விருச்சிகம்
குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை உங்களின் ராசியை விட்டு விலகி, தன் சொந்த வீடான 2-ம் வீட்டில் அமர்வதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்பஸ்தானத்தில் குரு பகவான் அமர்வதால் இனி மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவார்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.
உறவினர்கள் வலிய வந்து பேசத் தொடங்கு வார்கள். உடல்நலம் சீராகும். சோர்ந்திருந்த நீங்கள் இனி உற்சாகமடைவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். நீண்ட நாள்களாகப் போக நினைத்த புண்ணிய தலங்களுக்குச் சென்றுவருவீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
குரு பகவானின் பார்வை: குரு உங்களின் ராசிக்கு 6-ம் வீட்டைப் பார்ப்பதால் கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். குரு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் வெளிநாடு செல்வீர்கள். குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான மூல நட்சத்திரத்தில் செல்வதால் வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். உங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியவர்கள், திருப்பித் தருவார்கள். வாழ்வின் முன்னேற்றத்துக்குக் காரணமான ஒருவரைச் சந்திப்பீர்கள்.
1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்கள் விரயாதிபதியும் சப்தமாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் திடீர்ப் பயணங்கள், செலவினங்கள் உண்டு. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.
6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்கள் ஜீவனாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1-ம் பாதத்தில் செல்வதால் உங்களின் மதிப்பு மரியாதை கூடும். வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். கௌரவப் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
மகரத்தில் குரு பகவான்: 28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 3-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும் வக்கிரமாகியும் அமர்வதால் சின்னச்சின்ன கவலைகள் வந்து போகும். இளையசகோதர வகையில் மனத்தாங்கல் வரலாம். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
வியாபாரத்தில் கடந்த ஓராண்டு காலமாக ஏற்பட்ட இழப்புகளைச் சரிசெய்வீர்கள். இரட்டிப்பு லாபம் உண்டு. சிலர் மொத்த வியாபாரத்துக்கு மாறுவார்கள். சங்கம், இயக்கம் இவற்றில் கௌரவப் பதவிகள் தேடி வரும். ஹார்டுவேர், இரும்பு, வாகனம், மூலிகை வகைகளால் லாபமடைவீர்கள்.
உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். உயரதிகாரிகளின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.
மணமாகாத பெண்களுக்கு திருமணப் பேச்சு வார்த்தை சாதகமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று புதிய வேலையில் அமர்வார்கள்.
மாணவ மாணவியருக்கு நினைவாற்றல் கூடும். படிப்பில் இருந்த அலட்சியப்போக்கு மாறும். கூடுதல் மதிப்பெண் பெறுவார்கள். சக மாணவர்கள் பாராட்டும்படி நடந்துகொள்வார்கள்.
கலைத்துறையினருக்குப் போட்டிகள் குறையும். தடைப்பட்டிருந்த படைப்புகள் வெளியாகும். மக்கள் மத்தியில் பிரபலமடைவார்கள். வருமானம் உயரும்.
பரிகாரம்: கிருத்திகை தினங்களில், திருச் செந்தூர் முருகனை வழிபட்டு வாருங்கள்; சகல வளங்களும் பொங்கிப்பெருகும்.
தனுசு
உங்களின் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு வீண் அலைச்சல், விரயச் செலவுகளைத் தந்துகொண்டிருந்த குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜன்ம குருவாக ஆட்சிபெற்று அமர்வதால் பொறுப்புகளும் வேலைச்சுமையும் அதிகரிக்கும். அதிகாரமுள்ள பதவியில் இருப்பவர்கள் ஆதரிப்பார்கள்.
ஜன்ம குருவாக இருப்பதால் அவ்வப்போது முன்கோபம் வரும். உங்களின் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டே போகும். உங்கள் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். திடீரென்று அறிமுகமானவரை நம்பி முடிவுகள் எடுக்க வேண்டாம்.
குரு பகவானின் பார்வை: குரு, உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டைப் பார்ப்பதால் குழந்தைபாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னைகள் தீரும். சிலர் தங்களின் பங்கை விற்று புதிய இடம் வாங்குவார்கள். தியானம், பொதுச்சேவையில் மனம் ஈடுபாடு கொள்ளும். குரு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் தள்ளிப்போன திருமணம் கைகூடும். போட்டிகளில் வெற்றிபெறுவீர்கள்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான மூல நட்சத்திரத்தில் செல்வதால் வேலைச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்தவை தாமதமானாலும் எதிர்பாராத சில வேலைகள் விரைந்து முடியும். 1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்களின் சஷ்டமாதிபதியும் லாபாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் உங்களின் செயலில் வேகம் கூடும். எதிரிகளை வீழ்த்துவீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும்.
6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்களின் பாக்கியாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1-ம் பாதத்தில் செல்வதால் உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டு.
மகரத்தில் குரு பகவான்: 28.3.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும் வக்கிரமாகியும் அமர்வதால் திடீர் யோகம், பணவரவு, மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் விலகும். கட்டட வேலைகளைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடனுதவியும் கிட்டும்.
வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் இறங்காதீர்கள். புதிதாக வரும் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுவீர்கள். புதிய முடிவுகளோ, முதலீடுகளோ வேண்டாம். பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள். கடையை அவசரப்பட்டு வேறு இடத்துக்கு மாற்ற வேண்டாம். கூட்டுத்தொழில் வேண்டாம்.
உத்தியோகத்தில் நாளுக்கு நாள் வேலைச்சுமை கூடிக்கொண்டே போகும். அலுவலக ரகசியங்களை வெளியே சொல்ல வேண்டாம். குறைகளை அதிகாரிகள் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ளுங்கள். முறைப்படி தேர்வெழுதி வெற்றிபெற்றும் பதவி உயர்வு, சலுகைகள், சம்பள உயர்வைப் பெற போராட வேண்டியிருக்கும்.
பெண்கள் யதார்த்தமாகவும் விளையாட்டாகவும் எதையோ சொல்லப் போய் அதைச் சிலர் பெரிதாக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.
மாணவ மாணவியர் டி.வி, சினிமாவையெல்லாம் விட்டுவிட்டுப் படிப்பில் முழுகவனம் செலுத்துங்கள். மறதியால் மதிப்பெண் குறையும் வாய்ப்புள்ளதால் ஒருமுறைக்கு இருமுறை எழுதிப் பழகுங்கள்.
கலைத்துறையினர் விமர்சனங்களை ஏற்று, திருத்திக்கொள்ளுங்கள். உங்களின் படைப்புகளைப் போராடி வெளியிட வேண்டி வரும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும்.
பரிகாரம்: உத்திரமேரூர் அருகில், திருப்புலிவனம் ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர் ஆலயத்தில் அருளும் குரு பகவானை வழிபட்டு வாருங்கள்; வெற்றி கிட்டும்.
மகரம்
உங்களின் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து ஓரளவு வசதி வாய்ப்புகள், திடீர் யோகம் மற்றும் பணவரவு தந்துகொண்டிருந்த குரு பகவான், 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 12-ம் வீடான விரயஸ்தானத்தில் மறைவதால் வேலைச்சுமையும் அலைச்சலும் இருக்கும்.
புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அரசு அனுமதி கிடைத்து சிலர் புதிதாக வீடு கட்டத் தொடங்குவார்கள். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். கணவன் மனைவிக்குள் வரும் சிறு பிரச்னைகளைப் பெரிதாக்க வேண்டாம்.
பிள்ளைகளிடம் அதிக கண்டிப்பு காட்டாதீர்கள். மகளுக்கு வரன் தேடும்போது நன்றாக விசாரித்து முடிப்பது நல்லது. சொத்து ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அநாவசியமாக யாரிடமும் வாக்குறுதி தர வேண்டாம்.
குரு பகவானின் பார்வை: குரு உங்களின் சுகஸ்தானத்தைப் பார்ப்பதால் தாயாரின் உடல்நிலை சீராகும். நல்ல வீட்டுக்கு மாறுவீர்கள். சிலர் வேறு ஊருக்குக் குடிபெயர்வீர்கள். குரு 6-ம் வீட்டைப் பார்ப்பதால் பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். குரு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் ஆயுள், ஆரோக்கியம் கூடும். வழக்குகள் சாதகமாகும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் மூல நட்சத்திரத்தில் செல்வதால் ஒருபக்கம் அலைச்சல் இருந்தாலும் முன்னேற்றம் உண்டு. பணவரவு குறையாது. புகழ், கௌரவம் கூடும். அரசால் ஆதாயம் உண்டு. சொத்துச் சிக்கல் ஒரு முடிவுக்கு வரும்.
1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்களின் பூர்வ புண்ணியாதிபதியும் ஜீவனாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் வருமானம் உயரும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் தொடர்பான முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தினருடன் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்கள் அஷ்டமாதிபதி சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1-ம் பாதத்தில் செல்வதால், பயணத்தில் கவனமாக இருங்கள்.
மகரத்தில் குரு பகவான்: 28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்கள் ராசிக்குள்ளேயே அதிசாரமாகியும் வக்கிரமாகியும் அமர்வதால் பணிச்சுமை இருந்துகொண்டே இருக்கும். புதிய நபர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுங்கள்.
வியாபாரத்தில் சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். தேங்கிக் கிடந்த சரக்குகளைத் தள்ளுபடி விலைக்கு விற்று முடிப்பீர்கள். புகழ்பெற்ற நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் செய்வீர்கள். இரும்பு, உணவு, ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமென்ட் வகைகளில் லாபம் கிடைக்கும்.
உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்பு கிடைக்கும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துபோட்டுப் பார்க்கவேண்டி வரும். பதவி உயர்வை எதிர்பார்க்கலாம்; பழைய சம்பள பாக்கி கைக்கு வரும்.
பெண்கள் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பார்கள். உயர் கல்வியில் விடுபட்ட பாடத்தை எழுதி வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் நீண்ட நாள் கனவுகளை நனவாக்குவீர்கள்.
மாணவ, மாணவியர் விளையாட்டுத்தனத்தைக் குறைத்து வகுப்பறையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. கலைத்துறையினர் விமர்சனங்களைத் தாண்டி முன்னேறுவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
பரிகாரம்: வியாழனறு ஆலங்குடி குருபகவானை வழிபட்டு வாருங்கள்; தடைகள் நீங்கும்.
கும்பம்
குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 11-ம் வீட்டில் அமர்வதால் வாழ்வு வளம்பெறும். லாபஸ்தான குரு பகவான் குடும்பத்திலிருந்த பிரச்னைகளுக்கெல்லாம் நல்ல தீர்வுகளைத் தருவார்.
கடினமான காரியங்களையும் எளிதாக முடித்து வெற்றிபெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கடனாக வாங்கியிருந்த பணத்தைத் திருப்பித் தருவீர்கள். வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர வகையில் இருந்த மனக்கசப்பு நீங்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும்.
புதிய பதவி, பொறுப்புகள் தேடி வரும். தாமதமாகிக் கொண்டிருந்த அரசாங்க விஷயங்களெல்லாம் நல்லவிதத்தில் முடிவடையும். உறவினர்கள் வழியில் இருந்துவந்த மனஸ்தாபங்கள் விலகும்.
குரு பகவானின் பார்வை: உங்களின் ராசிக்கு 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் மனோபலம் கூடும். தன்னிச்சையாக, தைரியமாக முடிவுகள் எடுக்கத் தொடங்குவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். இளையசகோதர வகையில் அனுகூலம் உண்டு.
குரு 5-ம் வீட்டைப் பார்ப்பதால் மனத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். மகளுக்கு எதிர்பார்த்த குடும்பத்திலிருந்து நல்ல வரன் அமையும். குரு ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் உற்சாகமடைவீர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும். மனைவிவழியில் ஆதாயமடைவீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான மூல நட்சத்திரத்தில் செல்வதால், தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். பழைய நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள்.
1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்கள் சுகஸ்தானாதிபதியும் பாக்யாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் திடீர் யோகம், அதிரடி முன்னேற்றம் உண்டாகும். 6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்கள் சப்தமாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1-ம் பாதத்தில் செல்வதால் உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
மகரத்தில் குரு பகவான்: 28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 12-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும் வக்கிரமாகியும் அமர்வதால் திடீர்ப் பயணங்கள் உண்டு.
வியாபாரத்தில் வரவு உயரும். சந்தை நிலவரத்தைத் தெரிந்துகொண்டு குறைந்த முதலீடு செய்து லாபம் ஈட்டுவீர்கள். புதிய கிளைகள் தொடங்குவீர்கள். வெளிநாட்டு நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும். பங்குச்சந்தை, இரும்பு, கட்டட உதிரிப் பாகங்களால் லாபமடைவீர்கள்.
உத்தியோகத்தில் சுமுகமான சூழ்நிலை உருவாகும். அலுவலக சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள். சக ஊழியர்களிடையே உங்களின் சிந்தனைக்குப் பாராட்டுகள் கிடைக்கும்.
இளம் பெண்களுக்குக் கல்யாணம் கைகூடும். வரும். தடைபட்ட கல்வியைத் தொடர்வீர்கள். புதிய இடத்தில் உத்தியோகம் அமையும்.
மாணவ மாணவியர் ஏனோதானோ என்று படிக்காமல் இனி ஆர்வத்துடன் படிப்பார்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். மதிப்பெண் உயரும்.
கலைத்துறையினர் இனி துளிர்த்தெழுந்து வீறுநடை போடுவார்கள். பெரிய நிறுவனங்களின் அழைப்பு தேடி வரும். பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும்.
பரிகாரம்: காஞ்சி மாவட்டம், கீழ்படப்பையில் அருளும் ஸ்ரீவீரட்டேஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள்; மகிழ்ச்சி தங்கும்.
மீனம்
உங்களின் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்து, தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றியடைய வைத்த குரு பகவான், 29.10.2019 முதல் 13.11.2020 வரை உங்களின் ராசிக்கு 10-ம் வீட்டில் நுழைகிறார். 10-ம் இடமென்றால் பதவியைப் பறித்து விடுவாரே என்றெல்லாம் பதற்றப்படாதீர்கள். நன்மையே உண்டாகும். சிலருக்கு வெளிநாட்டில், அண்டை மாநிலத்தில் வேலை அமையும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளைப் பார்க்கவேண்டி வரும்.
உங்கள் திறமையையும் உழைப்பையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். எந்த விஷயத்தையும் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. முக்கியக் கோப்புகளைக் கையாளும் போது அலட்சியம் வேண்டாம். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.
குரு பகவானின் பார்வை: குரு உங்களின் ராசிக்கு 2-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். குழந்தைபாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். சொத்து சேரும். குரு 4-ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாருடன் இருந்த மனவருத்தம் நீங்கும். புதிய வீட்டில் குடியேறுவீர்கள்.
கணவன் மனைவி ஒருவருக் கொருவர் மனம்விட்டுப் பேசி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நவீனரக வாகனம், செல்போன் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். குரு, 6-ம் வீட்டைப் பார்ப்பதால் தள்ளிப்போன காரியங்களெல்லாம் நல்லவிதமாக முடியும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் மூல நட்சத்திரத்தில் செல்வதால் உங்களின் பலவீனங்களைப் பட்டியலிட்டு அவற்றையெல்லாம் மாற்றிக்கொள்வீர்கள். சில விஷயங்களில் பெருந்தன்மையான முடிவுகள் எடுப்பீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு.
1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை சேவகாதிபதியும் அஷ்டமாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் திடீர்ப் பயணங்களால் திணறுவீர்கள்.
6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1-ம் பாதத்தில் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும்.அரசு விவகாரங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
மகரத்தில் குரு பகவான்: 28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 11-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும் வக்கிரமாகியும் அமர்வதால் விலகிச்சென்ற உறவினர்கள் வலியவந்து பேசத் தொடங்குவார்கள். காணாமல்போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.
வியாபாரத்தைக் கடன் வாங்கி விரிவுபடுத்திக்கொண்டிருக்க வேண்டாம். பழைய வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள். கமிஷன், ரியல் எஸ்டேட், பெட்ரோ, கெமிக்கல், மூலிகை வகைகளால் லாபமடைவீர்கள்.
உத்தியோக ஸ்தானமான 10-ம் வீட்டில் குரு அமர்வதால் வேலைச்சுமை இருக்கும். நேரம் காலம் பார்க்காமல் உழைத்தும் பயன் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். புதிய அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும்.
இளம்பெண்கள் உயர்கல்வியில் கவனம் செலுத்திப் படிக்க வேண்டிய முக்கியமான காலகட்டம். எதிர்காலம் பற்றி யோசித்து முடிவெடுங்கள்.
மாணவ மாணவியர் அதிகாலையில் எழுந்து படிக்கத் தவறாதீர்கள். விருப்பப்பட்ட பிரிவில் சேர போராடவேண்டியிருக்கும். கலைத் துறையினர் சிறிய வாய்ப்புகளாக இருந்தாலும் அதைப் பயன்படுத்துங்கள். புதிய நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம்.
பரிகாரம்: காஞ்சி மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோயிலிலுள்ள ஸ்ரீசிதம்பரம் சுவாமியை ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று வணங்குங்கள்; முயற்சிகள் பலிதமாகும்