முதன் முதலில் நிலவில் மனிதர்களை இறக்கி வரலாறு படைத்த அமெரிக்கா, மீண்டும் அங்கு விண்வெளி வீரர்களை அனுப்பத் திட்டமிட்டிருக்கிறது.
இதுதொடர்பாக சமீபத்தில் பேசிய அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் மீண்டும் நிலவில் காலடி பதிப்பார்கள், அவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவார் என்றார்.
அலபாமாவின் ஹன்ட்ஸ்வில்லியில் நடைபெற்ற நிகழ்வில் அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், ‘‘அமெரிக்க விண்வெளி வீரர்களை ஐந்து ஆண்டுகளுக்குள் மறுபடி நிலவுக்கு அனுப்புவது அமெரிக்காவின் தேசியக் கொள்கை’’ என்றார்.
‘‘நிலவில் காலடி பதிக்கப் போகும் முதல் பெண்ணும், அடுத்த மனிதர்களும் அமெரிக்கர்களாக இருப்பார்கள். அவர்கள் அமெரிக்க மண்ணில் இருந்து, அமெரிக்க ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள்’’ என்றார் மைக்.
அமெரிக்காவின் அப்போலோ 17 விண்கலத்தின் மூலம் கடைசியாக 1972-ல் நிலவுக்கு வீரர்கள் அனுப்பப்பட்டனர்.
அதன்பின் அரை நூற்றாண்டு கழித்து, மீண்டும் நிலவுக்கு வருகிற 2028-ம் ஆண்டில் மனிதர்களை அனுப்பத் திட்டமிடப்பட்டது.
ஆனால் அந்தத் திட்டத்தில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. அதற்கு நிலவுக்கு வீரர்களை அனுப்புவதற்காக பெரிய ராக்கெட்டை உருவாக்குவதில் ஏற்பட்ட பிரச்சினை போன்றவை காரணம். இதற்கிடையில், நிலவுக்கு வீரர்களை அனுப்பும் திட்டம் வருகிற 2021-ம் ஆண்டுக்கு முன்தள்ளப்பட்டது.
இந்நிலையில்தான் அமெரிக்க துணை ஜனாதிபதி மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
நிலவில் மனிதன் பதித்த சிறு காலடி, மனிதகுலத்தின் பெருந்தாவலாகக் கருதப்படும் நிலையில், ‘‘அடுத்த பெருந் தாவலை நிகழ்த்த நாம் தயாராக வேண்டிய நேரம் இது. அந்தப் பெருந்தாவல், நிலவுக்கு மீண்டும் ஐந்தாண்டு காலத்துக்குள் அமெரிக்க விண்வெளி வீரர்களை அனுப்புவது. அத்துடன், நிலவில் நிரந்தர மனிதக் குடியிருப்பை அமைப் பதும், செவ்வாய்க்கு வீரர்களை அனுப்பு வதும் நமது நோக்கம்’’ என்றார் மைக்.
நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்புவதில் ஏற்பட்டிருக்கும் தாமதம் குறித்து மைக் கூறுகையில், ‘‘அதிகார வர்க்கத்தின், மாற்றத்தை ஏற்காத தன்மையும், தொடர் அலசல்களால் ஏற்பட்ட முடக்கமும்தான் இந்நிலைக்குக் காரணம்’’ என்றார். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’வின் மனோபாவம் மாற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நிலவுக்கு வீரர்களை அனுப்புவதற்கு குறிப்பிட்ட காலத்துக்குள் ‘நாசா’ தயாராகாவிட்டால், வர்த்தக ரீதியான ராக்கெட் பயன்படுத்திக்கொள்ளப்படும் என்றும் மைக் பென்ஸ் எச்சரித்தார்.
நிலவுக்கு நிச்சயமாக ஒரு பெண் அனுப்பி வைக்கப்படுவார் என, நாசா தலைவர் ஜிம் பிரிடென்ஸ்டைன் சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.