அச்சிடப்பட்ட ரத்தக் குழாய்!
09 May,2019
மனித உடல் உறுப்புகளை, செயற்கையாக உருவாக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் நடக்கிறது. அதே வேளையில், முப்பரிமாண அச்சு இயந்திரங்களில் ஒரு வகையான முப்பரிமாண உயிரி அச்சு இயந்திரங்கள் மூலம் (3டி பயோ பிரின்டிங்) இதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றை 'அச்சிட்டு' எடுக்கும் முயற்சியும் நடந்து வருகிறது.இதில் பெரிய சவாலாக இருப்பது, சிக்கலான வலைப் பின்னல் போன்ற நுண்ணிய ரத்தக் குழாய்களை அச்சிடுவதுதான். அண்மையில் அமெரிக்காவை சேர்ந்த ரைஸ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில பல்கலைக்கழக விஞ்ஞானிகள், மனித நுரையீரலின் எளிய மாதிரியை உயிரி அச்சு இயந்திரம் மூலம் அச்சிட்டு எடுத்தனர். அதில் உள்ள செல்கள் அனைத்தும் துடிப்போடு இயங்கின. அதற்குக் காரணம், அதில் சில எளிய ரத்தக் குழாய்களும் அச்சிடப் பட்டிருந்ததுதான்.'நேச்சர்' இதழில் வெளியான இந்த மைல் கல் முன்னேற்றம், உறுப்பு தானத்திற்காக உலகெங்கும் காத்திருக்கும் பல்லாயிரக் கணக்கான நோயாளிகளுக்கு நம்பிக்கை தரும் செய்தி.