சில மாதங்களுக்கு ஒரு முறை, என் தாயாரின் கொலை வழக்கை விசாரிக்கும் நபர்களுடன் அறையில் நான் உட்கார வேண்டியுள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்பு என் தாயாரை கைது செய்ய அவர் எங்கள் வீட்டுக்கு வந்தபோது, எங்கள் குடும்பத்தினர் முதன்முறையாக அவரை சந்தித்தோம்.
தேர்தல் நாளில் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் ஒருவரைப் பற்றி கேலியாக blog பதிவு ஒன்றை எனது தாயார் வெளியிட்டார். அவருடைய ஆதரவாளர்களில் ஒருவர் காவல்துறையில் புகார் செய்தார்.
எனவே புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர்கள் நடு இரவில் எங்கள் இல்லத்துக்கு வந்தனர். கைது செய்வதற்காக கையெழுத்து பெறப்பட்ட வாரண்ட் கொண்டு வந்தனர். சட்டவிரோதமாக கருத்து தெரிவித்த குற்றத்துக்காக கைது செய்வதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நான் உலகின் மறுபக்கத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். எனது தந்தையின் சட்டையை அணிந்தபடி 01:30 மணிக்கு விடுதலையாகி என் தாயார் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வரும் விடியோக்களை சிலர் எனக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர்.
சில மணி நேரம் கழித்து, அவர் திரும்பவும் ஆன்லைனில் சென்று, தாம் துன்புறுத்தப் பட்டது பற்றி தனது இணையதளத்தில் எழுதினார். பிரதமருக்கு உள்ள அச்சம் பற்றியும், தனது தோற்றம் பற்றியே கேலி செய்தும் அவர் எழுதினார்.
இப்போது, அன்றிரவு என் தாயாரை கைது செய்த அதே அதிகாரி தான், அவருடைய கொலை பற்றிய விசாரணைக்கும் பொறுப்பு வகிக்கிறார்.
``எல்லாம் ஒழுங்கீனமாக இருப்பதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். கொலைக்குத் தூண்டும் குழு உங்களைக் கைது செய்வதற்கு வீட்டுக்கு வரும்போது, முடியை பிடித்து இழுத்து, கோபத்தைக் காட்டும்போது, துணிகளை ஒழுங்குபடுத்துவது என்பது மனதில் தோன்றாது'' என்று அவர் எழுதினார்.
இப்போது, அன்றிரவு என் தாயாரை கைது செய்த அதே அதிகாரி தான், அவருடைய கொலை பற்றிய விசாரணைக்கும் பொறுப்பு வகிக்கிறார்.
என் தாயார் கொல்லப்பட்ட நாளன்று, அரசாங்க அமைச்சரின் வேண்டுகோளின் படி முடக்கி வைக்கப்பட்ட தனது வங்கிக் கணக்கை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதற்காக அவர் வங்கிக்குச் சென்றார்.
அவர் 53 வயதை எட்டியுள்ளார். 30 ஆண்டு கால பத்திரிகையாளர் அனுபவத்தில் உச்சத்தில் இருந்தார். அவருடைய கார் இருக்கையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அரை கிலோ டி.என்.டி. வெடிமருந்து பொருள், ரிமோட் மூலம் இயக்கி வெடிக்கச் செய்யப்பட்டது. இந்தக் கொலையை அரசின் ஆதரவாளர்கள் கொண்டாடினார்கள். துருக்கி - அமெரிக்க செய்தித் தாள் ஆசிரியர் ஹிரண்ட் டிங்க் சுட்டுக் கொலை செய்யப்பட்டதை சிலர் கொண்டாடியது என் நினைவுக்கு வந்தது.
நானே கொலைக்கு திட்டமிட்டதாக மற்றவர்கள் மறைமுகமாகக் குற்றஞ்சாட்டினர். அல்லது என் தாயாரே மனமுவந்து ஆபத்தை விலைக்கு வாங்கிக் கொண்டார் என்று கூறினார்கள். அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் ஃபோலே கடத்தி, சிரியாவில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டது பற்றி அவதூறு பரப்பியதைப் போலவே இதுவும் இருந்தது.
டாப்னே கேருவணா காலிஜியா கொலை
அக்டோபர் 2017: புலனாய்வுப் பத்திரிகையாளர் டாப்னே கேருவணா காலிஜியா கார் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலை சம்பவம் ``காட்டுமிராண்டித் தனமானது'' என்று பிரதமர் ஜோஷப் மஸ்கட் கூறினார். மால்டாவின் தலைவர்கள் காலிஜியாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளக் கூடாது என்று அவருடைய குடும்பத்தினர் தடுத்துவிட்டனர்.
டிசம்பர் 2017: மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கூலிப் படையினர் மூலம் கொலை நடந்ததா என்பது பற்றி அரசுத் தரப்பில் விசாரணை தொடங்கியது.
ஜூலை 2018: மால்டா அரசு நியமித்த மாஜிஸ்ட்ரேட் தலைமையிலான குழு, டாப்னே கேருவணா காலிஜியா கூறிய ஊழல் குற்றச்சாட்டில் இருந்து பிரதமர் மற்றும் அவரது மனைவியை விடுவித்தது.
ஆகஸ்ட் 2018: டாப்னே கேருவணா காலிஜியா கொலையை மால்டா அரசு தடுத்திருக்க முடியுமா என்பதை அறிவதற்காக, முழுமையான பொது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவருடைய குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்தக் கொலைகள் ஏன் இவ்வளவு முக்கியத்துவமானவை?
எங்களுடைய இழப்பில் தவித்துக் கொண்டிருந்தபோது ஐரோப்பிய அதிகாரிகள் மத்தியில் பேசிய எனது சகோதரர், ``உண்மைகளும், கருத்துகளும் தாராளமாக வெளியிடலாம், பத்திரிகையாளர்களின் தொழில் மூலம் நியாயமான சுதந்திரமான சமூகத்தை உருவாக்க வேண்டும்'' என்று கூறினார்.
``வசதி படைத்த மற்றும் அதிக அளவுக்கு தாக்குபிடிக்கும் சமூகங்களை அது உருவாக்கும். வேறு வகையில் கூறினால், தகுதியான வாழ்வுக்கு உரிய சமூகங்களை உருவாக்கும்.'''
எங்களுடைய தாயார் கொலை செய்யப்பட்ட பிறகு, எங்களுக்கு கிடைத்த ஒரே ஆறுதலாக இருந்தது அனைத்து தரப்பு மக்களிடம் இருந்தும் கிடைத்த ஆதரவு, பச்சாதாபம், சோகம் மற்றும் இரக்கம் ஆகியவை தான்.
நல்லவர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். அவர்களை நீ கண்டுபிடிக்க வேண்டும்
இது எனக்கு ஆச்சர்யம் தந்தது. ``நல்லவர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். அவர்களை நீ கண்டுபிடிக்க வேண்டும்'' என்று நண்பர் ஒருவர் ஒரு முறை கூறியது என் நினைவுக்கு வந்தது.
எல்லோரும் சமமான சட்டம், மனித உரிமைகள் மதிக்கப்படுதல், சுதந்திரமான, திறந்த மனதுடன் கூடிய சமூகத்தில் வாழ வேண்டும் என்ற ஆசை உலகெங்கும் மக்களிடம் உள்ளதுதான். ஆனால் ஆசைகள் அதிகம் இருக்கும் போது கஷ்டங்கள் வருகின்றன.
மனிதனுக்கு உள்ள நோய்களைப் போல, நம்முடன் எப்போதும் இருக்கும் கெட்டவர்கள் சிலர் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள் என்பதை நாம் உணரும் போதும், பெரும்பாலும் காலம் கடந்து விடுகிறது.
எனது தாயார் கொலை செய்யப்பட்ட பிறகு என் சகோதரர்களும், என் தந்தையும் நானும் எடுத்துக் கொண்டுள்ள பணிகள் பெரிதானவை. தாயாரின் கொலைக்கு நீதி, அவர் புலனாய்வு செய்த விஷயங்களுக்கு நீதி, இதுபோன்ற நிகழ்வு மறுபடி நடக்காதிருப்பதை உறுதி செய்தல் என உள்ளது.
மற்ற எதற்கும் செலவிட போதிய நேரம் கிடையாது.
தனது தாயின் கொலைக்கு நீதி கேட்கும் மேத்யூ மற்றும் அவரது சகோதரர் பால்
எங்கள் குடும்பத்துக்குள், மற்றவர்கள் விஷயத்தில், குறிப்பாக அதிகாரத்தில் இருப்பவர்கள் விஷயத்தில் பாரபட்சமான நிலையை பார்த்து எவ்வளவு பொறுமை காப்பது என்பது பற்றி சில நேரம் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கிறோம். அவர்களுடைய வெறுப்பு மனநிலை மற்றும் சோம்பேறித்தனம் பற்றி விமர்சனம் செய்யாமல் இருப்பது எங்களுக்கு கஷ்டமான விஷயமாக உள்ளது.
துருக்கி புலனாய்வுப் பத்திரிகையாளர் உகுர் மும்கு கார் வெடிகுண்டு மூலம் கொலை செய்யப்பட்ட போது அவருடைய பிள்ளைகளிடம் புலனாய்வு அதிகாரி ``எங்களால் எதுவும் செய்ய முடியாது, எங்களுக்கு எதிரே செங்கல் சுவர் இருக்கிறது'' என்று கூறி, புலனாய்வு செய்ய முடியாமைக்கு காவல் துறை தலைவர் மன்னிப்பு கேட்டுள்ளார். இதை அந்தப் பிள்ளைகள் தெரிவித்தனர். அதற்கு அவர்களுடைய தாயார், ``ஆகவே ஒரு செங்கலை அகற்றுங்கள், பிறகு இன்னொன்றை அகற்றுங்கள், சுவர் முழுக்க இடியும் வரை அகற்றுங்கள்'' என்று கூறியிருக்கிறார்.
எங்களுடைய தாயார் கொலை செய்யப்பட்டதில் இருந்து இதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.
என்ன நடந்தாலும், எங்களால் இயன்றதைச் செய்வது என்பதுதான் ஆரம்பத்தில் இருந்து என்னுடைய கொள்கையாக இருக்கிறது. இப்போது எங்களுடைய இலக்குகளைப் போல, அதற்கான வழிமுறைகளும் முக்கியமானவை என்று நான் நினைக்கிறேன்.
கலாச்சார மாற்றம் மற்றும் அரசாங்கம் தன் கடமையைச் செய்து, நீதி கிடைக்கச் செய்யும் எளிதான நடவடிக்கையின் மூலமாக சுதந்திரமாக கருத்துகள் தெரிவிப்பதற்கு அதிக மரியாதையை ஏற்படுத்தித் தருதல் ஆகியவற்றுக்கு நாங்கள் முயற்சிக்கிறோம்.
``சுதந்திரமற்ற நிலை'' என்ற நோயை அகற்றுவதற்கும், மனித உரிமைகள் குறித்து புதிய மரியாதையை உலகிற்கு கற்றுத் தருவதற்கும் பிறருடன் நாங்கள் கை கோர்த்துள்ளோம்.
பத்திரிகையாளர் கேருவணா காலிஜியாவின் கொலைக்கு நீதி கேட்கும் போராட்டம்
``சுதந்திரமான மனசாட்சி என்பதில் இருந்து சுதந்திரம் தொடங்குகிறது'' என்று எழுத்தாளர் யமீன் ரஷீத் கத்தியால் குத்தி கொலை செய்யப்படுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு எங்களிடம் கூறினார். 2017ல் மாலத்தீவில் தன்னுடைய வீட்டுக்கு வெளியே அவர் கொலை செய்யப்பட்டார்.
``மனதிற்கு அடிப்படை சுதந்திரம் இல்லாமல், மற்ற சுதந்திரங்களால் உங்களுக்கு என்ன கிடைத்துவிடும்?''
என்னுடைய தாயாரின் கொலையைப் போல, அவருடைய கொலையும் நமது நாடுகளில் சுதந்திர சிந்தனையாளர்களுக்கு மரியாதை கிடையாது என்று வெளிப்பட்டது.
சுதந்திரத்துக்கான போராட்டத்தில் தனித்து விடப்பட்டது, எங்களுடன் மட்டுமல்ல, கொலை செய்யப்பட்ட மற்றும் சிறை வைக்கப்பட்ட பத்திரிகையாளர்களின் குடும்பத்தினர், பெண் தோழிகள், ஆண் நண்பர்கள் மற்றும் இதர நண்பர்களும் உள்ளனர். இந்தப் பெரிய பொறுப்பு நம் தோள்களில் வந்து விழுந்துள்ளது. ஆனால் தனியாக நாங்கள் இதை எடுத்துச் செல்ல முடியாது. எல்லா இடங்களிலும் உள்ள நல்லவர்கள் எங்களுடன் சேர வேண்டும்.
உலக பத்திரிகை சுதந்திர தினம்
உலக பத்திரிகை சுதந்திர தினம் என்பது 1993ல் ஐ.நா.வால் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டு மே 3 ஆம் தேதி இது கடைபிடிக்கப்படுகிறது.
சரியான தகவல்கள் இல்லாத காலக்கட்டத்தில் இதழியலும் தேர்தல்களும் என்பது 2019 ஆம் ஆண்டுக்கான பேசு பொருளாக இருக்கிறது.
உலகெங்கும் உள்ள பத்திரிக்கை சுதந்திரத்தின் நிலை பற்றி மதிப்பீடு செய்தல், கொண்டாடுதல், பாதுகாப்பு அளித்தல் மற்றும் பணியின் போது உயிரிழந்த பத்திரிகையாளர்களுக்கு மரியாதை செலுத்துதல் ஆகியவை WPFD-ன் நோக்கமாக உள்ளது.
கடந்த ஆண்டு குறிவைத்து நடந்த கொலைகள், குண்டு வீச்சுத் தாக்குதல்கள் அல்லது சண்டையில் நடுவே சிக்கிய நிகழ்வுகளில் 95 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்று சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
என்னைப் போன்ற நிறைய பேர் இருப்பார்கள் என எனக்குத் தெரியும். சவூதியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜமால் காஷோக்ஜியை எல்லா பகுதிகளிலும் உள்ள மக்கள் நேசித்தார்கள் என்பது நினைவிருக்கிறது.
ஒரே ஒருவர் மட்டும் அவர் மீது வெறுப்பு கொண்டு கொலை செய்துவிட்டார்.
என்னுடைய தாயார் உள்பட, இந்தக் கொலைகள் அனைத்திலுமே, இதற்குப் பொறுப்பானவர்களை தண்டிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்கான அறிகுறிகள் இல்லை அல்லது குறைவான முயற்சிகளே எடுக்கிறார்கள் என்று தெரிகிறது.
ஜமால் கஷோக்ஜி கடந்த வருடம் அக்டோபர் மாதம் கொல்லப்பட்டார்
எனவே, முதலாவது செங்கலை அகற்றி நாங்கள் தொடங்கியிருக்கிறோம். மிகவும் முக்கியமான பத்திரிகையாளர் கொலையைத்தடுப்பதில் என்ன தவறு நடந்தது என்பதைக் கண்டறிய மால்டா பொது விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.
பிறகு அடுத்த செங்கலை நகர்த்த நாங்கள் முயற்சிப்போம்.
என் தாயார் உயிருடன் இருந்திருந்தால், இவ்வளவு தியாகம் செய்திருக்க வேண்டியிருந்திருக்காது என்று ஒவ்வொரு நாளும் நான் நினைக்கிறேன்.
காடிஜா இஸ்மாயிலோவா என்ற அஜெரி பத்திரிகையாளர் சிறையில் அடைக்கப்பட்டதை, ``மூர்க்கத்தனமான'' நடவடிக்கை என மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளன. ``நாம் உண்மையிலேயே நேசித்தால், நம் நேசத்துக்கு உரியவர்கள் அவர்களாகவே இருந்திருக்க வேண்டும் என விரும்புகிறோம். டாப்னே அப்படித்தான் இருந்தார் - போராளி மற்றும் ஹீரோவாக'' என்று அவர் கூறியுள்ளார்.
மால்டாவிலும், அதைக் கடந்தும் ஆயிரக்கணக்கான ஹீரோயிசங்களை தன்னுடைய மரணம் உருவாக்கிவிட்டது என்பதை என் தாயார் ஒருபோதும் அறிய வாய்ப்பில்லை.
இந்த ஒவ்வொரு செயல்பாடும், ஏதாவது ஒரு வகையில், என் தாயாரைப் போன்ற முடிவு ஏற்படாமல் தைரியமான பத்திரிகையாளர்களைக் காப்பாற்றியுள்ளது என தெரிவிக்க விரும்புகிறேன்