தந்தை பெரியார் கடவுள் தண்ணீரைப் போன்றவர்
21 Aug,2019
நான் யாருடைய இறை நம்பிக்கையையும் கொச்சைப்படுத்த விரும்ப வில்லை. விரும்பவும் மாட்டேன். கடவுள் உண்டு என்று நம்புபவர்களிடையேகூட மதம் சார்ந்த வேறுபாடுகள் உண்டு. நமது இந்து மதத்தில் எண்ணிக்கையில் அடங்காத கடவுள்கள் பல உண்டு. பெரிய தெய்வ வழிபாடு முதல் சிறுதெய்வ வழிபாடு வரை பல்வேறு மக்களால் தனித்தனியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இன்று கீச்சகம் அதாவது ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் கீழ்க்காணும் வாசகங்களை பதிவிட்டிருந்தார். எனக்கு அது வருத்தமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. அந்த வாசகம் என்னவென்றால்,
அத்திவரதரை ஆராதிக்க பல கோடி நல் இதயங்கள் உண்டு
பெரியார் சிலையை பார்க்க தெரு கோடியில் கூட ஆட்கள் இல்லை
கடவுள் தண்ணீரைப் போன்றவர்:
கடவுள் நம்பிக்கை உள்ளவர்களில் 99 சதவிகிதத்தினர், கடவுளிடம் வேண்டும்போது தானும் தான் சார்ந்த குடும்ப உறவுகளும் நன்றாக இருக்க வேண்டும் என்ற சுயநலத்தோடு வேண்டுகின்றனர். (சுயநலத்தை அறவே வெறுத்து ஒதுக்கி பொதுநலம் ஒன்றே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்த வள்ளலார், இரமண மகரிஷி, இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர். வேதாத்திரி மகரிஷி உட்பட சிலபல உண்மையான துறவிகள் இதில் விதிவிலக்கு. இவர்கள் போற்றப்படவேண்டியவர்கள்)
ஆனால் தமக்கு தேவைப்படும் நேரங்களில் அல்லது துன்பம் வரும் நேரங்களில் மட்டும்தான், கடவுளை நினைத்து வேண்டுவதும், வழிபாடு செய்வதுமாக இருப்பவர்களின் மனங்களில் முழுக்க முழுக்க சுயநலம் எனும் பேய் விஸ்வரூபமெடுதது ஆக்கிரமித்து ஆட்டுவிக்கிறது. அதாவது தமக்கு தாகம் எடுக்கும்போதோ அல்லது தண்ணீர் தேவைப்படும் போதுமட்டும் தண்ணீர் இருப்பது எப்படி நினைவுக்கு வந்து அதனை குடிப்பதோ அல்லது பயன்படுத்துகிறார் களோ அதேபோல் கடவுளையும் இவர்கள் பயன்படுத்துகிறார்கள் .அதனால் கடவுளை தண்ணீர் போல என்றேன்.
பெரியார் சுவாசம்:
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களோ பொதுநலன் ஒன்றே குறிக்கோளாக கொண்டு, மனிதனை மனிதன் ஜாதியின் பெயரைச் சொல்லி அடிமைப்படுத்துவது, பெண்களின் திறமைகளை அடுப்படியிலேயே முடக்கிப் போடுவது உட்பட பல சமூக சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு சமுதாயத்தில் நிலவிய ஏற்றத் தாழ்வுகளை அறவே நீக்க, தனது வாழ்நாளையே அர்ப்பணித்த மகா மனிதர் அவர். இவர் மேற்கொண்ட சீர்த்திருத்தங்களால் தான் இன்று தமிழ்நாடு, உலகிற்கே ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது. நாம் காலையில் கண் விழிதததும் ஐயோ எத்தனை முறை நாம் சுவாசிக்க வேண்டுமே என்று கவலைப்படுகிறோமா? இல்லைதானே. சுவாசம் என்பது தானாக நிகழ்வது. அதுபோலத்தான் பெரியாரை நாம் நினைக்க வில்லையென்றாலும் பெரியார் நம் சுவாசத்தோடு வாழ்ந்து கொண்டிருப்பவர். அதனால்தான் நான் பெரியாரை சுவாசம் என்றேன். பெரியார் மட்டுமல்ல. இவரைப் போல் மனித சமூகத்திற்கு நன்மைகள் செய்த அனைவருமே சுவாசம்தான்