வீட்டு உரிமையாளரை வெட்டிக் கொன்ற பிரமுகர்..! காலிசெய்ய கூறியதால்
07 Aug,2019
வேலூர் மாவட்டம் சோளிங்கர் அருகே, வாடகைக்கு குடியிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பிரமுகரை, காலி செய்யச் சொன்ன வீட்டின் உரிமையாளர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் சோளிங்கர் அடுத்த சேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அதிமுக பிரமுகர் சேகர். இவர் தனக்கு சொந்தமான வீட்டின் ஒரு பகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைச்செயலாளராக இருந்த தனது நண்பர் புல்லட் மோகன் என்பவரை கடை வைத்துக் கொள்ள வாடகைக்கு விட்டுள்ளார்.
அந்த பகுதியில் மணல் கடத்தல், மணல் வண்டி மாமூல் வசூல் என இருவரும் ஒன்றாக சேர்ந்து பல வேலைகளைச் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில், வேலூர் தேர்தலில் இருவரும் சேர்ந்து ஒன்றாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். மோகன் சரிவர வாடகை கொடுக்காமல் இருந்துள்ளார்.இதனால் வீட்டுடன் கூடிய கடையை காலி செய்ய கூறியுள்ளார் சேகர் அவர் காலி செய்ய மறுத்து மிரட்டல் விடுத்துள்ளார்
இந்த நிலையில், இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புல்லட் மோகனை தீர்த்துக்கட்ட சேகர் கூலிப்படையினருடன் பேசி திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து உஷாரான புல்லட் மோகன், திங்கட்கிழமை காலையில் சேகரை வெட்டி கொலை செய்து விட்டு தலைமறைவானார்.
புல்லட் மோகன் தனது வழக்கறிஞர் உதவியுடன், ஆரணி சார்பு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட பின்னர், நீண்ட தூரம் ஓடிச்சென்று சரண் அடைந்ததால் புல்லட் மோகனால் வேகமாக நடக்க இயலாமல் மெதுவாக நடந்து சென்றதாகவும், ரவுடி மோகன் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு இந்த கொடூர கொலை சம்பவமும் ஒரு உதாரணம்..!