விருப்பத்துக்கு இணங்காத பெண் – தீயிட்டு கொளுத்திய கொடூரன்!
02 Sep,2019
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே, வெளிநாட்டில் பணியாற்றுபவரின் மனைவியை தவறான நோக்கத்துடன் அணுகியவன், அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்ததால் மண்ணெண்ணையை ஊற்றி எரித்துவிட்டு, விபத்து என நாடகமாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் பாக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் கணவர் வேலை நிமித்தமாக சிங்கப்பூர் சென்றுள்ள நிலையில், மாமனார், மாமியார் மற்றும் 2 குழந்தைகளுடன் அவர் வசித்து வருகிறார்.
வயல்பகுதியில் அமைந்துள்ள அந்த பெண்ணின் வீட்டுக்கு அவரது உறவினர் மகன் அடிக்கடி வந்து செல்வது உண்டு. அவ்வாறு வந்து செல்கையில் ஒரு நாள், தனது நண்பனான ஏழுமலை என்பவனையும் அழைத்து வந்துள்ளான் அந்த நபர்.
பெண்ணின் வீட்டுச் சூழலை நோட்டம் விட்ட ஏழுமலை, கணவர் வெளிநாட்டில் இருப்பதை சாதகமாக்கிக்கொண்டு அவரிடம் தவறான நோக்கத்துடன் அணுகியதாகக் கூறப்படுகிறது. அவரது செல்போன் எண்ணை நண்பன் மூலம் பெற்று ஆபாச செய்திகளை அனுப்பியும் தொல்லை கொடுத்து வந்துள்ளான் ஏழுமலை.
சனிக்கிழமை பெண்ணின் குடும்பத்தினர் வெளியே சென்றிருந்ததை தெரிந்து கொண்டு வீட்டில் தனியாக இருந்த அவரிடம் ஏழுமலை அத்துமீற முயற்சித்துள்ளான். அதற்கு அந்தப் பெண் உடன்படாமல் எதிர்த்ததால், அவர் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துள்ளான் ஏழுமலை.
பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்தபோது, அவரைக் காப்பாற்றுவது போல் நாடகமாடிய ஏழுமலை, அந்தப் பெண் தற்கொலைக்கு முயன்றதாகவும் தாம் காப்பாற்ற வந்ததாகவும் கூறியதாகத் தெரிகிறது. அந்த நாடகத்தின்போது ஏழுமலைக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. 90 விழுக்காடு காயங்களுடன் பெண்ணையும் சிறிய அளவில் காயமடைந்த ஏழுமலையையும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார், பெண்ணிடம் வாக்குமூலம் பெற்ற பிறகே ஏழுமலையின் நாடகம் அம்பலமானது. இதனையடுத்து அவன் மீது அத்துமீறி வீட்டுக்குள் நுழைதல், கொலை முயற்சி உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே மேல்சிகிச்சைக்காக பாதிக்கப்பட்ட பெண் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
வீட்டுக்கு வரும் புதிய நபர்களின் நடவடிக்கைகளையும் அணுகுமுறைகளையும் கவனித்து, தவறாக இருப்பின் அவர்களை புறக்கணிப்பது நல்லது என்று கூறும் போலீசார், தாமதிக்காமல் அதுபோன்ற நபர்கள் மீது புகார் அளிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கின்றனர்