மின்சார செயலிழப்பு:இங்கிலாந்து வீடுகளும் போக்குவரத்தும் பாதிப்பு
10 Aug,2019
இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பெரும் பகுதிகளில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக போக்குவரத்தில் தடங்கல் ஏற்பட்டதுடன் வீடுகளில் மின்சாரம் தடைப்பட்டமையினாலும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு மின் ஜெனரேட்டர்கள் செயலிழந்தமை காரணமாக இந்நிலை ஏற்பட்டது என்றும் ஆனால் இப்போது பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது என நஷனல் கிரிட் பி.எல்.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலை காரணமாக மிட்லாண்ட், தென்கிழக்கு, தென்மேற்கு மற்றும் இங்கிலாந்தின் வடகிழக்கு மற்றும் வேல்ஸ் முழுவதும் நேற்று (வெள்ளிக்கிழமை) இருளில் மூழ்கின.
குறிப்பாக மின்வெட்டு காரணமாக ரயில்கள் தாமதமாகியது மட்டுமன்றி சில ரயில்கள் இரத்து செய்யப்பட்டதால் நூற்றுக்கணக்கான மக்கள் கிங்ஸ் கிரோஸ் நிலையத்தில் சிக்கிக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சில பகுதிகளில் போக்குவரத்து விளக்குகளும் வேலை செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த போக்குவரத்து திணைக்களம், குறித்த மின்வெட்டினால் போக்குவரத்து துறையில் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது என தெரிவித்துள்ளது.
மேலும் லண்டன் மற்றும் தென்கிழக்கில் 300,000 பேர் வீடுகளில் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து மின்சக்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்குப் பகுதியில் சுமார் 500,000 பேரும் வேல்ஸில் 44,500 பேரும் வடக்கில் 110,000 பேரும் வடமேற்கு பகுதியில் 26 ஆயிரம் பேரும் பாதிக்கக்ப்பட்டதாகவும் குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.