`நம்பிப் போனேன், காதலனும் நண்பர்களும் இப்படிப் பண்ணிட்டாங்க!’ -16 வயது சிறுமி கண்ணீர் வாக்குமூலம்
தூத்துக்குடியில் 16 வயது சிறுமியை காதலிப்பதாகச் சொல்லி, கூட்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட காதலன் உட்பட 4 பேர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி நீதிமன்றம்
தூத்துக்குடி மாவட்டம், சூரங்குடி அருகிலுள்ள வடக்குசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்.
இவர், தூத்துக்குடியில் உள்ள தனியார் கடல்மீன் உணவு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
அதே கம்பெனியில் விளாத்திகுளத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரும் வேலை பார்த்துவந்துள்ளார்.
இவர்கள் இருவரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். இதையறிந்த சிறுமியின் பெற்றோர், மகளைக் கண்டித்ததுடன் வேலைக்குச் செல்ல வேண்டாம் எனக்கூறி நிறுத்திவிட்டனர்.
சுரேஷ்குமாருக்கும் சிறுமிக்கும் தொடர்பு நீடித்துள்ளது. இந்த நிலையில், “எப்படியும் நான்தான் உன்னைக் கல்யாணம் பண்ணப் போறேன்” எனச் சொல்லி இருவரும் அடிக்கடிப் போனிலும், தனிமையிலும் சந்தித்துப் பேசிவந்துள்ளனர்.
சம்பவத்தன்று இருவரும் பைக்கில் வேம்பார் கடற்கரை சென்றுள்ளனர். நண்பர்களையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார் சுரேஷ்குமார்.
கடற்கரை சாலையில் பைக் நின்றபோது சுரேஷின் நண்பர்கள் சிறுமியிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளனர்.
இதையடுத்து, அந்தச் சிறுமி கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். அதற்குள் சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர்.
உடனடியாக பொதுமக்கள், காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த காவல்துறையினர், சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது, காவல்துறையினரிடம் சிறுமி அளித்த வாக்குமூலத்தில், “நானும் சுரேஷ்குமாரும் ஒரு வருசமா லவ் பண்ணிட்டு இருக்கோம்.
வீட்டுக்குத் தெரியாம எங்கேயாவது சந்திச்சுப் பேசுவோம். வழக்கம்போல, கடந்த 19-ம் தேதி வியாழக்கிழமை காலையில போன் பண்ணி, `வேம்பார் கடற்கரைக்குப் போவோம். அங்கு பேசிக்கிட்டிருக்கலாம்’னு சொல்லி என்னை வரச்சொன்னார். நானும் நம்பிப் போனேன்.
விளாத்திகுளத்துல இருந்து வேம்பார் கடற்கரைப் பகுதிக்குப் போகுற ரோட்டுல திடீர்னு பைக்கை நிறுத்தினார்.
`எதுக்கு நடு ரோட்டுல நிப்பாட்டுறிங்க?’ன்னு கேட்டதுக்கு, `என்னோட ஃப்ரெண்ட்ஸ் மூணு பேரு வர்றாங்க’ன்னு சொன்னார்.
`உங்க ஃப்ரெண்ட்ஸ் எதுக்கு நம்மகூட வர்றாங்க’ன்னு கேட்டேன். `சும்மாதான் வர்றாங்க’ என்றார்.
வேம்பார் கடற்கரைக்குப் போவதாகச் சொல்லி, அந்தப் பகுதியிலுள்ள காட்டுப்பகுதிக்குள்ள போய் பைக்கை நிப்பாட்டினார்.
இங்கு எதுக்கு வந்திருக்கோம்னு கேட்டு பேசிக்கிட்டு இருக்கும்போதே அவரோட ஃப்ரெண்ட்ஸ் மூணு பேரும் பைக்குல வந்தாங்க. என்னபாலியல் ரீதியாத் துன்புறுத்தினாங்க.
கைது செய்யப்பட்ட 4 பேர்
சத்தம் போட்டேன். சத்தத்தைக் கேட்டு அந்தப் பகுதியில ஆடு மேய்ச்சுக்கிட்டுருந்தவங்க ஓடி வந்தாங்க. அதுக்குள்ள நான் மயக்கமடைஞ்சுட்டேன்.
நாலு பேரும் தப்பிச்சுப் போயிட்டாங்க” எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தப்பியோடிய சுரேஷ்குமார் மற்றும் அவர்களது நண்பர்களான ராமலிங்கம், அழகுராஜா, ராமச்சந்திரன் ஆகியோரை விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் நாகலட்சுமி கைது செய்து போக்ஸோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்தார்.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நான்கு பேரும் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுமியை காதலன் உட்பட நான்கு பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.