விஜயதசமியும் – வன்னி மரமும்” மூட நம்பிக்கை என்று, மூடி மறைக்கப்பட்ட மாபெரும் வரலாறு..!
09 Oct,2019
தமிழகத்திலும் இந்தியாவிலும் வீரத்தின் அடையாளமாகவும், நெருப்பின் வடிவமாகவும், வெற்றியை தரும் சின்னமாகவும் ‘வன்னி மரம்’ கருதப்படுகிறது. தமிழர் பண்பாட்டில் வன்னி மரமும், வன்னி மரத்தின் மீது அம்பு தொடுக்கும் விழாவும் முதன்மையானவை ஆகும்.
புராணங்களில் வன்னி மரம் :
பஞ்சபாண்டவர்கள், வன்னிமரத்தில் தங்களுடைய ஆயுதத்தை மறைத்து வைத்துவிட்டு, விராட நகரத்தில் அஞ்ஞானவாசம் செய்தார்கள். இதை அறிந்த துரியோதனன், எப்படியாவது பாண்டவர்களை வெளியே கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில், விராட நகரத்தில் இருந்த பசுமாட்டை எல்லாம் சிறைபிடித்தான்.
அவனின் நோக்கம், வீண் சண்டை இழுத்து பாண்டவர்களை வெளிகொண்டு வர வேண்டும் என்பதுதான்.
இதனால் கோபம் கொண்ட விஜயனான அர்ஜுனன், விராடன் மகன் உத்தரனை முன்னிறுத்தி கொண்டு, வன்னிமர பொந்தில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து, கவுரவப்படையை விரட்டியடித்தான்.
தசமி அன்று வென்றதால் ஊர்மக்கள், ‘நம் விஜயன், தசமி அன்று கவுரவப்படையை வீழ்த்தினார். இனி பாண்டவர்களுக்கு வெற்றிதான்’ என்று பேச ஆரம்பித்தார்கள்.
அன்றிலிருந்து விஜயதசமி என்ற பெயர் ஏற்பட்டது. மகாநவமி அன்று ஆயுதங்களுக்கு பூஜை செய்ததால் ‘ஆயுதபூஜை‘ என்ற பெயரும் ஏற்பட்டது.
இராமாயணத்தில், போருக்கு புறப்படும் முன்பு இராமன் வன்னி மரத்தை வலம் வந்து வழிபட்டு, போருக்கு சென்றதாக உள்ளது.
இலக்கியங்களில் வன்னி மரம் :
தமிழ் இலக்கியங்களில் பதிற்றுப்பத்து “மன்னர் மறைத்த தாழி, வன்னி மன்றத்து விளங்கிய காடே” என்றும் மணிமேகலை “சுடலை நோன்பிகள் ஒடியா வுள்ளமொடு மடைதீ யுறுக்கும் வன்னி மன்றமும்” என்றும் குறிப்பிடுகிறது.
“வம்பார் கொன்றை வன்னி மத்தம் மலர் தூவி.
நம்பாவென்ன நல்கும் பெருமான் உறைகோயில்
கொம்பார் குரவு கொகுடி முல்லை குவிந்தெங்கும்
மொய்ம்பார் சோவை வண்பொடும் மூதுகுன்றே”
– என தேவாரத்தில் திருஞான சம்பந்தர் குறிப்பிடுகிறார்.
உலகிலுள்ள எல்லா இலைகளிலும் சிறப்பானது வன்னி இலைதான் என்பதால் – சிவபெருமான் தனது சடாமகுடத்தில் வன்னி இலையை சூடியிருக்கிறார் என்பது இந்து மத நம்பிக்கை ஆகும்.
வன்னி மரம் உருவானது குறித்து ஒரு கதை உள்ளது. புருசுண்டு முனிவரின் சாபத்துக்கு ஆளான சமி எனும் பெண் வன்னி மரமாக ஆனதாகவும், பின்னர் விநாயகரை வழிபட்டு சாபம் தீர்ந்ததாகவும் அந்த புராணக்கதை குறிப்பிடுகிறது.
வன்னி மரம் செல்வத்தை தருகிறது என்பதற்கான புராணக் கதையும் உள்ளது.முனிவரிடத்தில் கல்வி கற்ற கௌத்ச்யன் என்பவன், தனது குருநாதருக்கு குருதட்சணை தர அடம்பிடித்தான்.
பொருட்களின் மீது பற்றில்லாத குருநாதர் – கௌத்ச்யனால் முடியாது எனக் கருதி, 14 கோடி பொன் தட்சணையாக வேண்டும் என்று கேட்டார். அவன் அயோத்தியை ஆண்ட ரகுவிடம் கேட்டான். மன்னரிடமே அவ்வளவு பணம் இல்லாததால், அவர் இந்திரனிடம் கேட்டார்.
இந்திரன் அயோத்தியில் உள்ள வன்னி மரங்களில் பொன் மழை பெய்யச் செய்தார் – என்பது ஐதீகம் ஆகும்.