பயங்கரவாதிகள் பற்றி வெளியான தகவல்!
25 May,2019
இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் 41 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் ஊடக மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார் . இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் பொறுப்பில் உள்ள சில சந்தேகநபர்களின் வங்கிக் கணக்குகளே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.
குறித்த வங்கிக் கணக்குகளில் 134 மில்லியன் ரூபா பணம் வைப்பிலிருப்பதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இதில், 14 மில்லியன் ரூபா பணம் தற்பொழுது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் கொண்டுவரப் பட்டுள்ளது.
அத்துடன், 7 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் தொடர்பிலும் தற்பொழுது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.