இந்திய ஐ.எஸ். உறுப்பினர்களை வழிநடத்திய இலங்கை மென்பொறியியலாளர்
17 May,2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்டவர்களிற்கு தொழில்நுட்ப உதவிகள் உட்பட பல உதவிகளை வழங்கினார் என சந்தேகத்தின் கீழ் இலங்கையில் கைதுசெய்யப்பட்டுள்ள கணணிமென்பொறியியலாளர் ஆதில் அமீஸ் குஜராத்தை சேர்ந்த இரு ஐஎஸ் தீவிரவாதிகளை வழிநடத்தினார் என இந்திய அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர் எனடீஎன்ஏ இந்தியா செய்திவெளியிட்டுள்ளது.
குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
குஜராத்தில் கைதுசெய்யப்பட்ட இருவரில் ஒருவர் உபெட் அஹமட் மிர்சா என்ற சட்டத்தரணி என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் அவர் இலங்கையை சேர்ந்த ஆதில் அமீஸ் குறித்து தெரிவித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆதில் ஐஎஸ் அமைப்பின் வழிநடத்துனர் என சட் உரையாடல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் ஜிகாத் என்ற இலட்சியத்தை முன்னெடுக்க கூடியவர் அவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
உபெட்டின் உரையாடல்களை நாங்கள் பதிவு செய்துள்ளோம் அதில் அவர் ஆதில் அமீஸ் என்பவரின் பெயரை குறிப்பிடுகின்றார் என பயங்கரவாத தடுப்பு பிரிவின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அதில் அவர்கள் இந்திய பிரதமரை தமிழ்நாட்டில் கொலை செய்வது குறித்தும் இலங்கையில் தாக்குதல்களை மேற்கொள்வது குறித்தும் தற்பெருமை பேசிக்கொள்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து நாங்கள் மத்திய அரசாங்கத்தின் அதிகாரிகளிற்கு அறிவித்தோம்,இலங்கை புலனாய்வு அதிகாரிகளிற்கும் ஏனைய அதிகாரிகளிற்கும் அறிவித்தோம் என குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.