அமெரிக்காவில் கோடீஸ்வரர் மரணத்தில் சதி என்ற பதிவை ரீட்வீட் செய்தார் அதிபர் டிரம்ப்!
12 Aug,2019
அமெரிக்காவில் பாலியல் புகாரில் சிக்கிய கோடீஸ்வரர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவரது மரணத்தில் முன்னாள் அதிபர் பில் கிளின்டனுக்கு தொடர்பு இருக்கிறது என்ற புகாரை அதிபர் டிரம்ப் டுவிட்டரில் மறுபதிவு செய்துள்ளார்.
சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய புகாரில் கைது செய்யப்பட்ட ஜெப்ரி எப்ஸ்டீன், சிறையில் இருந்த போது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் நிலையில், நகைச்சுவை நடிகர் டெரன்ஸ் வில்லியம்ஸ் டுவிட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அதில், முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் தொடர்பான தகவல் ஜெப்ரி எப்ஸ்டீனிடம் இருந்த நிலையில் அவர் உயிரிழந்திருப்பதாகவும், யார் இதை செய்திருப்பார் என்பது தெரியும் என்றும் கருத்து பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவை அதிபர் டிரம்ப் ரீட்வீட் செய்து இருக்கிறார். அரசியல்வாதிகள் மற்றும் ஹாலிவுட் திரைநட்சத்திரங்களுடன் நெருக்கமாக இருந்த ஜெப்ரி எப்ஸ்டீன் மரணத்தில், பில் கிளிண்டனை தொடர்புபடுத்தி குற்றச்சாட்டு எழுப்பி இருப்பதற்கு வலுசேர்க்கும் வகையில் டிரம்பின் செயல் அமைந்துள்ளது. எப்ஸ்டீனின் முன்னாள் நண்பரான டிரம்ப், கடந்த 15 ஆண்டுகளாக அவரிடம் பேசவில்லை என்று ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது