நெல்லையில் கொடூரமாகக் கொல்லப்பட்ட முன்னாள் பெண் மேயர்!
24 Jul,2019
நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன், பணிப்பெண் மாரி ஆகிய மூவரையும் மர்மக் கும்பல் கொலை செய்த சம்பவம், பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூரக் கொலைகுறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
நெல்லை மாநகராட்சியான பின்னர், 1996-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்று,
முதல் மேயராகப் பொறுப்பேற்றவர், உமா மகேஸ்வரி. தொடர்ந்து தி.மு.க-வில் தீவிரமாகப் பணியாற்றிவந்தார்.
உமா மகேஸ்வரியின் கணவர் முருக சங்கரன். நெடுஞ்சாலைத் துறையில் ஓய்வுபெற்ற பொறியாளர்.
உமா மகேஸ்வரி வீடு
இவர்களின் மகன், கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.
மகள் கார்த்திகா, நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றிவந்தார்.
அவரது வீட்டின் அருகில் உமா மகேஸ்வரி தனது கணவருடன் வசித்துவந்தார்.
இன்று மாலை வழக்கம்போல வீட்டில் இருந்தபோது, பயங்கர ஆயுதங்களுடன் அங்கு நுழைந்த கும்பல் ஒன்று உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன், பணிப்பெண் மாரி ஆகியோரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றது.
அதில் மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உருட்டுக்கட்டை, இரும்புக்கம்பி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் மூவரின் தலைகளில் தாக்கியுள்ளனர் கொலையாளிகள்.
மேலும், மூவரையும் தனித்தனி ரூமில் வைத்து கொலை செய்துள்ளனர்.
இந்தக் கொடூர கொலைச் சம்பவத்துக்குக் காரணம் யார்? என்பது உடனடியாகத் தெரியவில்லை.
முன்விரோதம் காரணமாகக் கொல்லப்பட்டாரா அல்லது சொத்து தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்ததா என்பது பற்றி மேலப்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.
சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வரழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் தீவிர சோதனை நடத்தினார்கள். ஆணையாளர் பாஸ்கரன், துணை ஆணையர் சரவரணன் உள்ளிட்ட அதிகாரிகள், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்கள்.
உமா மகேஸ்வரி, கட்சி நிகழ்ச்சிகள் அனைத்திலும் தவறாமல் பங்கேற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
கட்சிப் பணிகளில் மட்டும் அல்லாமல் பொது நிகழ்ச்சிகளிலும் அதிக ஆர்வத்துடன் பங்கேற்பதை வழக்கமாகக்கொண்டிருந்தார்.
வீணை இசையில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருந்த உமா மகேஸ்வரி, இசைக் கச்சேரிகளில் பங்கேற்றுவந்தார்.
சமீபத்தில், நெல்லையப்பர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத் திருவிழாவின்போதும் வீணை இசைக் கச்சேரி நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது