கொல்லும் நஞ்சுடைய பாம்புகளோடு, பெரிய ஆபத்துகள் இருந்தாலும், பரிசோதனைகளை மேற்கொள்ளும் சிலர் இப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் வாழும் டிம் ஃபிரிடே நஞ்சுடைய பாம்புகளிடம் வேண்டுமென்றே கடிபடும் செயல்பாட்டை காணொளியாக எடுத்து யுடியூபில் வெளியிட்டு வருகிறார்.
செப்டம்ர் 19ம் தேதி பாம்புக்கடி விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு பிபிசியிடம் பேசிய இவர், இந்த பரிசோதனை முயற்சி ஆபத்தானது என்று சில விஞ்ஞானிகள் கூறினாலும், இந்த ஆபத்தை ஒரு நல்ல நோக்கத்திற்காக செயல்படுத்துவதாகக் கூறினார்.
உடனடி வலி
திக விஷமுடைய பாம்புகள் கடித்த பின்னர், ஏற்படும் உணர்வை தனது யு டியூப் பார்வையாளர்களுக்கு டிம் ஃபிரிடே விளக்குகிறார்.
ஒரு மம்பா பாம்பு விரைவாக இருமுறை கொத்திய பிறகு, கைக்கு கீழே ரத்தம் வடிவதை கண்டுகொள்ளாமல் கேமரா முன்னால் வந்து டிம் ஃபிரிடே பேசுவது ஒரு காணொளியாக பதிவிடப்பட்டுள்ளது.
"கறுப்பு மம்பா பாம்பு கடித்தவுடன் கிடைத்த உடனடி வலி இது. ஆயிரம் தேனீக்களால் கொட்டப்படுவது போன்ற உணர்வு உள்ளது. தேனீக்கள் ஒன்று அல்லது இரண்டு மில்லிகிராம் நச்சு கொண்டிருக்கலாம். ஆனால், மம்பா பாம்புக் கடியில் 300 முதல் 500 மில்லிகிராம் நச்சு இருக்கலாம்," என்று அவர் தெரிவித்தார்.
"அதன் பிறகு எனக்கு வீக்கம் ஏற்பட்டது. அடுத்த சில நாட்களாக நான் படுத்தே இருக்க வேண்டியதாயிற்று. எனக்கு ஏற்பட்ட வீக்கத்தில் இருந்து அந்த பாம்புக் கடியால் எவ்வளவு நச்சு என்னுள் சென்றிருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தது. மிகவும் வலியாக இருந்தது," என்று அவர் தெரிவித்தார்.
ஆபத்தானது மற்றும் அறநெறிக்கு புறம்பானது
இவரது யு டியூப் ரசிகர்களை போல எல்லோரும் இவரது செயல்பாட்டை பெரும் வியப்பாகப் பார்க்கவில்லை.
பாம்புகளின் கடியை தாங்கிக்கொள்ளகூடிய போதிய விஷ எதிர்ப்பு சக்தியோடு தனது உடல் இருப்பதாக டிம் ஃபிரிடே கூறுகிறார்.
" இத்தகையோர் என்ன செய்கிறார்கள் என்று எங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. இவர்களோடு சேர்ந்து நாங்கள் பணிபுரியவில்லை," என்று லிவர்பூல் ட்ரோபிகல் மருத்துவ கல்லுரியின் மருத்துவர் ஸ்டுயார்ட் அயஸ்வர்த் கூறுகிறார்.
புதிதான உலக அளவில் பயன்படுத்தக்கூடிய நச்சுமுறிவு மருந்தை கண்டுபிடிக்க முயல்கின்ற நிறுவனங்களில் அயஸ்வர்த்தின் மருத்துக் கல்லூரியும் ஒன்று.
பொதுவாக, புதிய தடுப்பு மருந்துகள் முதலில் சோதனை எலிகளுக்கும் பின்னர் ஆய்வக விலங்குகளுக்கும் செலுத்தப்படுகின்றன. இவை பாதுகாப்பானவை என்று உறுதி செய்த பின்னரே, கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், மனிதர்களிடம் சோதனைகள் நடத்தப்படுகின்றன.
"இது முறைப்படுத்தப்படவில்லை என்பதால், மக்கள் தானாகவே நச்சு எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். இத்தகைய நடவடிக்கைகள் உயிரிழப்பை ஏற்படுத்தலாம். இதனை யாரும் செய்யக்கூடாது," என்கிறார் மருத்துவர் அயஸ்வர்த்.
நச்சு முறிவு மருந்து தொடர்பான ஆய்வுகளுக்கு உலக அளவிலான மருந்து தயாரிப்பு துறையில் குறைவான வழிகாட்டு நெறிகளே உள்ளன.
பொதுவான தயாரிப்பு, பாதுகாப்பு அல்லது செயல்திறன் தரம் என்று எதுவும் கிடையாது," என்று பிரிட்டனில் இருந்து இயங்கும் புதிய நச்சு முறிவு மருந்து கண்டுபிடிக்க முயலும் நிறுவனங்களில் ஒன்றான வெல்கம் டிரஸ்ட் தெரிவிக்கிறது.
தீவிர ஆபத்து
சமூக ஊடகப் பக்கத்தில் தன்னை பின்தொடர்வோர் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய வேண்டுமென தனது உயிரை பணயம் வைப்பதாக கூறப்படுவதை டிம் ஃபிரிடே கடுமையாக மறுக்கிறார்.
"யுடியூப் காணொளிகள் பதிவேற்ற வேண்டுமென நான் இதைச் செய்யவில்லை. உயிர்களை காப்பாற்ற உதவுவதில் வித்தியாசமாக இருக்கவே நான் விரும்புகிறேன். நான் இப்போது என்னுடன் பணியாற்றி வரும் மருத்துவர்களை யுடியூப் மூலம் தான் கண்டுபிடித்தேன். இது பெரியதொரு சூதாட்டம். இது பலனளிக்கிறது," என்கிறார் அவர்.
ஏறக்குறைய பல முறை இறப்பிலிருந்து நூலிழையில் தப்பியதாக தெரிவிக்கிறார் டிம் ஃபிரிடே.
உலகில் இருக்கும் ஏறக்குறைய 3,000 வகையான பாம்புகளில், சுமார் 200 வகைகள்தான் மனிதர்களைக் கொல்லக்கூடிய அல்லது குறைபாடுகள் உடையவராக ஆக்கக்கூடிய நச்சைப் பெற்றிருகின்றன. அவற்றில் பலவற்றை மிக நன்றாகவே தெரிந்து வைத்திருப்பவர் டிம் ஃபிரிடே.
அவை நாக பாம்பு, விரியன் அல்லது மாம்பா என எந்த வகை பாம்பாகவும் இருக்கலாம். கடந்த 20 ஆண்டுகளில் 200க்கு மேலான முறை விஷமுள்ள பாம்புக் கடிகளை இவர் பெற்றுள்ளார். மேலும், 700 முறைக்கு மேல் பாம்பு நச்சைத் தன்னுள் செலுத்தியும் உள்ளார்.
ஒரு பாம்பு கடிக்கின்றபோது, உடலில் செலுத்துகிற நச்சின் அளவு கணிசமாக வேறுபடுகிறது. சிலவேளைகளில் நச்சை செலுத்தாமலேயே ஒரு பாம்பு உங்களை கடிக்கலாம். எனவே, நச்சை செலுத்துவது, கடிக்கும்போது எவ்வளவு நச்சை உடலுக்குள் செலுத்த வேண்டும் என ஒழுங்குபடுத்தும் வழிமுறையாகும்.
கறுப்பு மாம்பா போன்றதொரு பாம்பின் நச்சை எதிர்க்கின்ற திறன் முழுமையாக உங்களிடம் இல்லை என்றால், உங்கள் நரம்பு மண்டலத்தின் புறப்பகுதியை இது பாதிக்கும். இதனால் உதரவிதானம் (மார்பு , வயிறு பாகத்திற்கிடையேயுள்ள தடித்த தசைச்சுவர்) உறைந்துவிடும். மூச்சுவிட முடியாமல் போகும். கண்கள் மூடிவிடும். பேச முடியாது. மெதுவாக வலிமையிழந்து, செயலற்று போவீர்கள். உங்களின் மத்திய நரம்பு மண்டலம் இந்த நச்சால் பாதிக்கப்படாது. எனவே, நீங்கள் இறக்கும் வரை சிந்திக்கலாம்," என்கிறார் டிம் ஃபிரிடே.
மிகவும் கொடிய நாக பாம்புக் கடி
தனது வீட்டின் கொல்லை புறத்தில் பல நச்சுப் பாம்புகளை வளர்க்கும் டிம் ஃபிரிடே, அந்த பாம்புகளை தன்மீது கடிக்க விட்டு சோதனைகளை மேற்கொள்கிறார்.
கறுப்பு மாம்பா என்கிற பாம்பு உலகிலேயே மிகவும் ஆபத்தான பாம்புகளில் ஒன்றாகும். 30 நிமிடத்திற்குள் ஒரு மனிதரை இதன் விஷம் உயிரிழக்க செய்யும்.
"ஆப்பிரிக்காவிலுள்ள நீர் நாக பாம்புகள் என்னிடம் உள்ளன. இந்த பாம்புக்கடி மிகவும் கொடூரமானது. இதனால் பயங்கரமான உணர்வு தோன்றுகிறது" என்று டிம் ஃபிரிடே கூறுகிறார்.
நீர் நாக பாம்பின் விஷத்தில் நரம்பு செல்களை பாதிக்கின்ற நரம்பு நஞ்சு உள்ளது.
பாம்பு நஞ்சை கொஞ்சம் கொஞ்சமாக உடலில் செலுத்துவதன் மூலம், ஒருவர் தனது உடலில் பாம்பு கடிக்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்கிவிட முடியும் என்ற கொள்கையில் ஃபிரிடே பரிசோதனை மேற்கொண்டு வருகிறார். ஆனால், அவரது இந்த வழிமுறை மிகுந்த விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
விஷ எதிர்ப்பு சக்தியை உருவாக்குதல்
இது போன்றதொரு வழிமுறையான விலங்குகளை பயன்படுத்தும் அல்கைட் என்பதுதான் தற்போது நாம் கொண்டுள்ள நச்சு எதிர்ப்பு மருந்தை கண்டுபிடிக்க வழிசெய்தது.
பல காலாசாரங்களில் பாம்புகளை கண்டு மக்கள் பயந்தாலும், அவை வணங்கப்படுகின்றன.
19ம் நூற்றாண்டில் இருந்து இதுவரை நச்சு முறிவு மருந்து மாறாமல் ஒரே மாதிரியானதாக இருந்து வருகிறது. சிறிய அளவு நச்சு குதிரைகள் அல்லது ஆடுகளுக்கு செலுத்தப்பட்டு, பின்னர் அவற்றின் ரத்தத்தில் இருந்து நோய் எதிர்ப்பு பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன.
"என்னை கொல்ல விரும்புகின்ற இந்த உயிரினங்கள் நாம்மோடு உள்ளன. நான் சாக விரும்பவில்லை. எனவே, அடிப்படையில் நான் குதிரையாக மாற வேண்டும். நாம் ஏன் நம்மை நச்சு எதிர்ப்பு தன்மை கொண்டவர்களாக மாற்றிக்கொள்ள கூடாது," என்று கேள்வி எழுப்புகிறார் ஃபிரிடே.
51 வயதான முன்னாள் டிரக் ஓட்டுநரான இவர் நோய் எதிர்ப்பு நிபுணர் அல்ல. பல்கலைக்கழகம் சென்றவரும் அல்ல. நச்சுத் தன்மையுள்ள உயிரினங்களால் கொல்லப்படலாம் என்கிற அச்சத்தால் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னால் அவர் இவ்வாறு வழக்கத்திற்கு மாறான நடைமுறையில் பரிசோதனையை மேற்கொள்ளத் தொடங்கினார்.
சிலந்தி மற்றும் தேள் ஆகியவற்றின் நச்சை முதலில் உடலில் செலுத்த தொடங்கிய ஃபிரிடே, பின்னர் நாக பாம்பு, காப்பர்ஹெட் பாம்பு போன்றவற்றை கடிக்க விட்டு பரிசோதனை மேற்கொள்ளும் அளவுக்கு முன்னேறினார்
கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்
முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil
"இந்த கிரகத்திலுள்ள எல்லா விஷமுள்ள பாம்புகளையும் நான் பயன்படுத்தவில்லை. உங்களை மிகவும் விரைவாக கொல்லக்கூடிய நஞ்சை கொண்டுள்ள பாம்புகளை மட்டுமே தேர்வு செய்து காட்டியுள்ளேன்" என்கிறார் ஃபிரிடே.
இத்தகைய பரிசோதனைகளால் அவர் மீது பல வடுக்கள் உள்ளன. அவர் மேற்கொண்ட பரிசோதனைகளின்போது பலமுறை இறப்பின் விளிம்பு வரை சென்று பிழைத்துள்ளார். என்றாலும், எந்தவித மருத்துவ சிகிச்சையும் இல்லாமல் பாம்களிடம் கடிபடுவதை மகிழ்ச்சியோடு பரிசோதித்து வருகிறார்.
"12 முறை மீண்டு வருவதற்கு மிகவும் கஷ்டப்பட்டுள்ளேன். இத்தகைய பரிசோதனை மேற்கொண்ட முதலாண்டில் இரண்டு நாக பாம்புகளால் கடிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர வேண்டியதாயிற்று. இத்தகைய அனுபவத்தை அனுபவித்து கற்றுக்கொள்ள வேண்டும். இதனை எந்தவொரு மருத்துவரும் நமக்கு கற்றுக்கொடுக்க முடியாது," என்கிறார் ஃபிரிடே.
நோய் எதிர் பொருட்களை இரண்டு மடங்காக்குதல்
இவரது வழிமுறை வேலை செய்கிறது என்பதை இவர் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனைகள் காட்டுகின்றன.
விஷமுறிவு மருந்துகளின் விலை அதிகமாக இருப்பதோடு, உயிரை அழிககும் ஒவ்வாமை பாதிப்புகளையும் ஏற்ப்படுத்த கூடியதாகும்.
பிறரோடு ஒப்பிடுகையில், விஷத்தை முறித்து விடுவதற்கான நோய் எதிர் பொருட்களை (ஆன்பாடிகள்) அளவில் இரண்டு மடங்கு என்னுள் இருக்கிறது. இது ஆய்வக சோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், ஃபிரிடேயின் யுடியூப் காணொளிகளை நோய் எதிர்ப்பு நிபுணர் ஜேக்கப் கெலன்வில்லி பார்த்தார். நச்சு முறிவு மருந்தை கண்டுபிடிக்கும் சொந்த நிறுவனம் ஒன்றை தொடங்குவதற்காக மருந்து தயாரிப்பு நிறுவனமான பிஃபிஸரில் முதன்மை விஞ்ஞானி என்ற வேலையை விட்டு சென்றவர்தான் ஜேக்கப் கெலன்வில்லி.
"டிம் ஃபிரிடே செய்வது குறிப்பிடும்படியானதுதான். ஆனால் மிகவும் ஆபத்தானது. இவ்வாறு செய்ய வேண்டுமென நான் யாரிமும் கேட்டுக்கொள்ளமாட்டேன்" என்கிறார் ஜேக்கப் கெலன்வில்லி.
புதிய நச்சு முறிவு மருந்தை தயாரிப்பதற்கு ஃபிரிடேயின் ரத்த மாதிரிகளை இந்த நிறுவனம் பயன்படுத்தி வருகிறது.
எனது டிஎன்ஏ, ஆர்என்ஏ, ஆன்டிபாடிகள் ஆகியவற்றை எடுத்துக்கொண்ட அவர்கள் அவற்றை படியெடுத்தார்கள். இதுதான் இப்போதைய உயரிய அறிவியல் நுட்பம்," என்கிறார் டிம் ஃபிரிடே.
புறக்கணிக்கப்பட்ட நோய்
ஒவ்வொர் ஆண்டும் 54 லட்சம் பேர் பாம்புகடியால் துன்புறுகின்றனர். இதனால் இறப்போரின் எண்ணிக்கை 81 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேர் என்று மதிப்பிட்டப்படுகிறது. 4 லட்சத்திற்கு மேலானோர் நிரந்தர குறைபாடுகளை பெறுவதால், அவை அவர்களின் வாழ்க்கை தரத்தையே அழித்துவிடுகிறது.
உலகின் பல பகுதிகளில் மனிதர்களும், பாம்பும் ஒரே நிலப்பகுதியில் வாழ்வதால், பாம்புகளால் கடிபடும் சம்பங்கள் அதிகம் நிகழ்கின்றன.
2017ம் ஆண்டு வரை பாம்புகடியை புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய் என்று உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியிருந்தது.
ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 19ம் தேதி பாம்புக்கடி விழிப்புணர்வு நாளாக கடைபிடிக்கப்படுகிறது. ஆசியா, ஆப்பிரிக்கா மற்றம் தென் அமெரிக்க நாடுகளில் நவீன சுகாதார பராமரிப்பு வசதிகளை இன்னும் பெற வேண்டியுள்ள கிரமப்புற சமூகங்களை பாதிக்கும் பிரச்சனை ஒன்றை சமாளிக்கும் நோக்கில் வெளிப்படையாக இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.
சேமித்து வைப்பதில் உள்ள கட்டுமான வசதி குறைபாடுகள் அல்லது பல்வேறு வகையான பாம்புகளுக்கு என்றில்லாமல் ஒரு குறிப்பிட்ட பாம்பின் நச்சிற்கு மட்டுமே மருந்து வேலை செய்வது ஆகிய பிரச்சனைகளால் பல நாடுகளில் நச்சு முறிவு மருந்து பெரிதாக பயன்படாத நிலைமை உள்ளது.
சோதனை எலி
சிறந்த நச்சு முறிவு மருந்தை கண்டுபிடித்து புதிய சிகிச்சை முறையை உருவாக்க 100 மில்லியன் டாலர் நிதியை ஒதுக்குவதாக வெல்கம் டிரஸ்ட் இந்த ஆண்டு மே மாதம் அறிவித்தது.
பல நிறுவனங்கள் பாதுகாப்பான, செலவு மிகவும் குறைந்த மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் முனைப்போடு செயல்பட்டு வருகின்றன.
புதிய நச்சு முறிவு மருந்தை உருவாக்கிவிட்டால், கெலன்வில்லி நிறுவனத்தோடு ஃபிரிடே ஏறபடுத்தியுள்ள ஒப்பந்தம் கணிசமாக அவர் சம்பாதிக்க வழிசெய்யும்.
"பணத்திற்காக பாம்புகளின் கடிபட வேண்டாம். ஆனால், நச்சு முறிவு மருந்து கண்டுபிடித்துவிட்டால் அதிக பணம் கிடைக்கும். இதற்கான ஒப்பந்தம் ஒன்றில் நான் கையெழுத்திட்டுள்ளேன்" என்று ஃபிரிடே தெரிவிக்கிறார்.
அடுத்தடுத்து வரும் பரிசோதனைகளில் கெலன்வில்லி நிறுவனம் மேம்பாடு கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
"இந்த ஆய்வு மிகவும் நீண்டது. நாங்கள் சோதனை எலி மீது பரிசோதனை மேற்கொள்ளயிருக்கிறோம்" என்று இந்த நிறுவனம் தெரித்துள்ளது.
ஒரு நோக்கத்திற்காக தீவிர அணுகுமுறை மேற்கொண்டு வருவதால், கெலன்வில்லி நிறுவனமும், ஃபிரிடேயும் விஞ்ஞானிகள் சமூதாயத்தின் கடும் விமர்சனத்தை பெற்றுவருகின்றனர். ஆனால், தாங்கள் மேற்கொள்ளும் ஆய்வுக்கு சிறந்த நியாயப்படுத்தலையும் வழங்கி வருகின்றன. "உயிரி அறநெறியை மிகவும் கவனமாக நாங்கள் கடைபிடித்து வருகிறோம். பணியிடம் தொடர்பான காயம், ஹெச்ஐவி பொன்ற உயர் ஆபத்து நிகழ்வுகளை ஆய்வு செய்கிறபோது மேற்கொள்ளும் மாதிரியை போன்றே நாங்கள் பயன்படுத்தி வருகிறோம்" என்று கெலன்வில்லி நிறுவனம் பதிலளித்துள்ளது.
பிறர் பின்பற்றுவதற்கான எளிதான வழி அல்ல என்பதால் தனது அணுகுமுறையை மறைத்து வரும் ஃபிரிடே, இதனால் நல்ல முடிவுகள் கிடைக்கும் என்கிறார்.
"எனது இந்த தீவிர அணுகுமுறைக்கு ஒரு நோக்கம் உள்ளது. செலவு குறைவாக இருக்கின்ற, அனைவருக்கும் கிடைக்கின்ற, உலக அளவில் பயன்படுத்தக்கூடிய விஷமுறிவு மருந்து ஒன்றை கண்டுபிடிக்கும் வழியில் நான் செல்கிறேன்" என்று டிம் ஃபிரிடே தெரிவிக்கிறார்,