அம்மா கொடுத்த விஷம் கலந்த பிஸ்கட்டை ஆசையாக உண்ட குழந்தை":
28 May,2019
இந்தியா, கோவை மாவட்டம் சரவணம்பட்டி கரட்டுமேட்டில் முருகன் கோவிலுக்கு அருகாமையிலுள்ள பாதையில் நேற்று காலை 6 மணியளவில், சுமார் 3 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை தலையில் காயத்துடன் சடலமாக கிடப்பதை பொதுமக்கள் அவதானித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள், சரவணம்பட்டி பொலிஸாரிற்கு தகவல் வழங்கியதையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் குழந்தையை காணவில்லை எனக்கூறி ஒரு பெண் அந்த பகுதியில் தேடிக்கொண்டு இருந்துள்ளார்.
இறந்து கிடந்த குழந்தையின் புகைப்படத்தை காண்பித்தபோது, இது தன்னுடைய குழந்தைதான் எனக் குறிப்பிட்டுள்ளார். உடனே அவளை குழந்தை சடலமாக கிடந்த பகுதிக்கு அழைத்துச்சென்று பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது குழந்தை தேவிஸ்ரீயை தனது கள்ளக்காதலன் தமிழ், பாட்டி வீட்டில் விட்டு வருவதாக கூறிச்சென்றார். பின்னர் அவரை காணவில்லை என்று கூறினாள். இதனால் அந்த பெண் மீது பொலிஸார் சந்தேகம் அடைந்தனர். இதைதொடர்ந்து பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
விசாரணையில் கள்ளக் காதலனுடன் சேர்ந்து குழந்தையை கொன்றதாக தாய் ரூபினி ஒப்புகொண்டாள். உடனே அவளை பொலிஸார் கைது செய்துள்ளனர். ரூபினி பொலிஸில் அளித்த திடுக்கிடும் தகவல்கள் பின்வருமாறு அமைந்தது,
மேட்டுப்பாளையம் வெள்ளியங்காடு பகுதியில் ரூபினி (வயது30) வசித்து வந்தாள். இவளுடைய கணவர் பால்ராஜ். சுமை தூக்கும் தொழிலாளி. இவர்களுடைய குழந்தை தேவிஸ்ரீ (3). கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். குழந்தை தேவிஸ்ரீ, தாயிடம் வசித்து வந்தாள்.
இந்நிலையில் சினிமா படப்பிடிப்பு குழுவுக்கு தொழிலாளர்களை சப்ளை செய்யும் தமிழ்(36) என்பவர் ரூபினியின் கைபேசிக்கு அடிக்கடி தொடர்பு கொண்டுள்ளார். அடையாளம் தெரியாத நபர் என்று கைபேசி இணைப்பை துண்டித்தாலும் தொடர்ந்து கைபேசியில் தொடர்பு கொண்டதால் ரூபினி பேசியுள்ளாள். தமிழ் ஆறுதல்கூறும் வகையில் பேசியதால், அவரது பேச்சில் மயங்கிய ரூபினி தனது நிலையை கூறியுள்ளாள். 3 மாத பழக்கம் நட்பாகி கள்ளக்காதலாக மாறியது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். தங்களது கள்ளக்காதலுக்கு குழந்தை இடையூறாக இருப்பதாக இருவரும் கருதினார்கள். இதைதொடர்ந்து அந்த பச்சிளம் குழந்தையை தீர்த்து கட்ட இருவரும் திட்டமிட்டனர்.
சம்பவத்தன்று சரவணம்பட்டி பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து குழந்தைக்கு பிஸ்கட்டில் விஷம் தடவி கொடுத்துள்ளனர். அந்த பிஸ்கட்டை தாய் ரூபினி குழந்தை தேவிஸ்ரீக்கு ஊட்டியதாகவும், குழந்தையும் பிஸ்கட்தானே என்று ஆசையுடன் சாப்பிட்டதாகவும். சிறிதுநேரத்தில் குழந்தை வாந்தி எடுத்து மயங்கி விழுந்து இறந்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், குழந்தை இறந்ததும், கள்ளக் காதலன் தமிழிடம் கொடுத்து எங்காவது கொண்டு வீசி விட்டு வருமாறு கூறியுள்ளாள். தமிழ், அந்த குழந்தையை கரட்டுமேடு பகுதியில் உள்ள புதரில் வீசிவிட்டு தலைமறைவாகிவிட்டார் என ரூபினி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், குற்றவாளியான கள்ளக்காதலன் தமிழை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வழங்கியுள்ளன