வளர்ப்பு மகளை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 22 ஆண்டு சிறை -
05 Jun,2019
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் குயின்ஸ் நகரில் வசித்து வருபவர் சுக்ஜிந்தர்சிங். இவரது 2-வது மனைவி இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷம்தாய் அர்ஜூன் (வயது 55). இந்த தம்பதியருடன் சுக்ஜிந்தர்சிங்கின் முதல் மனைவிக்கு பிறந்த மகள் அஷ்தீப் கவுர் (9) ஒரே வீட்டில் வசித்து வந்தாள்.
இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு 19-ந் தேதி, சிறுமி அஷ்தீப் கவுர் வீட்டின் குளியலறையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டாள். அவள் குளிக்க சென்றபோது, குளியல் தொட்டிக்குள் தவறி விழுந்து இறந்ததாக ஷம்தாய் அர்ஜூன் கூறினார். ஆனால் அந்த சிறுமியை தண்ணீரில் மூழ்கடித்து, கொலை செய்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இதையடுத்து, ஷம்தாய் அர்ஜூனை போலீசார் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணையில் ஷம்தாய் அர்ஜூன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து இந்த வழக்கில் அவரை குற்றவாளி என கூறி குயின்ஸ் நகர கோர்ட்டு கடந்த மாதம் தீர்ப்பு அளித்தது.
இந்த நிலையில், ஷம்தாய் அர்ஜூனுக்கான தண்டனை விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது. சிறுமி அஷ்தீப் கவுர் கொல்லப்பட்டது நினைத்து கூட பார்க்க முடியாத கொடூரமான செயல் என குறிப்பிட்ட நீதிபதி, ஷம்தாய் அர்ஜூனுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.