தன்னை மோதியதில் கீழே வீழ்ந்து மயங்கிக் கிடந்தவரின் மயக்கம் தீரும் வரை அருகில் காவல்
06 Jun,2019
யாழ்.தென்மராட்சி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் நரியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளார்.
குறித்த விபத்தினால் அவர் சிறிது நேரம் வீதியில் மயங்கிக் கிடந்துள்ளார். இந்த நிலையில் அவர் மயக்கம் தெளிந்து எழுந்து செல்லும் வரை நரி அவ்விடத்தில் காவலுக்கு நின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தென்மராட்சி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் வடமராட்சியை சேர்ந்த உத்தியோகஸ்தர் ஒருவர் பணி முடிந்து மாலை சரசாலை துன்னாலை வீதியூடாக வீடு திரும்பியுள்ளார். அவர் பயிணத்த வீதி சன நடமாட்டம் குறைந்த வீதியாகும்.
குறித்த விபத்து தொடர்பில் விபத்துக்குள்ளானவர் தெரிவிக்கையில், “அலுவகத்திலிருந்து வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை திடீரென வீதிக்கு குறுக்காக ஓடிய நரியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகி சில நிமிடங்கள் மயக்கத்தில் கிடந்தேன்.
மயக்கம் தெளிந்து கண் விழித்து பார்த்த போது விபத்துக்கு காரணமான நரி அவ்விடத்தில் எனக்கருகில் நின்றது.
பின்னர் நான் காயங்களுடன் எழும்பி எனது மோட்டார் சைக்கிளை தூக்கி நிறுத்தி பயணிக்கும் வரை நரி அவ்விடத்தில் நின்று விட்டு காட்டுக்குள் ஓடியது” என தெரிவித்தார்.