` 16 மாநிலங்கள், 600 பெண்கள்!’ – 2,000 நிர்வாணப் படங்களோடு கைதான சென்னை இன்ஜினீயர்
25 Aug,2019
சென்னையில் உள்ள பிரபல ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றிய சாப்ட்வேர் இன்ஜினீயர் கிளெமென்ட் ராஜ் செழியனை தெலங்கானா போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவரின் செல்போனை ஆய்வு செய்த போலீஸார் அதிர்ச்சியில் உறைந்தனர்.
கிளெமென்ட் ராஜ் செழியன்
சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினீயர் கிளெமென்ட் ராஜ் செழியன் என்ற பிரதீப்பை தெலங்கானா மாநிலத்தின் மியாப்பூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவரின் செல்போன்களைப் பார்த்த போலீஸார் ஒருகணம் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அந்தச் செல்போன்களில் 16 மாநிலங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் இருந்துள்ளன.
அதுகுறித்து இன்ஜினீயர் கிளெமென்ட் ராஜ் செழியனிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து மியாப்பூர் போலீஸார் கூறுகையில், “கடந்த ஏப்ரல் மாதத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த 29 வயதான திருமணமான பெண் ஒருவர் எங்களிடம் புகார் ஒன்றை அளித்தார்.
அதன் அடிப்படையில்தான் விசாரணையைத் தொடங்கினோம். ஹைதராபாத் பெண்ணிடம் பிரதீப் என்ற பெயரில் ஒருவர் பேசியுள்ளார்.
அவர், வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்திவருவதாகவும் பிரபலமான நட்சத்திர ஹோட்டலுக்கு பெண் வரவேற்பாளர் தேவை என்றும் அந்தப் பெண்ணிடம் போனில் கூறியுள்ளார்.
`வேலை தொடர்பாக எங்கள் நிறுவனத்தில் ஹெச் ஆர் உங்களிடம் பேசுவார்’ என்று முதலில் கூறியுள்ளார். இந்தச் சமயத்தில்தான் பிரதீப் மீண்டும் அந்தப் பெண்ணைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
அப்போது, `எங்கள் நிறுவனத்தில் நீங்கள் பணியாற்ற சில நிபந்தனைகள் உள்ளன. அதாவது, வரவேற்பாளர் பணி என்பதால் நீங்கள் அழகாக இருக்க வேண்டும்.
அதனால், உங்களின் புகைப்படம் மற்றும் பயோடேட்டாவை வாட்ஸ் அப் நம்பருக்கு அனுப்பி வையுங்கள்’ என்று கூறியுள்ளார்.
அதை நம்பிய அந்தப் பெண்ணும் போட்டோவுடன் கூடிய பயோடேட்டாவை இமெயிலுக்கும் பிரதீப்பின் வாட்ஸ்அப் நம்பருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
போட்டோவைப் பார்த்த பிரதீப், `நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், இதனால் உங்களுக்கு வேலை நிச்சயம் உண்டு. மேலும், உங்களுடைய பாஸ்போர்ட் அளவு உள்ள புகைப்படத்தில் முகம் மட்டுமே தெரிகிறது.
எனவே, முழு அளவுகொண்ட புகைப்படங்களை அனுப்புங்கள்’ என்று கூறியுள்ளார். அதை நம்பிய அந்தப் பெண்ணும் தன்னுடைய புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகுதான் பிரதீப், தன்னுடைய சுயரூபத்தை காட்டத் தொடங்கியுள்ளார்.
`பெண் ஹெச் ஆர்’ என்ற போர்வையில் பிரதீப், வாட்ஸ்அப்பில் ஹைதராபாத் பெண்ணுடன் சேட்டிங் செய்துள்ளார்.
அப்போது, `உங்களின் நிர்வாண புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பி வையுங்கள். நானும் ஒரு பெண் என்பதால் எந்த பிரச்னையும் இல்லை’ என்று பிரதீப் கூறியுள்ளார்.
மேலும், சம்பந்தப்பட்ட ஹைதராபாத் பெண்ணின் குடும்ப பின்னணி உள்ளிட்டவற்றை போனிலேயே கேட்டறிந்துள்ளார்.
முதலில் தயக்கம் காட்டிய அந்தப் பெண், பின்னர் தன்னுடைய நிர்வாணப் புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளார்.
அதன்பிறகு, வீடியோ காலில் பேசிய பிரதீப், `நிர்வாண புகைப்படத்தை இணையதளம் மூலம் வெளியிட்டுவிடுவேன்’ என்று மிரட்டியுள்ளார்.
அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஹைதராபாத் பெண், பிரதீப் கூறியவற்றையெலாம் கேட்கத் தொடங்கியுள்ளார். பிரதீப்பின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்ததால் போலீஸில் புகார் கொடுத்தார்.
பிரதீப் குறித்து விசாரித்தோம். அப்போது அவர், சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் சென்னையில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினீயராக வேலைபார்ப்பதும் தெரியவந்தது.
அவரின் மனைவியும் இன்ஜினீயர் என்றும் தெரிந்தது. பிரதீப்பின் உண்மையான பெயர் கிளெமென்ட் ராஜ் செழியன் என்பதைக் கண்டறிந்தோம்.
ஹைதராபாத் பெண்ணைப் போல 16 மாநிலங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி நிர்வாண புகைப்படங்களைப் பெற்றிருக்கிறார்.
பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் இருந்தன” என்றனர்.
miyapur police station
கிளெமென்ட் ராஜ் செழியனிடம் போலீஸார் விசாரித்தபோது அவர் கூறிய தகவல்களைக் கேட்டு போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கிளெமென்ட் ராஜ் செழியனுக்கு இரவுப் பணியும் அவரின் மனைவிக்கு பகல் பணியும் ஐ.டி நிறுவனத்தில் வழங்கப்பட்டுள்ளன.
இதனால் வேலை முடிந்து கிளெமென்ட் ராஜ் செழியன் பகலில் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். அப்போதுதான் அவர் போலியான வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை இணையதளத்தில் தொடங்கியுள்ளார்.
அதற்கு வரவேற்பாளர் உட்பட சில பணியிடங்களுக்கு ஆள் தேவை என்று இணையதளத்தில் விளம்பரம் செய்துள்ளார். விளம்பரத்தில் செல்போன் நம்பர்களையும் கொடுத்திருந்தார்.
அதில் தொடர்பு கொண்டு பேசிய பெண்களின் நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்களை வேலை தருவதாக ஆசைவார்த்தைகளைக் கூறி வாட்ஸ்அப் மூலம் பெற்றுள்ளார்.
அந்தப் புகைபடங்கள், வீடியோக்களை வைத்தே அடுத்தடுத்து சம்பந்தப்பட்ட பெண்களை மிரட்டி பல நிர்வாண வீடியோக்களை வீடியோ அழைப்பு மூலம் எடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கிளெமென்ட் ராஜ் செழியன், தன்னுடைய முகம்கூட தெரியாத அளவுக்கு புத்திச்சாலித்தனமாக ஏமாற்றிவந்துள்ளார். ஆனால், ஹைதராபாத் பெண் கொடுத்த புகாரில் கிளெமென்ட் ராஜ் செழியன் தெலங்கானா போலீஸிடம் சிக்கிக்கொண்டார்.
Clement Raj Chezyian
செழியனிடம் சிக்கிய பெண்களில் 60 பேர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள். விரல்விட்டு எண்ணும் வகையில் தமிழக பெண்கள் உள்ளனர்.
ஏனெனில், தமிழக பெண்களை ஏமாற்றினால் சிக்கிக் கொள்வோம் என்ற பயத்தில் கிளெமென்ட் ராஜ் செழியன் வடமாநிலப் பெண்களைக் குறி வைத்து ஏமாற்றிவந்துள்ளார்.
`அவரின் இந்தச் செயல் அவரின் மனைவிக்கும் குடும்பத்தினருக்கும் தெரியாது’ என்றார் போலீஸ் உயரதிகாரி ஒருவர்.
கைதான கிளெமென்ட் ராஜ் செழியனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் மியாப்பூர் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
போலீஸ் விசாரணையில் கிளெமென்ட் ராஜ் செழியன் குறித்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது