தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பீ.சிவதீபன் மீது குற்றம்சாட்டியுள்ள ஜேர்மனி
12 Apr,2019
இலங்கை இராணுவத்தின் 15 பேரை படுகொலை செய்தததாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு எதிராக ஜேர்மனில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
போர்க்குற்றம், மனிதப் படுகொலை மற்றும் தீவிரவாத அமைப்பின் உறுப்பினராக இருந்தமை உட்பட அவருக்கு எதிராக மேலும் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
2008 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளினால் 15 இராணுவத்தினர் படுகொலை செய்யப்பட்டு, அவர்களின் சடலங்கள் எரிக்கப்பட்டிருந்ததாக ஜேர்மன் அதிகாரிகள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், மற்றுமொரு சந்தர்ப்பத்தில், அவரினால் 13 இராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதில் இருவர் பலியாகினர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
37 வயதுடைய பீ.சிவதீபன் என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் பின்னர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்க ஜேர்மன் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் என அந்த ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.