சனி பகவானின் அருள் பெறலாம்ஸ
11 May,2019
சனி பகவான் நீதிதேவன் என்று போற்றப்படுபவர். ஒருவரின் ஜாதகத்தில் சனி நல்ல இடத்தில் அமைந்திருப்பது மிக விசேஷம். அப்படியில்லாமல் ஜாதகத்தில் அவர் பகை, நீசம் பெற்றிருந்தால் அவரால் கிடைக்கக்கூடிய நற்பலன்கள் நமக்குக் கிடைக்காமல் போய்விடும்.
ஒருவருக்கு ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி நடைபெறும் காலங்களிலும், சனி தசை நடைபெறும் காலங்களிலும் சனீஸ்வரரைப் ப்ரீதி செய்வதற்காகப் பல எளிய பரிகாரங்களை நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். அவற்றில் சில பரிகாரங்களை அறிந்துகொள்வோம்.
சனிபகவானுக்கு உகந்த நாளான சனிக்கிழமை அன்று விரதம் கடைப்பிடித்தால், நீண்ட ஆயுளுடன் வாழலாம்.
சனிக்கிழமைகளில் சனிபகவானின் அதிபதியான மகாவிஷ்ணுவைப் பிரார்த்தித்து விஷ்ணு சஹஸ்ரநாமம் அல்லது அனுமன் சாலீஸா பாராயணம் செய்தால், எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம்.
சனிக்கிழமைகளில் வரும் மகா பிரதோஷ புண்ணிய தினத்தில், சிவாலயங்களில் வில்வ தளத்தால் அர்ச்சனை செய்து வழிபடுவது சிறந்த பரிகாரமாகும்.
ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வழிபட்டால் சனியின் பாதிப்புகள் குறையும்.
சங்கடஹர சதுர்த்தி தினத்தில், விநாயகருக்கு எட்டு சிதறு தேங்காய்களை உடைத்து, நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால், சனியின் பாதிப்புகள் குறையும்.
சனிபகவானின் தானியம் எள். அந்த எள் எண்ணெயில் (நல்லெண்ணெய்) அவருக்கு விளக்கு ஏற்றி வழிபடுவதால், நன்மைகள் பெருகும்.
சனீஸ்வரருக்கு எள்ளுச் சாதம் நைவேத்தியம் செய்து, அதில் காகத்துக்குக் கொஞ்சம் வைத்துவிட்டு, நாம் சாப்பிட்டால் நன்மைகள் பெருகும்.
நல்லெண்ணெய், உளுந்து, இரும்புச்சட்டி ஆகியவற்றை ஏழை, எளியோருக்குத் தானம் செய்யலாம். அதேபோல், சனி ஆதிக்கம் செலுத்தும் பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திர நாள்களில் அன்னதானம் செய்வது சிறப்பு.
நடக்க முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்தால், சனிபகவான் அருளால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.