விண்கல்லில் தண்ணீர்!
09 May,2019
ஜப்பானிய விண்கலனான, 'ஹயபுசா' 2010ம் ஆண்டில், 'இடோகா' என்ற விண்கல்லின் மாதிரிகளை சேகரித்து, பூமிக்கு அனுப்பியது. அந்த மாதிரிகளை ஆராய்ந்து, விண்கற்களில் ஏதாவது புதிய உலோகங்கள், தாதுக்கள் இருக்கிறதா என்பதை ஆராய்வதும், பிரபஞ்சத்தில் கிரகங்கள் உருவான விதம் குறித்து அறிவதும் தான், அந்த ஆய்வின் நோக்கம்.ஆனால், இடோகா விண்கல் மாதிரிகளை ஆராய்ந்த, அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக் கழக விஞ்ஞானிகள், அந்த விண்கல்லில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்களை கண்டறிந்து, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.பூமியில் தண்ணீர் இருப்பதற்குக் காரணமே, பல கோடி ஆண்டுகளுக்கு முன், பல மைல் அகல முள்ள விண்கற்கள் தாக்கியதால் தான் என்று சொல்லும் விஞ்ஞானிகளும் உண்டு. இடோகாவில் இருப்பதாக சொல்லப்படும் தண்ணீர் தடயம், அந்தக் கருத்துக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.