தமிழ் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை!
07 Sep,2019
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே காவித்தண்டலம் பகுதியில் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டை அடுத்த காவித்தண்டலம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த இளம்பெண் ஒருவரும், மேலும் 3 பெண்களும் அருகில் உள்ள காப்புக்காட்டில் அடுப்பெரிப்பதற்காக விறகு வெட்டுவதற்கு நேற்று மாலை சென்றுள்ளனர். விறகு வெட்டி முடித்தவுடன் 3 பெண்களும் வீட்டுக்கு புறப்பட்டுள்ளனர். ஆனால் ஒருவர் மட்டும் விறகு போதவில்லை, இன்னும் கொஞ்சம் வெட்டி எடுத்துவருவதாக கூறியுள்ளார்.
இதனால் மற்ற 3 பெண்களும் திரும்பி வந்துவிட்டனர். மேலும் விறகு வெட்டுவதாக கூறிய பெண் மட்டும் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அச்சமடைந்த மற்ற பெண்கள், அவரை காப்புக்காட்டில் மீண்டும் தேடியுள்ளனர். அப்போது அந்தப் பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதனால் மற்ற பெண்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் அளித்த தகவலின்பேரில் சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.