அமெரிக்காவில் கடையில் இருந்து மலை பாம்பை திருடி பேன்ட்டில் மறைத்து வைத்து கடத்திய நபர்
02 Apr,2019
துணிக்கடை, நகை கடை போன்ற கடைகளுக்கு செல்லும் சிலர் அங்குள்ள பொருட்களை யாருக்கும் தெரியாமல் திருடி தங்களது உடைமைகளுக்குள் மறைத்து வைத்து கொண்டு சென்று விடுவர். கடைகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களின் வழியே இவை தெரிந்து விடும். இதுபோன்று இல்லாமல் நபரொருவர் மலை பாம்பினை திருடி பேன்டிற்குள் மறைத்து கடத்தி சென்றுள்ளது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் மிச்சிகன் நகரில் ஐ லவ் மை பெட்ஸ் என்ற வளர்ப்பு பிராணிகளுக்கான கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு வந்த ஒரு நபர் அங்கிருந்த கூண்டில் இருந்து பைத்தான் வகை மலை பாம்பு ஒன்றை திருடி தனது பேன்ட்டில் மறைத்து வைத்து உள்ளார்.
அதன்பின் சிறிதுநேரம் அங்கிருந்த அவர் வேறு எதுவும் வாங்காமல் பாம்பினை கடத்தி கொண்டு சென்று விட்டார். இதுபற்றிய சி.சி.டி.வி. காட்சி சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அந்நபரை பற்றி தெரிந்தவர்கள் அல்லது அவரை அறிந்தவர்கள் போலீசாரிடம் தெரிவிக்கும்படி கூறப்பட்டு உள்ளது.
இது விஷமற்ற வகையை சேர்ந்தது. அதனால் கடந்த காலங்களில் அரசர்கள் இந்த வகை பாம்பினை நகை அணிவது போன்று தங்களின் மேல் அணிந்து கொள்வது வழக்கம். இதனால் இந்த வகை மலை பாம்பு ராயல் பைத்தான் என அழைக்கப்படுகிறது.