பெண்ணொருவரின் சடலத்தை அவரின் நான்கு மருமகள்மார்கள் இணைந்து சுமந்து சென்ற சம்பவம் இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
மஹாராஷ்டிராவின் காஷிநாத் நகரைச் சேர்ந்த சுந்தர்பாய் நைக்வாடே எனும் 83 வயதான பெண் அண்மையில் காலமானார்.
அவரின் இறுதிக்கிரியையின்போது பூதவுடலை மருமகள்மார் நால்வர் சுமந்து சென்றனர்.
இப்பெண்ணின் மகன்மாரின் மனைவியரான லதா நைக்வாடே, உஷா நைக்வாடே, மேற்படி மகன்களின் ஒன்றுவிட்ட சகோதரர்களின் மனைவியரான மனீஷா நைக்வாடே மற்றும் மீனா நைக்வாடே ஆகியோரே இந்த நான்கு மருமகள்மார் ஆவர்.
சுந்தர்பாய் நைக்வாடே 4 மருமகள்களையும் மகள்களைப் போலவே நடத்தி வந்தார் என மேற்படி மருமகள்மார் தெரிவித்துள்ளனர்.
அவர் கண்தானம் செய்திருந்த நிலையில் இறந்தவுடன் அவரது ஆசைப்படியே கண்கள் தானம் செய்யப்பட்டன.
தங்களை மகள் போல் நன்கு கவனித்துக் கொண்ட மாமியாருக்கு இறுதியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த மருமகள்கள்,
இறந்தமாமியாரின் உடலை மயானம் வரை சுமந்து சென்றனர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.