விமானக் கட்டணம் உயர்வு – எத்தியோப்பியா விபத்தால் வந்த புது சிக்கல் !
18 Mar,2019
சமீபத்தில் நடந்த போயிங்க் 737 மேக்ஸ் 8 விமான விபத்தால் அந்த வகை விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டதை அடுத்து விமானக் கட்டணங்கள் வெகுவாக உயர்ந்துள்ளன.
கடந்த மார்ச் 10 ஆம் தேதி எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு உள்ளூர் நேரப்படி மணி 8.44க்கு (கிளம்பிய போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் (ET302) புறப்பட்ட 6 நிமிடத்தில் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், எட்டு விமானப் பயணிகள் உள்பட விமானத்தில் இருந்த 157 பேரும் உயிரிழந்தனர். இதே ரக விமானம் சில மாதங்களுக்கு முன்னர் இந்தியோனீசியா அருகே கடலில் விழுந்து நொறுங்கி 190 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் சிக்கனத்திற்காக இந்த ரக விமானங்களில் எஞ்சினை இடமாற்றம் செய்ததால் பறக்கும்போது சமநிலைத் தவறியதால் இந்த விமான விபத்து நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் இந்த ரக விமானங்களுக்கு உலகநாடுகள் சில தடை விதித்துள்ளன. அதில் இந்தியாவும் ஒரு நாடு. இதனால் திடீரென விமானக் கட்டணங்கள் அதிகளவில் உயர்ந்துள்ளன.
இந்த கட்டண உயர்வுய் குறித்து யாத்ரா நிறுவனம் தெரிவித்துள்ள செய்திக் குறிப்பில் ‘போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களுக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விதித்துள்ள தடையால் குறிப்பிட்ட சில வழித்தடங்களில் விமானக் கட்டணங்கள் உயர்ந்துள்ளன. ஏற்கெனவே ஒட்டுமொத்த விமானக் கட்டணங்கள் 15 முதல் 20 சதவிகிதம் வரையில் உயர்ந்துள்ளது. தற்போதைய சூழலில், விமானப் பயணிகளின் வருகை உயர்வு மற்றும் விமானங்களின் எண்ணிக்கை குறைவு காரணமாக வரும் நாட்களில் குறுகிய கால அளவில் விமானக் கட்டணங்கள் மேலும் உயரும் என எதிர்பார்க்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளது.