பெரு நாட்டில் அதிர்ச்சி : பலியிடப்பட்ட 227 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கண்டெடுப்பு
28 Aug,2019
பெரு நாட்டின் தலைநகரான லிமாவின் வடக்குக் கடற்கரை சுற்றுலாத் தளமான ஹுவான்சாகோவில் உள்ள மிகப்பெரிய பலியிடும் பீடத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு முதல் தோண்டி ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
சிமு நாகரிகம் இருந்த இடத்தில் பெருமளவில் பலியிடப்பட்ட 227 குழந்தைகளின் எலும்புகளை பெரு நாட்டின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
"பலியிடப்பட்ட குழந்தைகளின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய தளம் இது" என்று தலைமை தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஃபெரன் காஸ்டிலோ பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.
கடவுள்களை கவுரவிக்கவும், ’எல் நினோ’ நிகழ்வு நடக்காமல் இருக்க இயற்கையை சமாதானப்படுத்தவும் 4 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் சிமு நாகரீக கலாச்சாரச் சடங்கில் பலியிடப்பட்டுள்ளதாக காஸ்டிலோ கூறியுள்ளார். மேலும், ஈரமான வானிலையின் போது குழந்தைகள் பலியிடப்பட்டதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளனர்.
"கணக்கில் அடங்காத ஏராளமான குழந்தைகளின் எழும்புக்கூடுகள் கிடைத்துள்ளன. எங்கு தோண்டிப் பார்த்தாலும் குழந்தைகளுடைய எலும்புகள் கிடைத்துக்கொண்டே இருக்கிறது" என்று காஸ்டிலோ கூறினார். சில எலும்புகள் தோல் மற்றும் முடிகளுடன் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பலியிடப்பட்ட குழந்தைகளின் எலும்புகள் கடற்கரை எதிரே உள்ள திசையில் இருப்பதாகவும், இன்னும் பல எலும்புக் கூடுகள் மேலும் தோண்டும் போது கிடைக்கலாம் என்று காஸ்டிலோ கூறியுள்ளார்.
கி.பி.1200-1400 வரையிலான இடைப்பட்ட ஆண்டுகளில் பல குழந்தைகளை பலியிடும் தளமாக சிமு நாகரிகம் இருந்துள்ளது. கடந்த ஜூன் 2018-ஆம் ஆண்டு ஹுவான்சாகோவில் இருந்து சிறிது தொலைவில் உள்ள பம்பா-லா-க்ரூஸ் நகரத்தின் சுற்றுப் பகுதிகளில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் முதன்முதலில் குழந்தைகளின் 56 எலும்புக்கூடுகளை கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த ஏப்ரல் 2018-ஆம் ஆண்டு பம்பா-லா-க்ரூஸில் பலியிடப்பட்ட 140 குழந்தைகள் மற்றும் 200 ஒட்டகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. பெரு கடற்கரை வரை நீடித்துள்ள சிமு நாகரிகம் இன்கா சாம்ராஜ்ஜியத்தால் கைப்பற்றப்பட்ட பின்னர் கி.பி.1475 -ல் காணாமல் போய்விட்டது.