மன்னார் புதைகுழி பற்றிய மர்மத்தை துலக்கும் என்ற நம்பிக்கையைச் சிதைத்து விட்டிருக்கிறது அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பீட்டா ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படும் காபன் பரிசோதனை அறிக்கை.
மன்னார் நகர நுழைவாயிலில் கண்டு பிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழியில் இருந்து 150 நாட்களுக்கு மேலாக நடத்தப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, 330இற்கும் அதிகமான எலும்புக்கூடுகள் முழுமையாகக் கண்டு பிடிக்கப்பட்டன. அவற்றில் 29 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையவை.
இந்த புதைகுழியில் எப்போது, யாரால் சடலங்கள் புதைக்கப்பட்டன என்ற கேள்விக்கான பதில், பல மாதங்களாக கிடைக்காமல் இருந்து வந்தது.
இந்தப் புதைகுழியில் எலும்புக்கூடுகள் தவிர்ந்த வேறு தடயப் பொருட்களும் அவ்வளவாகக் கிடைக்கவில்லை. குறிப்பிட்ட சில தடயப் பொருட்கள் தான் கிடைத்தன. ஆடைகள் எதுவும் கிடைத்திருக்கவில்லை.
2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த, சுமார் 30 ஆண்டு காலப் போரில், பல்லாயிரக் கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டிருந்த நிலையில், இந்தப் புதைகுழி பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியிருந்தது.
போரின் இறுதிக்கட்டத்தில், படையினரிடம் சரணடைந்தவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் ஆழமாக தோண்டப்பட்ட குழியிலும், நீருக்குள்ளேயும், அதன் சுற்றுப் புறங்களிலும், பெரும்பாலும் ஆடைகள் அற்ற நிலையில், அல்லது ஒற்றை ஆடையுடன், இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த படங்களும் கூட வெளியாகியிருந்தன.
இவ்வாறான நிலையில் மன்னார் புதைகுழி, 2009இல் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் புதைக்கப்பட்ட இடமாக இருக்கலாம் என்ற பலமான நம்பிக்கை காணப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மத்தியில் இத்தகைய வலுவான சந்தேகங்கள் இருந்தன. இவை தவிர, அதற்கு முன்னதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் என்றும் சந்தேகம் கிளப்பப்பட்டது.
ஏன், இது புலிகளால் புதைக்கப்பட்டதாக இருக்கக்கூடாதா, இந்தியப் படையினரால் புதைக்கப்பட்டதாக இருக்கக் கூடாதா என்று கேள்வி எழுப்பியவர்களும் இருந்தனர்.
ஆனால் , எந்தவொரு காலத்திலும், புதைகுழி அமைந்திருந்த பிரதேசம் புலிகளின் நிரந்தர கட்டுப்பாட்டில் இருந்ததில்லை. போர்க்காலத்தில் கிட்டத்தட்ட முழுமையான காலத்திலும், புதைகுழிப் பிரதேசம் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் தான் இருந்தது.
எனவே , இதற்கு இராணுவம் தான் பதில் கூற வேண்டும் என்ற கோஷம் வலுவாக எதிரொலித்தது. இதனை மறுப்பதில் இலங்கை இராணுவம் சிக்கல்களையும் எதிர்நோக்கியிருந்தது.
அதனால் தான், காபன் பரிசோதனை அறிக்கை வெளியானதும், ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, அமெரிக்க ஆய்வகத்தின் அறிக்கை வெளியானதும், இராணுவத்தின் மீது குற்றம்சாட்டியவர்கள் வாயடைத்துப் போய் அமைதியாக இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார்.
இந்தப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அது எந்தக் காலத்தில் புதைக்கப்பட்டது என்று கண்டறிய வேண்டிய தேவை எழுந்தது. அதன் அடிப்படையில் தான் புலனாய்வுகளை ஆரம்பிக்க முடியும்.
எலும்பு மாதிரிகளை மரபணுச் சோதனைகளுக்கு உட்படுத்தி, அவற்றின் காலத்தைக் கணிக்கும் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு இந்தியாவிலும் வசதிகள் இருந்தன. ஆனால், இந்தியாவின் பரிசோதனை தவிர்க்கப்பட்டது.
அமெரிக்காவில் மேற்கொள்ளப்படும் காபன் பரிசோதனையின் மூலம், துல்லியமாக காலத்தைக் கணிக்கலாம். அதாவது. எந்த தசாப்தத்துக்குள் அவை புதைக்கப்பட்டன என்பதை சரியாக கணிக்க முடியும் என்று கருதப்பட்டது.
அதன் அடிப்படையில் தான் புளோரிடாவில் உள்ள ஆய்வகத்துக்கு 6 எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அனுப்பப்பட்டன. அந்தப் பரிசோதனை அறிக்கையின் படி, எலும்புக்கூடுகள், குறைந்தபட்சம் 300 ஆண்டுகளுக்கும் அதிகபட்சமாக 500 ஆண்டுகளுக்கும் முற்பட்டவை என கணிக்கப்பட்டிருக்கிறது.
கி.பி. 1499ஆம் ஆண்டுக்கும், 1720 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், இந்த எலும்புக்கூடுகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று காபன் ஆய்வு அறிக்கை கூறியிருக்கிறது.
இந்தக் காலகட்டமானது, போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர் இலங்கையில் கால் வைப்பதற்கு முற்பட்ட மற்றும் அவர்களின் ஆட்சிக்காலத்தை உள்ளடக்கியது.
இந்தக் காலகட்டத்தில் கட்டாய மதமாற்றங்களும், அதற்கு எதிரான போர்களும் நிகழ்ந்தன. அதைவிட, இறந்தவர்களின் சடலங்களை புதைக்கின்ற வழக்கம் கூட இந்தக் காலத்தில் தான் தோன்றியிருக்கக் கூடும்.
இந்தப் புதைகுழி தோண்டப்பட்ட போது, அதற்குப் பொறுப்பாக இருந்த சட்ட வைத்திய அதிகாரி, புதைகுழியின் ஒரு பகுதியில் சடலங்கள் ஒழுங்கான முறையில் – வரிசையாக, புதைக்கப்பட்டிருந்தன என்றும், இன்னொரு பகுதியில், சடலங்கள் ஒன்றின் மீது ஒன்றாக, ஒழுங்கற்ற முறையில் புதைக்கப்பட்டிருந்தன என்றும் கூறியிருந்தார்.
இதன்மூலம், அந்தப் பகுதியின் ஒரு இடத்தில் இடுகாடு இருந்திருக்கலாம் என்றும், இன்னொரு பகுதியில் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் ஒன்றாகப் போட்டுப் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஊகிக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில், காபன் ஆய்வு அறிக்கை, இந்தப் புதைகுழிக்கும், கடந்த 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த போரின் போது, இரகசியமாகப் புதைக்கப்பட்டவர்களுக்கும் தொடர்பு இல்லை என்று கூறும் நிலையை உருவாக்கியிருக்கிறது.
ஆனால், இதனை ஏற்றுக்கொள்வதற்கு தமிழர் தரப்பு – குறிப்பாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தயாராக இல்லை.
இந்த புதைகுழி எலும்பு மாதிரிகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட பின்னர், தமிழர்களுக்கும் அதிர்ச்சி ஏற்படலாம் என்று பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியிருந்தார். இந்தப் புதைகுழியின் காலம் தொடர்பாக அவருக்குக் கிடைத்த தகவல்களின் காரணமாகவே, அவர் அவ்வாறு கூறியிருக்கக் கூடும்.
ஆனால், பாதிக்கப்பட்ட மக்களோ, அமெரிக்க ஆய்வகத்தின் அறிக்கை மீது சந்தேகங்களை எழுப்புகின்றனர். எலும்புக்கூடுகளுடன் மீட்கப்பட்ட சில தடயப் பொருட்கள், எவ்வாறு பல நூற்றாண்டுகளாக அழியாமல் இருந்தன என்ற கேள்வி அதில் ஒன்று.
பிஸ்கட் பொதி செய்யப்பட்ட பொலித்தீன் எப்படி, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அங்கு வந்தது என்பது இன்னொரு கேள்வி.
இவ்வாறான பல சந்தேகங்கள் இருக்கும் நிலையிலேயே, மன்னார் புதைகுழி எலும்புக்கூடுகளை இரண்டாவது பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை வலுத்திருக்கிறது.
மன்னார் புதைகுழியை நேரில் பார்வையிட்டிருந்த, இந்திய தடயவியல் நிபுணர் ஒருவர், இந்தப் புதைகுழி அரை நூற்றாண்டுக்கு உட்பட்டது தான் என்று கூறியிருக்கிறார். அவர், புளோரிடாவில் பெறப்பட்ட காபன் அறிக்கையையும் ஜெனீவாவில் நிராகரித்து கருத்து வெளியிட்டிருக்கிறார்.
இவையெல்லாம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மத்தியில் குழப்பத்தையும் கேள்விகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மிகவும் நொந்து போய், விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்கள். அவர்களின் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டு குறைந்தது 10 ஆண்டுகளாகி விட்டன இன்னும் பலர், 20, 30 ஆண்டுகளாக கூட காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ற அடையாளத்துடள் இருக்கிறார்கள்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளில் ஒரு பகுதியினர் தமது உறவுகள் இன்னமும் எங்காவது உயிருடன் மறைத்து – தடுத்து வைத்திருக்கப்பட்டிருக்கலாம் என்று நம்புகிறார்கள். ஜோதிடர்கள் அவர்களின் நம்பிக்கையை பலப்படுத்தி வருகிறார்கள். இவர்களைப் பொறுத்தவரையில், புதைகுழி மீது நம்பிக்கையில்லை. தமது பிள்ளையை காட்ட வேண்டும், விடுவிக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை.
இன்னொரு பகுதியினருக்கு, காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவு திரும்பி வரப் போவதில்லை என்றும், அவர்கள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்றும், நன்றாகவே தெரியும். அவர்களைப் பொறுத்தவரை, தமது உறவுக்கு என்ன நடந்தது என்று தெரிய வேண்டும். என்னவானார் என்று அறிய வேண்டும்.
அவர்கள் எங்காவது ஒரு புதைகுழியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்புகிறார்கள். அவர்கள் தான், மன்னார் புதைகுழியில் தமது உறவு இருக்கலாமோ என்ற ஆதங்கம் கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு, புளோரிடா ஆய்வகத்தின் காபன் அறிக்கை திருப்தியைத் தரவில்லை. ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது. தம்மை எல்லோரும் சேர்ந்து ஏமாற்றுகிறார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பாதிக்கப்பட்டவர்களை, விசாரணைகளின் மூலம் திருப்திப்படுத்த வேண்டியது, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரதும் பொறுப்பு. இதனால் தான், இரண்டாவது பரிசோதனை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது. அது நியாயமானதும் கூட.
ஒரு நோய் தொடர்பாகவே, ஒரு மருத்துவரின் முடிவுக்கு அப்பால் இன்னொரு மருத்துவரின் கருத்தையும் பெற்றுக்கொள்ளும் போது, பல ஆயிரக்கணக்கானோரின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இரண்டாவது பரிசோதனையை முன்னெடுப்பதில் தவறில்லை.
அதேவேளை, காபன் அறிக்கை வெளியானதும் இந்தப் புதைகுழி, நல்லூர் மன்னன் பரராஜசேகரனால், மதம் மாறியதற்காக கொல்லப்பட்டவர்கள் என்று பௌத்த பிக்குகள் சிலர் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள். இது குழப்பத்தை ஏற்படுத்தும் யுக்தியாகவே பார்க்கப்படுகிறது,
புதைகுழி எந்தக் காலகட்டத்துக்குரியது, என்பதை உறுதியாகக் கண்டறிந்து வெளிப்படுத்தாத வரையில் இதுபோன்ற பல குழப்பங்களும், வரலாற்றுப் புரட்டுகள், திரிபுகளும் நீடிக்கப் போகின்றன .
இந்த நிலையில், இதனை அரசியலாக்குவதற்கு அப்பால், பாதிக்கப்பட்ட மக்களின் நிலையில் இருந்து அணுக முற்படுவது தான் முக்கியமானது. அதனை தமிழ் அரசியல் தரப்புகள் அனைத்தும் புரிந்து கொள்ள வேண்டும்.