புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் சொத்தைச் சேர்ப்பதற்காக உழைக்கின்றது
13 Jun,2019
மேற்கு புலம்பெயர்ந்த தமிழ் சமூகமோ இதற்கு முரணானது. உழைப்பது நுகர்வதற்காகவல்ல. மாறாக சொத்தைச் சேர்ப்பதற்காக உழைக்கின்றது. சொத்துடமை கண்ணோட்டத்தில் வாழ்கின்றது. குழந்தைக்கு பெற்றோர் சொத்தைச் சேர்ப்பதும், குழந்தைகள் அதைப் பெறுவதற்காக பெற்றோரில் தங்கி வாழ்வதும் நடக்கின்றது. புலம்பெயர் தமிழ் சமூகத்தில் பெரும்பான்மையானவர்கள் அதிகுறைந்த சம்பளத்தை பெறும் தொழிலாளியாக இருந்த போதும், புலம்பெயர் தமிழ் சமூகம் சொத்துடமை கொண்ட வர்க்கமாக அல்லது அந்தக் கண்ணோட்டம் கொண்டோராகவே வாழ்கின்றனர்.
மேற்கில் உழைக்கும் வர்க்கம் நுகர்வாக்கக் கண்ணோட்டத்தில் தனியுடமையை அணுக, புலம்பெயர் சமூகம் இதற்கு முரணாக சொத்துடமைக் கண்ணோட்டத்தில் தனியுடமையை உள்வாங்கி வாழ்கின்றது.
இந்த அடிப்படை முரண் தான், சாதியை பரம்பரை கூறாக்குகின்றது. சொத்துடமையை மட்டும் குழந்தைக்கு கொடுப்பதில்லை, அதனுடன் சாதியையும் சேர்த்துக் கொடுக்கின்றது.
சாதி அடிப்படையில் சொத்துடமையை சாதிக்குள் பரிமாற்றுகின்ற, பரம்பரை அலகைக் கொண்டது. சொத்துடமையை பெறும் தனது சாதி வாரிசாக கருதி குழந்தைகளை வளர்க்கும் புலம்பெயர் சமூகம், குழந்தைகள் சொத்தைப் பெறும் தங்கள் சுயநலக் கண்ணோட்டத்தில் வளர்க்கப்படுகின்றனர். இந்தப் புள்ளியில் பெற்றோர் சாதியை குழந்தை மேல் இலகுவாக சுமத்திவிடுவதும் - குழந்தைகள் அதை கேள்வியின்றி மந்தைகள் போல் ஏற்றுக்கொள்வதும் நடக்கின்றது.
பெற்றோர்களால் பொத்திப் பொத்தி சேர்க்கும் பணத்தை குழந்தைகள் பெற வேண்டுமென்றால், சாதிக்குள்ளான சாதியத் திருமணங்களை குழந்தைகள் ஏற்றுக்கொள்வது தவிர்க்க முடியாத விதியாகின்றது. இதன் மூலம் சாதிய உறவே மனித உறவாகவும், பாலியல் உணர்வாகியும் விடுகின்றது.
மற்றவர்களுடன் போட்டி போட்டு தம்மை மேலானவராக முன்னிறுத்தும் சாதிய உணர்வு, நுகர்வாக்கச் சமூகத்தில் ஆடம்பரமான போட்டியாக மாறுகின்றது. ஆடம்பரத் திருமணங்களாக – போட்டிக் கொண்டாட்டமாகவும் சாதித் திருமணங்கள் இருப்பதால், ஆடம்பரத்தை விரும்பும் குழந்தைகள் தங்கள் கழுத்தை சாதிக்குள் நீட்டுவதற்கு பின்நிற்;பதில்லை.
இப்படி சாதி மற்றும் சாதிய - ஆணாதிக்க கலாச்சாரத்துக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வது, சொத்துடமையும் - ஆடம்பர நுகர்வாக்கமும் தான். இந்தப் பின்னணியில் தான் சாதிய சடங்குகளுக்குள்ளேயே, குழந்தைகளின் திருமணங்கள் அரங்கேறுகின்றது. ஏன், எதற்கு என்ற கேள்விகளின்றி பலியாடுகள் போல் தலையைக் கொடுக்கும் குழந்தைகள், பகுத்;தறிவற்றவராக இருப்பதே புலம்பெயர் தமிழ் சமூகத்தின் குடும்பங்களாக இருக்கின்றது.
பிறரில் இருந்து தங்களை நாகரீகமானவராக தங்களை முன்னிறுத்தி திரிகின்றவர்கள் சாதியமாக புளுத்துக்கிடக்கின்றனர். ஒற்றுமையைக் காண்பதற்கு அறிவு வேண்டும், அறிவில்லாத சமூகம் வேற்றுமையில், சாதி பார்த்து வாழ முனைகின்றது.
புலம்பெயர் பெற்றோரின் குழந்தைகள் சொத்துடமைக்கு அடிமைகளாக வாழ்வது என்பது, அவர்களின் எதிர்காலத்தையே சாதிக் குட்டைக்குள் சூனியமாக்கி விடுகின்றனர் என்பதே உண்மை. சொத்தைக் கொண்டு சாதிக்குள் மகிழ்ச்சியைக் காண துடிக்கும் சமூகத்தின் பொது அவலம் இது
Sriharan Sivasingarajah shared