பெண் எரித்து கொலை!
24 Jul,2019
திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகேயுள்ள வனப்பகுதியில் இளம்பெண் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டார்.
லால்குடிக்கு செல்லும் சாலையில் வனத்துறைக்கு சொந்தமான பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் முற்றிலும் எரிந்த நிலையில் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் அப்பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்தில் அந்த பெண் அணிந்திருந்த மஞ்சள் நிற சேலை பாதி எரிந்தும், எரியாமலும், கை விரல்களில் சில்வர் மோதிரங்கள் மற்றும் கழுத்தில் அம்மன் படம் பொருந்திய பித்தளை டாலரும், கால் விரல்களில் மெட்டியும் அணிந்திருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையான பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், கொலைக்கான காரணம் என்ன என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.