`இறந்த குழந்தையை பேக்கில் வைத்துக் கொண்டு அலைகிறேன்!’ – தோழியைப் பதறவைத்த மாணவி
18 Oct,2019
”குழந்தையை பேக்கில் வைத்து சுற்றிக்கொண்டிருக்கிறேன். குழந்தையை அப்புறப்படுத்த வேண்டும். அதற்கு உன் உதவி வேண்டும்.”
கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள வாத்திக்குடி பகுதியைச் சேர்ந்தவர், 20 வயது இளம்பெண் ரேஷ்மா (பெயர் மாற்றம்). கட்டப்பனையில் உள்ள அரசுக் கல்லூரியில் எம்.எஸ்ஸி படித்துவந்துள்ளார். இதற்கிடையே நேற்று தனது கல்லூரித் தோழியைத் தொடர்புகொண்ட ரேஷ்மா, “தனக்கு குழந்தை பிறந்து இறந்துவிட்டது. வீட்டுக்குத் தெரியாது. குழந்தையை பேக்கில் வைத்து சுற்றிக்கொண்டிருக்கேன். குழந்தையை அப்புறப்படுத்த வேண்டும். அதற்கு உன் உதவி வேண்டும்” என்று உதவி கேட்டுள்ளார். முதலில், ரேஷ்மா கூறுவதை நம்ப மறுத்த தோழி, குழந்தையின் புகைப்படத்தைக் கேட்டுள்ளார்.
பின்னர், வாட்ஸ்அப்பில் இறந்த குழந்தையின் புகைப்படத்தை ரேஷ்மா அனுப்பவே, அதிர்ச்சியடைந்த தோழி, இதுதொடர்பாக போலீஸுக்கும் ரேஷ்மாவின் குடும்பத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், பேக்கில் பாலிதீன் பையில் சுருட்டிவைக்கப்பட்டிருந்த குழந்தையைக் கைப்பற்றியதுடன், இளம்பெண்ணைப் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்தன. இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “ரேஷ்மா கல்லூரியில் தன்னுடன் படித்த இளைஞரைக் காதலித்துள்ளார்.
ஆனால், சில காலங்களிலேயே இவர்களின் காதல் முறிந்துள்ளது. அந்தப் பையன் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்த அந்தப் பையனை மீண்டும் ரேஷ்மா காதலிக்கத் தொடங்கியுள்ளார். இதில் கர்ப்பமாகியுள்ளார் ரேஷ்மா.
இந்த விஷயத்தை அந்தப் பையனிடம் சொல்லவே, அவன் தற்கொலை செய்துகொண்டுள்ளான். ரேஷ்மாவும் குழந்தையைக் கலைக்க முடியாமல், யாருக்கும் தெரியாமல் மறைத்துவந்துள்ளார். கல்லூரியில் தேர்வுக்காலம் என்பதால் அடிக்கடி வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அதையும் மீறி கல்லூரிக்குச் செல்ல நேர்ந்ததால், வயிற்றில் துணியைக் கட்டிக்கொண்டு வெளியே சென்றுவந்துள்ளார்.
இதற்கிடையே, 6 மாதம் கர்ப்பமாக இருந்த அந்தப் பெண்ணுக்கு செவ்வாய்க்கிழமை குறைப் பிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது. வீட்டில் பாத்ரூமிலேயே குழந்தை பெற்றுக்கொண்டவர், யாரிடம் சொல்லாமல் இருந்துள்ளார்.
வெளியே செல்லும்போது கல்லூரிக்குக் கொண்டுசெல்லும் பேக்கில் குழந்தையை மறைத்துவைத்துள்ளார். தோழியிடம் விவரத்தைச் சொல்லும்போது சிக்கிக்கொண்டார். அந்தப் பெண், குழந்தை இறந்தே பிறந்தது எனக் கூறுகிறார். ஆனால், எங்களுக்கு அதில் சந்தேகம் இருக்கிறது.
பிரேதப் பரிசோதனைக்கு குழந்தையின் உடலை அனுப்பியுள்ளோம். அதில் குழந்தையைக் கொலை செய்ததற்கான அடையாளங்கள் இருந்தால், அவர்மீது கொலை வழக்கு பதிவுசெய்யப்படும்” என்று கூறியுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது