லண்டனிலிருந்து துருக்கி நோக்கிப் பறந்த விமானத்தில் குழப்பம் தரையிறக்க
24 Jun,2019
இங்கிலாந்திலிருந்து துருக்கியை நோக்கி பறந்துகொண்டிருந்த விமானத்தில் யுவதியொருவர் குழப்பம் ஏற்படுத்தியதால், விமானப்படை யுத்த விமானங்களின் பாதுகாப்புடன் அவ்விமானம் மீண்டும் இங்கிலாந்தின் ஸ்டன்ஸ்டட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
பிரிட்டனின் ‘ஜெட் 2.கொம் லிமிடெட்’ நிறுவனத்துக்கு சொந்தமான மேற்படி விமானம் லண்டன் ஸ்டன்ஸ்டட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து துருக்கியின் தலாமன் நகரை நோக்கி நேற்றுமுன்தினம் புறப்பட்டது.
அவ்விமானம் பறந்துகொண்டிருந்த வேளையில் பயணியான யுவதியொருவர், பயணிகளுக்கு முன்னால் வந்து ஆக்ரோஷமாக சத்தமிட்டதுடன், விமானியின் அறைக் கதவை நோக்கி ஓடினார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரை விமான ஊழியர்கள் பலர் சேர்ந்து மடக்கிப் பிடித்தனர்
இதற்கிடையில் விமானக் கடத்தல் எச்சரிக்கை கிடைத்ததால் பிரித்தானிய விமானப்படையின் இரு யுத்த விமானங்கள் விரைந்து சென்று, அவ்விமானத்தை மீண்டும் ஸ்டன்ஸ்டட் விமான நிலையத்தில் தரையிறங்கச் செய்தன.
அதன்பின் மேற்படி யுவதி கைது செய்யப்பட்டார். 25 வயதான அந்த யுவதி அதிக போதையில் இருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.