இங்கிலாந்து மகாராணியை கடற்கொள்ளைக்காரராக சித்தரித்து ஈரானில் கேலிச்சித்திரம்!
01 Aug,2019
இங்கிலாந்து மகாராணியை கடற்கொள்ளைக்காரராக சித்தரிக்கும் கேலி சித்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானிலுள்ள கலாசார மையத்தில் இங்கிலாந்து மகாராணி 2ஆம் எலிசபெத்தை கடற்கொள்ளைக்காரராக சித்தரிக்கும் கேலி சித்திரங்கள் இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தடையை மீறி சிரியாவுக்கு மசகு எண்ணெய் ஏற்றி சென்றதாக கூறி ஈரானுக்கு சொந்தமான சரக்கு கப்பலை ஜிப்ரால்டர் நீரிணைக்கு அருகே இங்கிலாந்து கடற்படை கைப்பற்றியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாரசீக வளைகுடாவில் ஹோர்முஷ் நீரிணைப் பகுதியில் சென்று கொண்டிருந்த இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படை சிறைபிடித்தது.
இந்த விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்த நிலையில், ஈரானின் எண்ணெய் கப்பலை கைப்பற்றிய இங்கிலாந்தை சாடும் விதமாக தலைநகர் தெஹ்ரானில் உள்ள கலாசார மையத்தில் ‘பைரேட்ஸ் ஒப் தி ராணி’ என்ற தலைப்பில் கேலி சித்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் இங்கிலாந்து மாகாராணி 2ஆம் எலிசபெத்தை கடற்கொள்ளைக்காரராக சித்தரிக்கும் 40 வகையான கேலி சித்திரங்கள் இவ்வாறு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஏராளமான மக்கள் இந்த காண்காட்சிக்கு வந்து, கேலி சித்திரங்களை பார்த்து இரசித்து செல்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.