட்நாம் தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், இறந்தோரின் உறவினர்கள் யாராவது இறந்த தங்களின் உறவினரின் சடலத்தை தாயகத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டுமென விரும்பினால், அந்த குடும்பங்களுக்கு வியட்நாம் மற்றும் பிரிட்டனிலுள்ள தொடர்புடைய துறை அதிகாரிகளோடு ஒத்துழைத்து உதவத் தயாராக இருப்பதாகவும் லண்டனிலுள்ள வியட்நாம் தூதரகம் தெரிவித்துள்ளது.