மாணவி கொலை..! சைக்கோ இரட்டையர்கள் பகீர்!
18 Oct,2019
மதுரை அடுத்த உசிலம்பட்டி அருகே தோட்டத்து கிணற்றுக்கு குளிக்கச்சென்ற பள்ளி மாணவியை வேட்டையாடு விளையாடு பாணியில் பலாத்காரம் செய்த சைக்கோ குணம் கொண்ட இரட்டை சகோதரர்கள் போலீஸ் பிடியில் சிக்கி உள்ளனர்
மதுரை பள்ளி ஒன்றில் 11 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் தனது குடும்பத்தினருடன் சேடப்பட்டி அருகே உள்ள தனது உறவினர் ஊர் திருவிழாவுக்கு சென்றுள்ளார். குடும்பத்தினர் மறுநாள் ஊருக்கு திரும்பிவிட மாணவி மட்டும் உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளார்.
சம்பவத்தன்று காலையில் அங்குள்ள தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிப்பதற்கு சென்ற மாணவியை நீண்ட நேரமாகியும் காணவில்லை. அவர் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் நீண்ட நேரம் தேடிய போது அங்குள்ள மலைப்பகுதியில் கல்லால் தலை நசுக்கப்பட்ட நிலையில் மாணவி சடலமாக கிடந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சேடப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்த போது வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் இரு வில்லன்கள் போன்ற சைக்கோ மனம் கொண்ட இரட்டையர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்தது.
அந்த கிராமத்தை சேர்ந்த அம்மாசி என்பவருக்கு மது, மாதவன் என இரட்டையர்கள் உள்ளனர். சண்டையில் இருந்து சந்தோசம் வரை எதை செய்தாலும் சேர்ந்தே செய்யும் வினோத குணம் கொண்டவர்கள் இவர்கள் என்று கூறப்படுகின்றது. சில நேரங்களில் இவர்களின் எண்ணங்கள் குரூரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சம்பவத்தன்று மாணவி மட்டும் தனியாக அந்த பகுதியில் நடந்து செல்வதை நோட்டமிட்ட மாதவன் பின் தொடர்ந்து சென்றுள்ளான். அவனை தொடர்ந்து மதுவும் சென்றுள்ளான்.
தோட்டத்தில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு மாதவனும், மதுவும் சேர்ந்து மாணவியை பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் மாணவியை கொன்று சடலத்தை தூக்கிச்சென்று அடையாளம் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கல்லால் முகத்தை சேதப்படுத்து மலை புதர் மண்டிய பாறை இடுக்கில் தூக்கி வீசி விட்டு சென்றதும் தெரியவந்தது.
மாதவனை காவல்துறையினர் கைது செய்த நிலையில் தலைமறைவான மது நீதி மன்றத்தில் சரண் அடைந்துள்ளான். முதலில் அந்த மாணவியை காதலித்ததாகவும், இருவரும் பேசிவிட்டு சென்றுவிட்டதாகவும் கதை அளந்து விட்ட மாதவன் காவல்துறையினரின் சிறப்பான கவனிப்பால் பலாத்காரம் செய்து கொலைசெய்ததை ஒப்புக் கொண்டுள்ளான் என்கின்றனர் காவல்துறையினர்.
மேலும் இது போல இந்த விபரீத இரட்டையர்கள் வேறு ஏதாவது பெண்களை பலாத்காரம் செய்துள்ளனரா ? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்
நகர்புறமோ, கிராமப்புறமோ ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு இளம் பெண்கள் தனியாக சென்றால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு உதாரணமாக மாறி இருக்கின்றது இந்த விபரீத சம்பவம்..!