கனடாவின் 43ஆவது மக்களவை பொதுத் தேர்தல் வரும் அக்டோபர் 21ஆம் தேதி னடாவின் தற்போதைய பிரதமரான லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ இரண்டாவது முறையாக இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்.
அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய முக்கிய கட்சிகளின் தலைவர்கள், அனல் பரந்த விவாதங்கள், அதிர்வலைகளை எழுப்பிய குற்றச்சாட்டுகள், பகிரங்க மன்னிப்புகள், எதிர்பார்க்காத திருப்பங்கள் என வழக்கம்போல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது தேர்தல் களம்.
இந்நிலையில், கனடா தேர்தல் களத்தின் தற்போதைய நிலவரம் என்ன? தேர்தலில் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கப்போகும் விடயங்கள் என்னென்ன? கருத்துக்கணிப்புகள் சொல்வது என்ன? கூட்டணி ஆட்சி அமையுமா? தமிழர்களின் ஆதரவு யாருக்கு கிடைக்கும்? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த கட்டுரை.
கனடாவின் தலைவர் இங்கிலாந்து ராணி
நிலப்பரப்பில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடாக விளங்கும் கனடாவில் பத்து மாகாணங்களும், மூன்று ஆட்சி நிலப்பகுதிகளும் உள்ளன. ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகியவை அதிகாரப்பூர்வ மொழிகளாக உள்ளன.
அரசியல்சட்ட முடியாட்சி (Constitutional Monarchy) முறையை அடிப்படையாக கொண்ட இந்த நாட்டின் தலைவராக 1952ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இருந்து வருகிறார். தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களை கொண்ட மக்களவை மற்றும் நியமனம் செய்யப்படும் உறுப்பினர்களை கொண்ட செனட் சபை முதலிய இரட்டை அமைப்பை இந்த நாடு கொண்டுள்ளது.
கனடாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்களவை பொதுத்தேர்தல் மூலம் வெற்றிபெறும் கட்சியின் தலைவர் அந்நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
கனடாவில் மொத்தம் 338 மக்களவை தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு கட்சி 170 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.
கடைசியாக, 2015ஆம் நடைபெற்ற தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சியின் சார்பாக போட்டியிட்டவர்களில் 184 பேர் வெற்றிபெற்றிருந்தனர். 99 இடங்களுடன் கன்சர்வேட்டிவ் கட்சி இரண்டாவது இடத்தையும், 44 இடங்களுடன் நியூ டெமாகிரட்டிக் கட்சி மூன்றாவது இடத்தையும் பெற்றிருந்தது.
வெற்றியை நிர்ணயிக்கப்போகும் விடயங்கள் என்னென்ன?
மற்ற நாடுகளை போன்று கனடிய மக்களும் அரசியல் சார்ந்த கொள்கைகளை அடிப்படையாக கொண்டு தேர்தலில் வாக்களித்தாலும், நாட்டின் முக்கிய பிரச்சனைகளுக்கு தெளிவான தீர்வை முன்வைக்கும் கட்சிக்காக தங்களது முடிவை மாற்றும் போக்கும் மக்களிடையே காணப்படுவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில், கனடாவின் மிகப் பெரிய சந்தை ஆய்வு நிறுவனமான ஐபிஎஸ்ஓஎஸ், மக்கள் இந்த தேர்தலில் எதை அடிப்படையாக கொண்டு வாக்களிக்க உள்ளார்கள் என்று நடத்திய கருத்துக்கணிப்பு முடிவு வெளிவந்துள்ளது. அதன்படி, வழக்கம்போல அரசியல் கட்சிகளின் சுகாதார திட்டங்களுக்கே அதிகபட்சமாக 35 சதவீத மக்கள் முன்னுரிமை அளித்துள்ளனர்.
அதற்கடுத்து, பருவநிலை மாற்றம், வாழ்க்கை செலவு அதிகரிப்பு, வருமான வரி, நாட்டின் பொருளாதாரம், வீட்டுவசதி, கல்வி உள்ளிட்ட விடயங்களுக்கு அந்த நாட்டு மக்கள் முக்கியத்துவம் அளிப்பது தெரியவந்துள்ளது.தலாக வரி செலுத்த வேண்டுமென்ற நிலைப்பாட்டை ஜஸ்டின் அரசு எடுத்துள்ளதற்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு காணப்படுகிறது.
அதே சூழ்நிலையில், கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்திலிருந்து பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு குழாய் வழியாக கச்சா எண்ணெய்யை கொண்டுச்செல்லும் திட்டத்துக்கு பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி ஜஸ்டினின் அரசு அனுமதி அளித்துள்ளது இந்த தேர்தலில் எதிரொலிக்கக் கூடும்.
கனடாவின் முக்கிய நகரங்களான டொராண்டோ, வான்கூவர் உள்ளிட்டவற்றில் அதிகரித்து வரும் வீடு மற்றும் வாழ்க்கை செலவு, வேலைவாய்ப்பின்மை, பொருளாதார நிலைமை உள்ளிட்டவையும் இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.
அல்பெர்ட்டா மாகாணத்தில் நடைபெறும் குழாய் பதிப்பு பணி
மேற்கூறிய பல்வேறு விடயங்களை தவிர்த்து, 18 ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் தோலில் பழுப்பு நிறத்தில் வண்ணங்களைப் பூசி கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றது சர்ச்சைக்குள்ளான விடயமும், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் ஆண்ட்ரூ ஷீரின் அமெரிக்க குடியுரிமை சார்ந்த விவகாரமும் இந்த தேர்தலில் பலரது கவனத்தை பெற்றுள்ளது.
கனடாவில் ஒவ்வொரு தேர்தலின்போதும், கட்சித் தலைவர்கள் நாடு முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடுவதோடு, அனைத்து கட்சித் தலைவர்களும் ஒன்றாக, நேரலையில் மக்களின், ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்து, தங்களுக்குள்ளே விவாதம் செய்யும் நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அந்த வகையில், இம்மாதத்தின் முதல் வாரம், சுமார் இரண்டு மணிநேரம் நடைபெற்ற இந்த விவாதத்தில் ஆறு முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று, பல்வேறு விடயங்கள் குறித்த தங்களது கருத்துகளை முன்வைத்து விவாதித்தனர். வியப்பளிக்கும் வகையில், இந்த தேர்தலில் முக்கிய போட்டி நிலவும், ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஆண்ட்ரூ ஷீரை விட, நியூ டெமாகிரட்டிக் கட்சியின் தலைவர் ஜக்மித் சிங்குக்கே இந்த விவாதத்துக்கு பிறகு மக்களின் ஆதரவு பெருகியுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்துக் கணிப்புகள் சொல்வது என்ன?
செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரம் மக்களவைத் தேர்தல் குறித்த அறிவிப்பை ஜஸ்டின் ட்ரூடோ முறைப்படி அறிவித்தார்.
இதுவரை கிட்டத்தட்ட 40 நாட்கள் பிரசாரம் நடைபெற்றுள்ள நிலையில், கனடாவை சேர்ந்த முன்னணி ஊடக நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கனடிய அரசின் நிதியுதவியோடு இயங்கும் அந்த நாட்டின் மிகப் பெரிய தொலைக்காட்சி மற்றும் மின்னணு ஊடகமான சிபிசி இணையம் மூலம் நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பின்படி, ஜஸ்டினின் லிபரல் கட்சி 137 தொகுதிகளையும், ஆண்ட்ரூ ஷீர் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி 125 இடங்களையும், புளக் கியூபெக்வா கட்சி 39 இடங்களையும் மற்றும் ஜக்மித் சிங் தலைமையிலான நியூ டெமாகிரட்டிக் கட்சி 34 இடங்களையும் வெல்லும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ன் ட்ரூடோ, ஜக்மித் சிங், ஆண்ட்ரூ ஷீர், எலிசபெத் மே (இடமிருந்து வலமாக)
இதன் மூலம், கனடாவின் இரண்டு முக்கிய கட்சிகளுமே தனித்து ஆட்சியை அமைப்பதற்கு தேவையான 170 இடங்களை வெல்லாது என்ற சூழ்நிலை நிலவுகிறது.
மேலும், நிகழ்தகவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதற்கு 11 சதவீத வாய்ப்புகளே உள்ளதாகவும், அதே சமயத்தில் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியமைக்க வெறும் 2 சதவீத வாய்ப்புகளே உள்ளதாகவும் அந்த கருத்துக்கணிப்பு மேலும் கூறுகிறது.
ஐபாலிடிக்ஸ் நிறுவனத்தின் கருத்துக்கணிப்பில், லிபரல் கட்சியும், நானோஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் கூட்டு கருத்துக்கணிப்பில் கன்சர்வேட்டிவ் கட்சியும் முன்னிலை வகிக்கின்றன. எனினும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, எந்த கருத்துக்கணிப்பிலும் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று கூறப்படவில்லை.
கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புண்டா?
தற்போது சூழ்நிலையில் கனடாவில் இரண்டு விதமான அரசாங்கங்கள் அமைவதற்கு வாய்ப்புள்ளன. ஒன்று, 170க்கும் அதிகமான தொகுதிகளில் ஒரே கட்சி வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது; மற்றொன்று, எந்த கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறாமல் மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஒரு கட்சி ஆட்சியமைப்பது. ஒருவேளை எந்த ஒரு கட்சியும் குறிப்பிடத்தக்க வாக்குகளை பெறாத சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளது.
எனினும், மேற்குறிப்பிடப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளை வைத்து பார்க்கும்போது, லிபரல் அல்லது கன்சர்வேட்டிவ் கட்சி கிட்டத்தட்ட 130 தொகுதிகளில் வெற்றிபெற்றால், அவற்றில் எது ஆட்சியமைக்கும் என்பதை இந்த தேர்தலில் மூன்றாவது இடத்தை பெறப்போகும் கட்சியே நிர்ணயிக்கும். கனடாவின் ஊடகங்களால் 'கிங் மேக்கர்' என்று அழைக்கப்படும் அந்த இடத்தை பெறுவதில், நியூ டெமாகிரட்டிக் மற்றும் புளக் கியூபெக்வா ஆகிய கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியை ஆட்சியமைக்காமல் செய்வதற்கு எந்த கட்சியுடனும் சேர்ந்து செயல்பட தயார் என்று நியூ டெமாகிரட்டிக் கட்சியின் தலைவர் ஜக்மித் சிங் கூறியுள்ளது கனடிய அரசியலில் கடைசிநேர பரபரப்பு வித்திட்டுள்ளது. எனினும், ஜக்மித்தின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஜஸ்டின் இதுவரை எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இருந்தாலும், ஆசிய நாடுகளை போன்று கனடாவில் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறுகிறார் கனடாவின் டொராண்டோ நகரை சேர்ந்த ஊடகவியலாளர் இலங்கதாஸ் பத்மநாதன்.
"முதலாம் உலகப்போர் காலத்தை விடுத்து பார்க்கும்போது, கனடாவில் எப்போதுமே மத்தியில் கூட்டணி அரசாங்கம் அமைந்ததே இல்லை. அதாவது, கனடாவில் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மை பெறாத சமயத்தில், ஒன்று ஆட்சியமைக்க உரிமைகோரும் கட்சிக்கு மற்ற கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு கொடுப்பதும் அல்லது மறுதேர்தல் நடத்தப்படுவதுமே வரலாறாக இருந்து வருகிறது. அதே நிலையே இந்த தேர்தலில் தொடரும் என்றும் நான் கருதுகிறேன்."
ரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கட்சிகள் சேர்ந்து அரசாங்கத்தை அமைப்பது, பல வழிகளில் முரண்பட்ட கருத்து நிலவுவதற்கே வழிவகுக்கும் என்பதால், கனடிய மக்கள் கூட்டணி அரசு முறைக்கு விருப்பம் தெரிவிப்பதில்லை என்று பத்மநாதன் கூறுகிறார்.
தமிழர்களின் ஆதரவு யாருக்கு?
2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கனடாவின் மொழி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பின்டி, அங்கு 1,57,000 தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் இலங்கையில் நடந்த உள்நாட்டுப்போரின்போது பல்வேறு வழிகளில் கனடாவுக்கு அகதிகளாக வந்து குடியுரிமை பெற்றவர்கள். இதை தவிர்த்து பல்லாயிரக்கணக்கான தமிழகத்தை சேர்ந்தவர்கள் கனடாவில் நிரந்தர வசிப்புரிமை பெற்று வாழ்ந்து வருகின்றனர். எனினும், நிரந்தர வசிப்புரிமை பெற்றவர்களுக்கு கனடிய தேர்தலில் வாக்களிக்கும் உரிமை இல்லை.
"தொடக்க காலம் தொட்டே தமிழர்கள் லிபரல் கட்சிக்கு ஆதரவளிக்கும் மனப்பான்மை கொண்டவர்களாகவே அறியப்படுகிறார்கள். ஆனால், அந்த நிலைமை சிறிது சிறிதாக மாற்றமடைந்து வருகிறது. உதாரணமாக, கனடாவின் முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபையீசன் நியூ டெமாகிரட்டிக் கட்சியை சேர்ந்தவர். அதன் பிறகே, கடந்த தேர்தலில் லிபரல் கட்சியை சேர்ந்த ஹரி ஆனந்தசங்கரி வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார்" என்று கூறுகிறார் பத்மநாதன்.
மற்ற அனைத்து கனடியர்களை போன்றே தத்தமது தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் தனிப்பட்ட திறன்களையும், அடுத்து அரசியல் பின்புலன்களை அடிப்படையாக கொண்டும், தமிழ் சமுதாயத்துக்கு, குறிப்பாக இலங்கை விவகாரத்தில் வலுவான கருத்து கொண்டுள்ள வேட்பாளர்களை கண்டுணர்ந்து தமிழர்கள் வாக்களிப்பதாக அவர் மேலும் கூறுகிறார்.
இலங்கதாஸ் பத்மநாதன்
இம்முறை கனடிய மக்களவை பொதுத் தேர்தலில் மூன்று கட்சிகளின் சார்பில் நான்கு தமிழர்கள் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். லிபரல் கட்சியின் சார்பில் ஒருவர், கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் இருவர், பீப்பிள் பார்ட்டி ஆஃப் கனடாவின் சார்பில் ஒருவர் என நான்கு தமிழ் வேட்பாளர்கள் இந்த தேர்தலில் களமிறங்குகின்றனர். இவர்களில், கடந்த தேர்தலில் லிபரல் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற ஹரி ஆனந்தசங்கரி மீண்டும் அதே ஸ்கார்பரோ ரூஜ் பார்க் தொகுதியில் களமிறங்குகிறார்.
நியூ டெமாகிரட்டிக் கட்சியின் சார்பில் இம்முறை தமிழர்கள் எவரும் போட்டியிடவில்லை.
முன்னிலை வகிக்கும் சீக்கியர்கள்
கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த கனேடிய மக்களவை பொதுத் தேர்தலில், சீக்கியர்கள் 18 பேர் வெற்றிபெற்றனர். அதில் ஒருவர் கனடாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகராவும் பதவி வகித்தார்.
இந்நிலையில், கனடாவில் தமிழர்களை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிக மக்கள் தொகை கொண்ட சீக்கியர்களால் எப்படி தமிழர்களை விட 18 மடங்கு அதிக நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றிபெற முடிந்தது என்று பத்மநாதனிடம் கேட்டபோது, "தமிழர்களின் வாக்கு டொராண்டோவிலுள்ள ஒரு குறிப்பிட்ட தொகுதிகளை தவிர்த்து நாடு முழுவதும் சிதறுண்டு காணப்படுகிறது. ஆனால், சீக்கியர்கள் தத்தமது தொகுதிகளின் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு மக்கள் தொகையில் மிகுந்து காணப்படுகிறார்கள்."
கனடா பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹர்ஜித் சிங்
"அதைவிட முக்கியமாக, தமிழர்களை விட சீக்கியர்களிடையே அரசியலில் இணக்கமான சூழ்நிலை காணப்படுகிறது. கனடாவாழ் தமிழ் மக்களிடையே அரசியல் விழிப்புணர்வும், அதன் மீதான ஆர்வமும் அதிகரித்தால்தான் இந்த சமுதாயத்தை முன்னிறுத்தி தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றம் செல்பவர்களின் எண்ணிக்கையும் உயரும். தற்போதைய சூழ்நிலையை பொறுத்தவரை, இந்த தேர்தலில் சில புதிய கட்சிகளின் சார்பாக போட்டியிடுபவர்களையும் சேர்த்து, கனடாவிலுள்ள அனைத்து பிரதான கட்சிகளின் சார்பாகவும் தமிழர்கள் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர் என்ற புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது" என்று கூறுகிறார் இலங்கதாஸ் பத்மநாதன்.
அதிகரிக்குமா தமிழர்களின் வாக்குப்பதிவு?
2015ஆம் ஆண்டு நடந்த கனடிய மக்களவை பொதுத் தேர்தலில் 68.3 சதவீத வாக்குகள் பதிவானது. இதுவே பல தரப்பினராலும் குறைவாக கருதப்படக் கூடும். ஆனால், இதுதான் கனடாவின் கடந்த 22 ஆண்டுகால வரலாற்றில் அதிகமான வாக்கு சதவீதம் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, தமிழர்கள் உள்பட சிறுபான்மை மக்கள் தொகையை கொண்ட இன குழுக்களிடையே தேர்தலில் வாக்களிப்பில் ஆர்வமின்மை நிலவுவதாகவும், அதை களையும் பொருட்டு #தமிழர்வாக்கு2016 என்ற பிரசாரத்தை முன்னெடுத்துள்ளதாக கூறுகிறார் டொராண்டோவை சேர்ந்த நீதன் சண்.
"2019ஆம் ஆண்டு கனடிய மக்களவை பொதுத் தேர்தலில் தமிழர்கள் வாக்களிக்கும் வீதத்தை அதிகரிப்பதற்காக அரசு பணியாற்றும் தமிழர்கள், தமிழ்க்குடிமை செயலியக்கம் ஆகிய அமைப்புகளால் இந்த கட்சிச்சார்பற்ற பரப்புரைச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழர்களிடையே நேரடியாகவும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிக்கிறோம். குறிப்பாக, தமிழ் சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்களிடையே நிலவி வரும் அரசியல் ஈடுபாடின்மையை போக்கும் வகையில் இந்த முன்னெடுப்பு அமைகிறது" என்று கூறும் நீதன் சண், டொராண்டோ நகர சபையின் முன்னாள் உறுப்பினரும், ஒண்டாரியோ மாகாணத்தின் நியூ டெமாகிரட்டிக் கட்சியின் முன்னாள் தலைவருமாவார்.
கனடியவாழ் தமிழர்களிடையே தேர்தல் அரசியலில் ஆர்வம் இல்லாததற்கான காரணம் குறித்து பதிலளித்த அவர், "என்னுடைய வாக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறதா என்ன? என்பது போன்ற கேள்விகளும், அரசியலில் பெரும்பாலானோருக்கு தீவிரமான ஆதரவு/எதிர்ப்பு நிலைப்பாடு இல்லாததும், வேலைப்பளு, அரசியல் மீதான நம்பிக்கையின்மை போன்றவற்றின் காரணமாகவும் தமிழர்கள் தேர்தலில் வாக்களிப்பதை தவிர்க்கிறார்கள்" என்று அவர் மேலும் கூறுகிறார்.
மற்ற வளர்ந்த நாடுகளை போன்று கனடாவிலும் இன்னமும் கூட, பாரம்பரிய வாக்குச்சீட்டு முறைப்படியே தேர்தல் நடைபெறுகிறது. கனடாவில் மட்டும் ஆறு வேறுபட்ட நேரமண்டலங்கள் இருந்தாலும், தேர்தல் நடைபெறும் அக்டோபர் 21ஆம் தேதி நள்ளிரவுக்குள்ளேயே முடிவுகள் வெளிவந்துவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.