காதலனை தாக்கி விரட்டி விட்டு காதலி பாலியல் வன்கொடுமை!
19 Sep,2019
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வனப்பகுதிக்குள் தனிமையாக இருந்த முறையற்ற காதல் ஜோடியை மிரட்டி, பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
வாழப்பாடி அடுத்த சின்னமநாயக்கன்பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ். பிளாஸ்டிக் குடங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் 25 வயதான தினேசுக்கும், அதே நிறுவனத்தில் பணிபுரியும் 32 வயதான திருமணமான பெண்ணுக்கும் தகாத உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
திங்கட்கிழமை காலையில் அந்தப் பெண்ணை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு நெய்யமலை அடிவாரத்திலுள்ள வனப்பகுதிக்கு தினேஷ் அழைத்துச் சென்றதாகச் சொல்லப்படுகிறது.
இருசக்கர வாகனம் வனப்பகுதியை ஒட்டி நிற்பதைக் கண்ட 6 பேர் கொண்ட போதைக் கும்பல், நிச்சயம் பெண்ணை அழைத்துக் கொண்டு தான் வந்திருக்க வேண்டும் என எண்ணி காத்துக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் பெண்ணுடன் வெளியே வந்த தினேஷை அந்தக் கும்பல் சரமாரியாகத் தாக்கத் தொடங்கியது.
ஆள் அரவமற்ற அந்தக் காட்டில் 6 பேரிடம் சிக்கிக் கொண்ட தினேஷ் காதலியை விட்டு விடுமாறு கெஞ்சியுள்ளார்.
ஆனால் தினேஷை அடித்து விரட்டிய 6 பேர் கொண்ட கும்பல் பெண்ணை வனப்பகுதிக்குள் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது.
கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவோர் வரும் சத்தம் கேட்டு அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இதை அடுத்து குற்றுயிரும், குலையுயிருமாக அங்கிருந்து தப்பிய இளம்பெண், தனக்கு நேர்ந்த துயரம் குறித்து ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இடையப்பட்டி அழகேசன், சேதுபதி, மணிகண்டன், தாண்டானூரைச் சேர்ந்த கோகுல், வெங்கடேசன், கலையரசன் ஆகிய 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற வேறு ஏதேனும் சம்பவங்களுக்கும், அந்தக் கும்பலுக்கும் தொடர்புள்ளதா என்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.